திங்கள், 5 ஜூன், 2017

மகாராஷ்டிரா விவசாய கடன்கள் தள்ளுபடி .. நாட்டின் மிகப்பெரும் கடன்தள்ளுபடி சாதனை!

நாட்டின் மிகப்பெரிய விவசாயக் கடன் தள்ளுபடி!மகாராஷ்டிர மாநில அரசு தங்களது விவசாயிகளுக்கு அறிவித்த கடன் தள்ளுபடிதான் நாட்டின் மிகப்பெரிய கடன் தள்ளுபடி அறிவிப்பு என்றும், ஏழை மக்களுக்கு உதவுவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும், அம்மாநிலத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மறைந்த முன்னாள் பா.ஜ.க. தலைவர் கோபிநாத் முண்டேவுக்கு பீட் மாவட்டத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ”கடன் தள்ளுபடி குறித்துக் கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் விவசாய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பர். இந்தியாவிலேயே நமது மாநிலம்தான் மிகப்பெரிய கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முண்டேவின் கனவுப்படி, ஏழை மக்களுக்கு உதவும் நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது.

விவசாயிகள் அதிகம் பயன்பெறும் வகையில் நுன்னீர் பாசனத் திட்டம், மின் விநியோகம், உணவு பதப்படுத்துதல் துறைக்குச் சலுகைகள், விவசாயக் குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டு வருகிறது” என்று கூறியுள்ளார். அதேநேரம், மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக விளைச்சல் மற்றும் குறைந்த விலை காரணமாக வெங்காய விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: