திங்கள், 5 ஜூன், 2017

அணிகள் இணைய சசிகலா 60 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார்: தினகரன் தகவல்

இரு அணிகள் இணைவதற்கு மேலும் 60 நாட்களுக்கு அவகாசம் வழங்கலாம்
என்று அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா தெரிவித்திருப்பதாகவும், அதனால் தானும் 60 நாட்கள் காத்திருக்கப் போவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலாவை துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ” ஏப்ரல் மாதம் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட
அமைச்சர்கள் கேட்டுக் கொண்டதன்படி நான் கட்சி பணிகளிலிருந்து ஒதுங்கியிருந்தேன். ஆனால் 45 நாட்கள் கழித்து எந்த பலனும் ஏற்படவில்லை. ஒருவரை ஒருவர் தாக்கி பேசி கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் உண்டாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் இரு அணிகள் இணைவதற்கு இன்னும் 60 நாட்கள் அவகாசம் தரலாம் என்று பொதுச் செயலாளர் சசிகலா என்னிடம் தெரிவித்தார். வானளாவிய அதிகாரம் படைத்தது போல் அமைச்சர் ஜெயக்குமார் பொதுச் செயலாளருக்கான அதிகாரத்தோடு பேசுகிறார்.
ஒருவரை கட்சியிலிருந்து நீக்குவது குறித்து பொதுச் செயலாளர் தான் முடிவு செய்ய முடியும். அவர் தற்போது செயல்பட முடியாத நிலையில் இருப்பதால் துணை பொதுச் செயலாளராகிய எனக்கு தான் அதிகாரம் உள்ளது.
60 நாட்கள் காத்திருப்போம் அதற்குள் அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ள பயம் நீங்கி அவர்கள் சொன்னது போல் இணைகிறார்களா என்று பார்ப்போம் இல்லையேல் என்ன செய்ய வேண்டும் என்றும் சசிகலா எனக்கு அறிவுறுத்தியுள்ளார் அதன்படி செய்வேன்.
அதுவரை என்னை சந்திக்க வரும் தொண்டர்களை நான் சந்திப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றார்
முன்னதாக சசிகலாவிடம் அனுமதி பெற்றுவிட்டு வந்த பிறகு கட்சி பணிகளை தொடர இருப்பதாக தினகரன் இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை: