சனி, 17 டிசம்பர், 2016

சரிதா நாயருக்கும் கணவருக்கும் 3 ஆண்டுகள் சிறை .. சூரிய தகடு மோசடியில் 40 லட்சம் ரூபாய் ...

எர்ணாகுளம், சூரிய ஒளி மின்தகடுகள் அமைத்து தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த வழக்கில், சரிதாநாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கேரள கோர்ட்டு தீர்ப்பளித்தது.சோலார் பேனல் மோசடி >கேரளாவை சேர்ந்தவர் பிஜூ ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி சரிதாநாயர். இவர் கேரளாவில் சூரிய ஒளி மின்தகடு (சோலார் பேனல்) அமைத்து கொடுக்கும் நிறுவனத்தை நடத்திவந்தார். இந்த நிறுவனம் மூலம் பல தொழில் அதிபர்களுக்கு சோலார் பேனல் அமைத்து கொடுப்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த மோசடியில் கேரள முன்னாள் முதல்–மந்திரி உம்மன்சாண்டி மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளதாக கூறி சரிதாநாயர் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் மோசடி தொடர்பாக விசாரிக்க கேரள அரசு சார்பில் தனி கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

ரூ.40 லட்சம் மோசடி இதற்கிடையே, கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் சஜாத் பெரும்பாவூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். இவரிடம் 5 ஆண்டுகளுக்கு முன்பு சோலார் பேனல் அமைத்துக் கொடுப்பதாகக் கூறி சரிதாநாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரூ.40 லட்சம் வாங்கியதாகவும், ஆனால் அவர்கள் கூறியபடி சோலார் பேனல் அமைத்துக் கொடுக்கவில்லை என்றும் அதில் கூறியிருந்தார்.
போலீசார் சரிதாநாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் மற்றும் சினிமா நடிகை சாலுமேனன், அவருடைய தாயார் கமலா, மற்றும் சோலார் பேனல் நிறுவன ஊழியர் மணிமேனன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
3 ஆண்டு சிறை இந்த வழக்கை விசாரித்த பெரும்பாவூர் மாஜிஸ்திரேட்டு, குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
நடிகை சாலுமேனன், அவருடைய தாயார் கமலா மற்றும் மணிமேனன் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்தும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்  தினத்தந்தி

கருத்துகள் இல்லை: