சனி, 10 ஜூன், 2017

மெரினா புரட்சி போல தஞ்சை பெரிய கோயில் புரட்சி?


மெரினா புரட்சி போல தஞ்சை பெரிய கோயில் புரட்சி?

கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் ஒன்று திரண்டு நடத்திய புரட்சியை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. ஒருவாரத்துக்கும் மேல் மெரினாவில் எந்த தலைமையும் இல்லாமல் திரண்டு மாணவர்கள்நடத்திய போராட்டம் தமிழகம் முழுதும் பரவியது. இதையடுத்து தமிழக அரசும் மத்திய அரசும் ஆலோசித்து ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது,.
இந்நிலையில் இதேபோன்ற ஒரு போராட்டத்தை தஞ்சை பெரியகோவிலில் நடத்த முயல்வதாக ஒரு தகவல் போலீசாருக்கு கிடைக்க... தஞ்சை முழுதும் இன்று ஜூன் 10 ஆம் தேதி பரபரப்பு கிளம்பியது. பெரிய கோவில் வாசலில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் மறைமுகமாக தொடர்ந்து நடப்பதாக விவசாய பிரதிநிதிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இன்னும் மீத்தேன் அபாயம் முழுதாக நீங்கவில்லை என்பதே அவர்களின் குற்றசாட்டு. மேலும் மத்திய அரசின் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. சார்பில் எரிவாயு எடுப்பதற்கும் பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் போடப்பட்டிருக்கின்றன. இவற்றால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கதிராமங்களம் உள்ளிட்ட பல கிராமங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதையெல்லாம் ஒருங்கிணைத்து அனைத்து போராட்ட காரர்களையும் இணைத்து பெரிய அளவில் போராடுவதற்கு ஜூன் 10 ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் கூடுவோம் என்று வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக தளங்கள் மூலமாக தகவல் பரப்பப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் வருகிறார் என்றும் தகவல் பரவியது. இந்நிலையில் பெரியகோயிலை சுற்றி இன்று காலை முதலே போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். மெரினாவை போல தஞ்சை பெரிய கோயிலும் ஆகிவிடக் கூடாது என்ற முடிவோடு இந்த நிகழ்வை தடுத்து வருகிறார்கள் போலீசார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: