புதன், 7 ஜூன், 2017

மத்தியப் பிரதேசம்: 6 விவசாயிகளை சுட்டுக் கொன்றது பாஜக அரசு!

படக்குறிப்பு: விவசாயிகளைக் கொல்லும் பாஜக, மோடியை விவசாயிகளின் நண்பனாக விளம்பரம் செய்கிறது மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள், விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்கவும், பண்ணைக் கடன்களைத் தள்ளுபடி செய்யவும் கோரி 2017, ஜூன்1 முதல் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ’வியாபம் புகழ்’ சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு, போராடிய விவசாயிகள் மீது போலீசைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி 6 விவசாயிகளைக் கொன்றுள்ளது. ம.பி. முழுவதும் ந்டந்து வரும் இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக மான்ட்சார் மாவட்டம் பிபாலியா மண்டி என்ற பகுதிக்கு அருகே உள்ள ’பாஹி’ என்னும் கிராமத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அங்கே போலீசு தொடுத்த தாக்குதலில் விவசாயி ஒருவர் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து கொதித்தெழுந்த அப்பகுதி விவசாயிகள், போலீசு மற்றும் போலீசு நிலையத்தின் மீது கற்களை வீசினர். உடனே அங்கு குவிக்கப்பட்ட சி.ஆர்.பி.எஃப். போலீசு, விவசாயிகளின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில்ஆறு விவசாயிகள் உயிரிழந்தனர்.
எட்டு விவசாயிகள் கடுங்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இத்துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னர், ம.பி. அரசு மான்ட்சார், ரட்லாம், உஜ்ஜைனி ஆகிய மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணையதள சேவைகளையும் முடக்கப்பட்டுள்ளது. போலீசு சுடவில்லை என முதலில் மறுத்த மத்தியப்பிரதேச அரசு, தற்போது தவிர்க்கவியலாமல், போலீசு தங்களது தற்காப்பிற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியுள்ளது.
போராடும் விவசாயிகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திப் படுகொலை செய்யும் பாஜக கும்பல் தான் மோடியின் படத்தோடு வெட்கமேயில்லாமல் முழுப்பக்க அளவில் இந்திய விவசாயம் வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக விளம்பரம் கொடுக்கிறது.
இந்நிலையில் விவசாயக் கடனை தள்ளூபடி செய்தால் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்று தரகு முதலாளிகளுக்கு பற்றாக்குறை இல்லாமல் அள்ளிக் கொடுக்கும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறியிருக்கிறார். ஆகவே ம.பி. விவ்சாயிகள் போராட்டத்தை நசுக்க மேலும் 4 கம்பெனி மத்திய படையை அனுப்புகிறது மத்திய அரசு. வினவு.com

கருத்துகள் இல்லை: