திங்கள், 5 ஜூன், 2017

நீதிபதி கர்ணன் விவகாரம் : ராகுல் காந்தி தலையிட கோரிக்கை!

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று (ஜூன் 4 ) தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தார்.
நீதிபதி கர்ணன் விவகாரம் : ராகுல் காந்தி தலையிட கோரிக்கை!அப்போது கட்சியின் நிர்வாகிகளை சந்தித்துப் பேசியவர் அதன் பிறகு அம்பேத்கர் இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த தலித் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், வழக்கறிஞர்களையும் பிரத்யேகமாக சந்தித்துப் பேசினார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி.எஸ்.டி. பிரிவுத் தலைவரான செல்வப்பெருந்தகை ஏற்பாட்டில் நடந்த இந்த சந்திப்பில் தமிழகத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட தலித் அமைப்புகள் மற்றும் வழக்கறிஞர்கள் ராகுல் காந்தியை சந்தித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் பெஞ்ச் எடுத்த நடவடிக்கை விவகாரத்தில் தலையிடுமாறு மனு கொடுத்தனர்.

புரட்சித் தமிழகம் அமைப்பின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி, விடுதலைத் தமிழ் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் உள்ளிட்டோர் ராகுல் காந்தியை சந்தித்தனர். அப்போது ஏர்போர்ட் மூர்த்தியை ராகுல் காந்திக்கு அறிமுகம் செய்துவைக்கும்போது, ‘வாட் மீனிங் ஃபார் ஏர்போர்ட்’ என்று பெயருக்கு முன் ஏர்போர்ட் என்று சொல்லப்படுவதன் காரணம் கேட்டார் ராகுல். அதை விளக்கியவுடன், ‘ஓ...நீங்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ரன்வே ஆக அல்லவா செயல்பட வேண்டும்?” என்று கமெண்ட் அடித்தார் ராகுல் காந்தி.
பின் நீதிபதி கர்ணன் விவகாரம் தொடர்பாக கொடுக்கப்பட்ட மனுவை படித்து, இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்.
அம்பேத்கர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ராகுல் காந்தியை சந்தித்தவர்களில் ஒருவரான நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ் குமாரிடம் பேசினோம்.
’’உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றால்... நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால்தான் முடியும். ஆனால் நாடாளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் உச்சநீதிமன்றமே நீதிபதி கர்ணனுக்கு தண்டனை விதித்திருக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு முரணானது. நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது. எனவே இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி என்ற வகையில் காங்கிரஸ் கட்சி தலையிட்டிருக்க வேண்டும். இதுவரை இல்லாவிடினும் இனிமேலாவது தலையிட வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் கோரினேன். இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசுவதாகவும், விரைவில் தன்னை டெல்லி வந்து இந்த விவகாரம் பற்றிய முழு விவகாரங்களுடன் சந்தியுங்கள் என்றும் ராகுல் கூறினார்’’ என்றார் பீட்டர் ரமேஷ் குமார்.
நீதிபதி கர்ணன் விவகாரத்தைக் கையிலெடுத்தால் உச்சநீதிமன்றத்தின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டி வருமோ என்று காங்கிரஸ் நினைப்பதாகவும் கட்சிக்குள்ளேயே ஒரு பேச்சு இருக்கிறது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: