வியாழன், 8 ஜூன், 2017

தமிழ்நாடு பிரைவேட் லிமிடெட் ... பங்குகள் விற்பனை

சிறப்புக் கட்டுரை: தமிழ்நாடு பிரைவேட் லிமிடெட்
திருபாய் அம்பானி இறந்தவுடன் முகேஷும் அனிலும் மோதிக்கொண்டனர். ரிலையன்ஸ் பேரரசின் அடுத்த சக்ரவர்த்தி யார் என்பதற்கான முட்டல் மோதல் தொடங்கியது. திருபாயின், ரிலையன்ஸின் முதலீடுகளை ‘காம்ப்ளக்ஸ் ஹப்’ என்று அப்போது வர்ணித்தனர். அதாவது முதலீடு எப்படி, எங்கே, எந்தெந்த நிறுவனத்தின் மூலம் செய்யப்பட்டு இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதைத்தான் இப்படி வர்ணித்தனர்.
ஏன் காம்ப்ளக்ஸ் ஹப்? வேறு எதற்கு... அரசை குழப்பி ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்யத்தான். இந்த சகோதரச் சண்டையை மத்திய அரசே பயத்துடன் பார்த்தது. அப்போதைய நிதி மந்திரி, தேவைப்பட்டால் மத்திய அரசு மத்தியஸ்தம் செய்யும் என்று அறிவிக்கும் நிலைக்கு போனார்.
அப்போது உள்ளே வந்தார் அம்மா கோகிலா பென். சென்டிமென்ட் கட்டைப் பஞ்சாயத்து செய்து பிரச்னையை முடிவுக்குக்கொண்டு வந்தார். முகேஷ் சக்ரவர்த்தி ஆனார். அனில் ஆஃப் செய்யப்பட்டார்.


தமிழகத்தில் ‘அம்மா’வே இறந்துபோனதால், முதலில் கடும் குழப்பம் நிலவியது. வெங்கையா நாயுடு நேரடியாகவே தலையிட்டார். மேம்போக்கான மத்தியஸ்தம் செய்து ஓ.பி.எஸ். முதல்வராக்கப்பட்டார். அதுவரை அம்மாவை இயக்குநராகக் கொண்டு கட்டுக்கோப்பாக இயங்கி வந்த தமிழ்நாடு பிரைவேட் லிமிடெட் தள்ளாடத் தொடங்கியது.
பிரைவேட் லிமிடெட் என்று சொன்னாலும் அம்மா ஆட்சியின்போது சோல் பிராப்பர்ட்டிஷிப்பாகத்தான் தொடர்ந்துகொண்டு இருந்தது. அம்மாதான் ஓனர். ஜெயலலிதா இறந்த பின்புதான் தெள்ளத் தெளிவாகத் தெரியவந்தது, நடந்து கொண்டிருந்தது பிராப்பர்ட்டிஷிப்பும் இல்லை, பிரைவேட் லிமிடெட்டும் இல்லை... பார்ட்னர்ஷிப் வியாபாரம் என்று.
அதுவரை அமைதியாக இருந்த மர்ம பார்ட்னர் சசிகலா முன்னால் வந்தார். என்னதான் வியாபாரம் என்றாலும் இதுவரை ஓனர் முகராசியைப் பார்த்து வியாபாரம் செய்துவந்த மக்களுக்கு கல்லாப் பெட்டியில் பார்ட்னர் உட்காருவது பிடிக்கவில்லை. பழைய ஓனரின் எடுபிடியை ஓரளவுக்கு பிடித்தது. மேனேஜர் ஓ.பி.எஸ்ஸுக்கு இருந்த மக்கள் ஆதரவு கூட பார்ட்னர் சசிகலாவுக்கு இல்லை.
இதற்கு பிறகு நடந்த அபத்த நாடகக் காட்சிகள் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.
ஒரு கட்டத்தில், சினிமாவில் வரும் கள்ளக்கடத்தல், கொள்ளைக்கூட்டம், மாஃபியா காட்சிகளை மிஞ்சியது தமிழக அரசியல் காட்சிகள்.
மத்திய அரசு தன் பங்குக்கு வித்யாசாகர் ராவ் மூலம் பரமபதம் ஆட, மக்கள் சினிமா, டிராமா, இசை, கிரிக்கெட் என அனைத்தையும் துறந்து நியூஸ் சேனல் முன்னால் பழியாக கிடந்தார்கள். நியூஸ் சேனல்களின் டி.ஆர்.பி. எகிறியது. நடுவில் சுப்ரீம் கோர்ட்டு தன் பங்குக்கு த்ரில்லைக் கூட்டியது. சசிகலா ஜெயிலுக்குப்போகும் சூழல் உருவாகியது.

சசிகலா இன்ஸ்டண்டாக இன்னொரு பார்ட்னருக்கு பட்டாபிஷேகம் சூட்டிவிட்டு, சமாதியில் கும்மாங்குத்து குத்தினார். என்ன பார்ட்னர் செத்தும் இப்பிடி போட்டு அடிக்கிறே என்று பிரதான பார்ட்னர் வருந்தியிருக்கக்கூடும்.
புது பார்ட்னர் டி.டி.வி. கொஞ்சநாள் டி.வி. முன் இளித்துவிட்டு அவரும் ஜெயிலுக்கு போனார்.
நம்பிக்கையான தோட்டக்காரரை ஓனர் சீட்டில் உட்காரவைத்து விட்டு ஓனர்கள் ஜெயிலில் இருந்தார்கள். மேனேஜர் ஓ.பி.எஸ். தோட்டக்காரரை முறைத்துக்கொண்டு இருந்தார். தோட்டக்கார கோஷ்டியும், மேனேஜர் கோஷ்டியும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் பேரம் பேசிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில், ஒரு பார்ட்னர் ஜாமீனில் வெளிவந்து இருக்கிறார்.
இப்போது கம்பெனி மூன்றாக பிரிந்து கிடக்கிறது. யார் கம்பெனியை கைப்பற்றப் போகிறார்கள்?
இப்போதைய நிலவரப்படி, மூன்று தரப்பிடமும் ஆயிரக்கணக்கான கோடிகள் கைவசம் இருக்கும். இந்தப் பணத்தை பாதுகாத்துக்கொள்வது முதல் நோக்கம். அதற்குப்பிறகு மேற்கொண்டு சம்பாதிக்க வேண்டும்.
இப்போது நடப்பதை அரசியல் போட்டி என்றோ, அரசியல் சூழ்ச்சி என்றோ, அரசியல் சதி என்றோ வர்ணிக்க முடியாது. அரசியல் என்ற வார்த்தையே பயன்படுத்தக் கூடாது. இப்போது நடந்து கொண்டிருப்பது அருவருப்பான அசிங்கம் பிடித்த கொள்ளைக்காரர்களின் சண்டை.
ஜனநாயகம் என்ற பெயரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதால் மத்திய அரசு, கவர்னர், கோர்ட்டு, ஜனாதிபதி என எல்லோரும் பொத்திக்கொண்டு பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியுள்ளது.

எதிர்க்கட்சியான தி.மு.க-வினாலும், ஸ்டாலினாலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துக்கொள்ள முடியாததுதான் இதிலுள்ள உச்சக்கட்ட சோகம்.
இவ்வளவு பெரிய அசிங்கம் தமிழ்நாட்டில் இதுவரை நடந்ததில்லை. இந்திய அளவில்கூட இதுபோன்ற கூத்துக்கள் நடந்ததில்லை. மக்களுக்கு சம்மந்தமே இல்லாத மாஃபியா கூட்டம் ஒரு மாநிலத் தலைமையையே தன் ஆளுகைக்குள் கொண்டு வந்ததில்லை.
இந்த அசிங்கங்கள் நடந்து கொண்டிருப்பதற்கு முழு முதற்காரணம், ஜெயலலிதாதான். அவரது கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியிலேயே ஒரு சிறு முன்னேற்றமும் தமிழகத்தில் ஏற்படவில்லை. பின்னோக்கி சென்றுகொண்டு இருந்தது. போட்ட திட்டங்கள் அனைத்தும் கவர்ச்சி ஜிகினா திட்டங்கள். ஜெயலலிதா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் பொய்த்து போனது. மொத்தத்தில் செயல்படாத அரசாங்கமாக இருந்தது.
ஆனாலும் 2ஜி ஊழல் மூலம் ஏற்பட்ட பழைய கெட்டப்பெயர், சென்ற ஆட்சி காலத்தில் மு.க.அழகிரி உள்ளிட்ட திமுக-வினர் போட்ட ஆட்டங்கள் மக்கள் மனதைவிட்டு அகலவில்லை. திமுக-வும் பெரிதாக மக்களை கவர முடியவில்லை. மசமசவென ஏதோ செய்தார்கள். இந்தக் காரணங்களால், அதிமுக-வே மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
புது ஆட்சியில் ஜெயலலிதா சுத்தமாக முடங்கிப்போனார். வெற்று இலவசங்களால் ஆட்சியைப்பிடித்த ஜெயலலிதா, இன்னும் சில இலவச எலும்புத்துண்டுகளை மக்களுக்கு தூக்கிப்போட்டு விட்டு கோர்ட்டு கேஸ் என்று பிஸியானார்.
ஜெயலலிதா நிர்வாகத்திறன்மிக்கவர் என்ற மாயை எப்படி உருவாக்கப்பட்டது என்று தெரியவில்லை. படு கேவலமான நிர்வாகம் நடந்தது. சினிமாவில் ரஜினி ஹீரோயினிடம் ஆங்கிலத்தில் பேசினால் கை தட்டும் ஆட்கள்தானே நாம்? சர்ச் பார்க் ஆங்கிலம் பேசியதால் ஜெயலலிதாவின் பிம்பம் ஊதிப் பெரிதாக்கப்பட்டது என்று தோன்றுகிறது.
கட்சியில் மற்றும் ஆட்சியில் நிர்வாகம் படு மோசமாக சீரழியத் தொடங்கியது ஜெயலலிதா காலத்தில்தான். ஏற்கெனவே தமிழகத்தில் மோசமாக இருந்த அரசியல் கலாசாரத்தைப் படுகேவலமாக்கினார் ஜெயலலிதா.
காலில் விழுந்தவன், கும்பிடு போட்டவன், கையை கிழித்துக்கொண்டவன், நாக்கை அறுத்து உண்டியில் போட்டவன் எல்லாம் கட்சிப்பதவிக்கு வந்தனர். சப்பை காரணங்களால், சிலர் அமைச்சர் ஆக்கப்பட்டனர்.
கவுன்ட்டர் வைத்து விற்காத குறையாக எம்.எல்.ஏ. சீட் அப்போது சைலண்ட் பார்ட்னர் சசிகலாவால் விற்கப்பட்டது. மணல் கொள்ளை, கனிமங்கள் கொள்ளை என தமிழ்நாடு சுரண்டப்பட்டது. டாஸ்மாக் மூலம் மிடாஸ் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளியது. கான்ட்ராக்ட் பர்சன்டேஜ் 45 சதவிகிதத்தை எட்டியது.
யார் நன்றாக கலெக்‌ஷன் கல்லா கட்டி ஓனரிடம் சேர்க்கிறார்களோ அவர்களே பவர்ஃபுல் அமைச்சர்கள் என்றானது.
தனக்கு அடுத்து தலைமைப் பண்புள்ள ஒருவரும் உருவாகாமல் பார்த்துக்கொண்டார் ஜெயலலிதா. கடைசி காலங்களில் அவர் ஏதோ மயக்கத்திலோ, மாயையிலோ இருந்திருப்பாரோ என்று நினைக்கும் அளவுக்கு கேவலமாக இருந்தன அவர் நடவடிக்கைகள்.
ஆயிரக்கணக்கான கோடிகள் சொத்து சேர்த்து சைலண்ட் பார்ட்னராக இருந்த சசிகலா, இப்போது அதிகாரத்தை நேரடியாக ருசிக்க வேண்டி முன்னால் வந்துதான் ஜெயிலுக்குப் போயிருக்கிறார்.
இனி எப்படி இருக்கும் தமிழக அரசியல் நிலவரங்கள்?
இன்னும் மீதமிருக்கும் ஆட்சிக்காலத்தை நினைத்தால் கலக்கமாக இருக்கிறது. இதே சூது விளையாட்டு தொடரும். பாஜக என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் இந்தச் சிக்கல்களில் இருந்து ஒரு பலனும் பெற முடியாது.
காங்கிரஸ் எல்லா கட்சியும் கலைந்துபோனாலும் தங்களுக்கு ஓட்டு விழாது என்பதில் தெளிவாக இருக்கிறது. ஸ்டாலின் ஜென்டில்மேன் இமேஜை மெயின்ட்டெயின் செய்கிறார்.

பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடிய கதையாக ரஜினி போர், போர் என்று கூவிவிட்டு ‘காலா’ ஷூட்டிங் சென்று விட்டார். விஜயகாந்துக்கு ஜெயலலிதா இறந்ததே தெரியுமா, தெரியாதா என்று தெரியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் சசிகலாவே சரணம் போட ரெடியாக இருப்பது போலத் தெரிகிறது. பாமக, விடுதலைச் சிறுத்தைகள் நிலைமை ரொம்ப பாவம்.
ஒன்று மட்டும் நிச்சயம். அதிமுக-வில் இருக்கும் சிறு வியாபாரிகள், கமிஷன் ஏஜெண்டுகள், அதுதான் எம்.எல்.ஏ-க்கள்தான். இந்த ஆட்சி மட்டுமே நிலை, அதற்குள் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பவர்கள். அடுத்தத் தேர்தலுக்கு அதிமுக இருக்காது.
அதிமுக இல்லாமல் போனாலாவது தான் முதலமைச்சர் ஆவோமா என்று ஸ்டாலின் யோசித்துக்கொண்டு இருப்பார், பாவம்.

சசிகலாவிடம் உள்ள ஒரு நேர்மை என்னவெனில், இதுவரை தனக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்று சொன்னதேயில்லை.
இப்போதைக்கு மூவரும் அடித்துக்கொள்வதைப் பார்த்தால், கவர்னர் ஆட்சியை நோக்கி செல்வது போலத்தான் தோன்றுகிறது.
எது வேண்டுமானாலும் நடக்கட்டும், இனி பாகிஸ்தானே தமிழகத்தை ஆண்டால்கூட இதைவிட கேவலமாக ஆட்சி செய்ய முடியாது. கேவலத்தின் உச்சகட்டத்தை தமிழகம் ஏற்கெனவே அனுபவித்துவிட்டதால், இனி என்ன நடந்தாலும் அதிர்ச்சி அடைய ஒன்றுமில்லை.
கட்டுரையாளர்: அராத்து  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: