புதன், 7 ஜூன், 2017

இரா.செழியன் காலமானார் .. மூத்த திராவிட அரசியல்வாதி .. நாவலர் நெடுஞ்செழியனின் தம்பி .

youthSஇரா.செழியன் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், மூத்த அரசியல்வாதியுமான இரா.செழியன் மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் (திமுக): திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா.செழியன் மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். தனது மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் நெருக்கமாகப் பழகியவர். தொலைந்து போன ஷா கமிஷன் அறிக்கையைக் கண்டுபிடித்துத் தொகுத்து வழங்கியவர். தனது முதிர்ந்த வயதில்கூடப் பேராசிரியராகப் பணியாற்றி, இன்றைய தலைமுறையினருக்கு ஆசானாகத் திகழ்ந்தவர். அவரது மறைவு தமிழகத்துக்கும், திராவிட இயக்கத்துக்கும் பேரிழப்பு.

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: மக்களவை முன்னாள் உறுப்பினர் இரா. செழியன் மறைவு கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஒரு சிறந்த மக்களவை உறுப்பினராகப் பணி செய்தவரை தேசம் இழந்துள்ளது. அவரது மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): பெரியார், அண்ணா போன்ற அரசியல் தலைவர்களின் பாசறையில் பணியாற்றியவர். தேசியத் தலைவர்களிடையே மிக நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர். இருமுறை மக்களவை உறுப்பினராகவும் நான்கு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு பெற்று மிகச் சிறப்பான முறையில் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. பொதுவாழ்க்கையில் நேர்மை, எளிமை, தூய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் செழியன்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: ஜனதா கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர். ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமை குறித்து அவரது கருத்துகளும், ஆலோசனைகளும் பல தரப்பினராலும் வரவேற்பும், பாராட்டும் பெற்றவை. அவரது மறைவு தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: செழியனின் பொதுவாழ்வு போற்றத்தக்கதும், பாராட்டத்தக்கதுமாகும். நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்தும் அரசியல் அமைப்புச் சட்டம் குறித்தும் ஆழ்ந்து சிந்தித்து பல நூல்களை எழுதியுள்ளார். வரவு-செலவுத் திட்டத்தின் மீது இவர் ஆற்றியுள்ள உரைகள் புதிய உறுப்பினர்களுக்கு என்றென்றும் வழிகாட்டும் கை விளக்காக அமைந்திருக்கும்.
பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி): மூத்த தலைவரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா.செழியன் காலமான செய்தி அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தை அளித்துள்ளது. எளிமையும், பண்பாடும் நிறைந்தவர். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய பணி குறிப்பாக அவசர நிலை காலத்தில் அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் துணிவுடன் அவர் ஆற்றிய உரை என்றென்றும் நினைவுகூரப்படும்.
ராமதாஸ் (பாமக): திராவிட இயக்கத்தின் அறிவுச் சுரங்கங்களில் இரா.செழியன் குறிப்பிடத்தக்கவர். அரசியலில் தூய்மையைக் கடைப்பிடித்த அவர், பொதுவாழ்வில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு போராடினார். 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பை நிகழ்கால நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் படித்துப் பின்பற்ற வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: பேரறிஞர் அண்ணாவின் முழு நம்பிக்கையைப் பெற்ற இரா.செழியன் மறைவு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.
உன்னதமான லட்சியவாதியாக திராவிட இயக்கத்தில் வளர்ந்தவர். நாடாளுமன்றத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். அவரின் மறைவு திராவிட இயக்கத்துக்கே பேரிழப்பு.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் அறியப்பட்ட தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் இரா.செழியன். அவருடைய அரசியல் கண்ணியத்தையும், அடக்குமுறைக்கு அஞ்சாத துணிவையும் பின்பற்றுவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
ஓ.பன்னீர்செல்வம் (பு.அம்மா அணி): திராவிடப் பாரம்பரியத்தில் உருவாகி, சிறந்த சட்ட வல்லுனராக, தூய்மையான அரசியல் அடையாளமாக, பொது வாழ்வில் ஒழுக்கத்தோடும், நல்ல பண்புகளோடும் வாழ்ந்தவர் இரா.செழியன். அவருக்கு அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர் என பலமுகங்கள் உண்டு. அத்தனை முகங்களும் உண்மையான முகங்கள்.
தமிழருவி மணியன் (காந்திய மக்கள் இயக்கம்): திராவிட இயக்கத்தில் தோன்றி, தேசிய நீரோட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அவசர கால அடக்குமுறைகளுக்கு எதிராகக் களமாடிய, தமிழக ஜனதா கட்சி, ஜனதா தளம் கட்சிகளின் தலைவராகப் பொறுப்பு வகித்த இரா.செழியன் மறைவு பெரும் வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது.
கி.வீரமணி (திராவிடர் கழகம்): அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலம்தொட்டு திராவிடர் மாணவர் கழகத்தில் ஈடுபட்டு, பிறகு திமுகவின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர். பிற்காலத்தில் தமிழக ஜனதா தள தலைவராகவும் விளங்கி சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்குடன் நெருக்கமாக இருந்தவர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.  தினமணி

கருத்துகள் இல்லை: