வியாழன், 8 ஜூன், 2017

சுழற்சி முறையில் சகல அதிமுக எம் எல் ஏக்களும் அமைச்சர்கள் ... ஆட்சி நிலைக்க இதுதான் ஒரேவழி?

விகடன் :கா . புவனேஸ்வரி :தி.மு.க-வில் தற்போது நடக்கும் அரசியல் காய்நகர்த்தல்கள் என்பது  தமிழக அரசியலில் இதுவரை நடந்திருக்குமா என்பதுகூடத் தெரியவில்லை. 'சுப்ரமணியபுரம்' திரைப்படத்தின் கதைக்கரு பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். "நீ என்முதுகில் குத்தினால் உன்னை முதுகில்குத்த வேறுஒருவன் இருப்பான்" என்பதை மையமாக வைத்து உருவான படம் அது. அந்தத் திரைப்படப் பாணியில்தான் தற்போது அ.தி.மு.க-வின் அரசியல்களம் போய்க் கொண்டிருக்கிறது.  பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் என இந்த மூன்று பேரையும் சுற்றிநடக்கும் அரசியல் காய்நகர்த்தல்கள், அ.தி.மு.க என்ற கட்சிக்கு எதிர்க்கட்சியே தேவையில்லை எனும் நிலையை உருவாக்கியுள்ளது.
இரட்டை இலைச் சின்னத்தை தனது அணிக்குப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டெல்லி காவல்துறையினரால் தினகரன் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, அமைச்சர்கள் அவரைச் சந்தித்துப் பேசினர். அப்போது அமைச்சர்களுக்கும், தினகரனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றதாகச் சொல்லப்பட்டது.
கிட்டத்தட்ட 28 எம்எல்ஏ-க்கள் தினகரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாக அப்போது தகவல் வெளியானது. இந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமார், "தினகரனையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டோம். இனி அவர்களைக் கட்சியில் சேர்க்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.
வழக்கில் கைதாகி தினகரன் சிறை சென்றதும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியையும் இணைக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால், பல்வேறு காரணங்களினால், இரு அணிகளும் இணைவது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கவே இல்லை. இந்நிலையில் தினகரன் ஜூன் 2 ஆம் தேதி, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தினகரன் வெளியே வந்தநாளில் இருந்துதான் அ.தி.மு.க-வில் மீண்டும் சலசலப்புத் தொடங்கியது. இது பன்னீர்செல்வத்துக்கும், தினகரனுக்கும் இடையேயான சலசலப்பு அல்ல; எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கும், தினகரனுக்கும் இடையேயான சலசலப்பின் தொடக்கம்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவைச் சந்தித்துப் பேசினார் தினகரன். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், "என்னை நீக்கும் அதிகாரம் அ.தி.மு.க பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. எனவே நான் இனி கட்சிப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவேன்" என்றார். தினகரனின் இந்தப் பேட்டி எடப்பாடி தரப்பினருக்கு மிகுந்த எரிச்சலை உண்டாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திவிட்டு தலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்த அமைச்சர் டி. ஜெயக்குமார், "தினகரனை ஒதுக்கி வைத்தது, வைத்ததுதான். அவரைக் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்துப் பேச மாட்டார்கள்" என்றார்.
தங்கதமிழ்ச்செல்வன் அ.தி.மு.க-வில் நடக்கும் இத்தகைய அதிகாரச்சண்டை குறித்து ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ-வும், தினகரனின் ஆதரவாளருமான தங்க தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், "என்னைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் இருந்தே கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரனுடன்தான் இருந்து வருகிறேன். அவருக்கு 40 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது. எங்களை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதனால், அ.தி.மு.க-வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்று கருத வேண்டாம்" என்றார்.
"தினகரன் கட்சியில் ஏதும் புதிய பொறுப்புக்கு வரப்போகிறாரா? அதனால்தான் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை திரட்டுகிறாரா?" என்ற கேள்வியை முன்வைத்தோம். அதற்குப் பதிலளித்த தங்க தமிழ்ச்செல்வன், "அப்படி எதுவும் இல்லை; அதுபோன்று இருந்தால் உங்களுக்கு (செய்தியாளர்களுக்கு) கட்டாயம் தெரிவிப்போம்" என்று முடித்துக் கொண்டார்.
மதுசூதனன்
எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையே நடக்கும் மோதல் தொடர்பாகப் பன்னீர்செல்வம் அணியில் உள்ள மதுசூதனனிடம் பேசினோம். ''தினகரனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடப்பது நாடகம் என்பது உண்மை. எங்களுடைய அணியைக் காலி செய்வதற்காக அவர்கள் நாடகம் நடத்துகிறார்கள். அதற்கான திட்டத்தை வகுத்துதான் அவர்கள் தற்போது நாடகமாடி வருகிறார்கள். அதில், அவர்களே காலியாகி விடுவார்கள் என்பதுதான் நிதர்சனம். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியவர் சசிகலா. அப்படியிருக்கும்போது எடப்பாடி பழனிசாமி யாருக்கு விசுவாசமாக இருப்பார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தினகரனை, கட்சியைவிட்டு அம்மா நீக்கினார். அதன்பிறகு, அவரைச் சேர்க்கவே இல்லை. இப்படியான பல விஷயங்கள் இதில் உள்ளன'' என்றவரிடம், ''உங்களுடைய ஆதரவு யாருக்கு'' என்று கேட்டோம். ''அதை, பன்னீர்செல்வத்திடம்தான் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதில் இருந்து எப்போதும் பின்வாங்க மாட்டேன் என்பது எனது கொள்கை. அம்மாவின் கொள்கையை நன்றாக உள்வாங்கிக்கொண்டு அவர்களுடனேயே பயணித்தவன் நான். அந்தக் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கக் கூடாது என்றுதான் தனியாக வந்தார் ஓ.பன்னீர்செல்வம். அதுதான் எனது கொள்கை'' என்றவரிடம், தொடர்ந்து ''எடப்பாடி பழனிசாமிக்கு பன்னீர்செல்வம் ஆதரவு இருப்பதாகச் சொல்லப்படுகிறதே'' என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், ''அவருடைய நிலைப்பாட்டில் அவர் தெளிவாக இருக்கிறார். சசிகலாவின் குடும்பத்தை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கொள்கை. கருணாநிதி தலைமையில் திருமணம் செய்துகொண்டவர் சசிகலா. அப்படியிருக்கும்போது சசிகலாவின் உறவினர்கள் சேர்க்கும் அணி, எப்படி எம்.ஜி.ஆருடைய அ.தி.மு.க-வின் கட்சியாக இருக்க முடியும்'' என்றார் புன்னகைத்தப்படியே.
அ.தி.மு.க-வில் நீடிக்கும் இத்தகைய குழப்பம் குறித்து பேட்டியளித்த முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி. கலைராஜனோ, 28 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தினகரனுக்கு இருப்பதாகக் கூறினார். ஆனால், தங்க தமிழ்ச்செல்வனோ, தினகரனுக்கு 40 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகக் கூறுகிறார். யார் சொல்வது உண்மை? அ.தி.மு.க-வில் என்ன நடக்கப் போகிறது? எடப்பாடி தலைமையிலான ஆட்சி நீடிக்குமா? இந்த குழப்பத்தில் எதிர்க்கட்சியான தி.மு.க. என்ன நிலைப்பாடு எடுக்கும்? என்பன போன்ற கேள்விகள் தமிழக மக்கள் மனதில் இப்போதே எழத்தொடங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: