வியாழன், 15 டிசம்பர், 2016

கலைஞர் பேசமுடியாமல் சிரமப்படுகிறார் .. உணவு உண்பதிலும் சிரமம் ..

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். சிக்னல் காட்டினாலும் நெட்வொர்க் சரியாகவில்லை. நெட்வொர்க் இருக்கும் இடம் தேடி நகர வேண்டியிருந்தது. அப்படி நெட்வொர்க் இருந்த இடத்தில் நின்றபோது, ‘திமுக தலைவர் கருணாநிதிக்கு என்னாச்சு? ஊரெல்லாம் இதே கேள்வியாக இருக்கிறது... எதுவும் தகவல் உண்டா?’ என வாட்ஸ் அப் கேள்வியை எழுப்பியிருந்தது. ஃபேஸ்புக்கில் இருந்து எந்தப் பதிலும் இல்லை. சற்றுநேரத்துக்குப் பிறகு வாட்ஸ் அப் ஒரு நீண்ட மெசேஜ் போட்டது.
“கடந்த அக்டோபர் 13ஆம் தேதி முரசொலியில், ‘உடல்நிலை சரியில்லாததால் கடிதம் எழுத முடியவில்லை உடன்பிறப்பே...’ எனக் குறிப்பிட்டிருந்தார் திமுக தலைவர் கருணாநிதி. அப்போதுதான் கலைஞர்  உடல்நிலை சரியில்லை என்ற தகவல் ஊரெல்லாம் பரவ ஆரம்பித்தது. கருணாநிதிக்கு சர்க்கரை வியாதி இல்லை. பி.பி. இல்லை. கொலஸ்ட்ரால் இல்லை. இப்படி தொற்றாத வாழ்வியல் நோய்கள் எதுவும் கலைஞர் கருணாநிதிக்கு இல்லை.
அதனால்தான் 90 வயதைக் கடந்துவிட்டாலும் உற்சாகமாக வலம் வந்தபடி இருந்தார். ஆனால் கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு தோல் நோய் உண்டு. கலைஞரின்  அக்கா சண்முகத்தம்மாளுக்கு கடைசிக் காலத்தில், தோலில் சிறு கொப்புளம் வரும். அது அப்படியே உடைந்து தண்ணீர் வடியும். உடலில் இப்படி பல கொப்புளங்கள் வந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்தது. அதற்கு சண்முகத்தம்மாளுக்கு சில சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது. கலைஞர் கருணாநிதிக்கும் அதேபோல பாதிப்பு அவ்வப்போது வருவதுண்டு. அதுபோன்ற கொப்புளங்கள் அவரது உடலில் அதிகம் வந்திருந்தது. இதைக் கட்டுப்படுத்த ஸ்டீராய்டு மருந்துகளை உடலில் செலுத்தினார்கள்.
கலைஞரின்  இந்த தோல்நோயை குணப்படுத்த கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் பேட்ரிக் ஏசுடையான் சிகிச்சை தந்தார். கருணாநிதியின் உடலைப் பரிசோதித்து அவருக்கு ஸ்டீராய்டு மருந்துகளைக் கொடுத்து வந்தார். இந்த மருந்துகளை அதிகளவில் உடலில் செலுத்தினாலும் அது ஆபத்து. எந்த அளவில் அந்த மருந்தைச் செலுத்த வேண்டும் என்பது கலைஞர் கருணாநிதியை தொடர்ந்து கவனித்துவரும் டாக்டர் பேட்ரிக் ஏசுடையானுக்கு தெளிவாகத் தெரியும். அதனால் அவர், அதற்கான மருந்துகளைக் கொடுத்து வந்தார். அப்படியிருந்தும் அவருக்கு  கொடுக்கப்பட்ட ஸ்டீராய்டு மருந்துகளை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. திடீரென கலைஞர் கருணாநிதிக்கு பேச்சு வரவில்லை. பேராசிரியர் அன்பழகன் தினமும் கோபாலபுரம் வந்தார். கலைஞரின்  கையைப் பிடித்துக்கொண்டு ஏதேதோ பேசினார். ஆனாலும் கலைஞர்  அமைதியாகவே இருந்தார். கலைஞர் ஏதோ பிடிவாதத்திலும் கோபத்திலும்தான் பேசாமல் இருக்கிறார் என ஆரம்பத்தில் நினைத்திருக்கிறார்கள். ஆனால் டாக்டர் பாத்ரிக் ஏசுடையான் சொன்னபிறகுதான் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நரம்பியல் துறை மருத்துவர்கள் கோபாலபுரத்துக்கு வந்து பரிசோதித்தார்கள். சில நரம்புகள் பாதிக்கப்பட்டிருப்பதையும் அதனால்தான் பேச முடியாமல் இருப்பதையும் கண்டுபிடித்தார்கள். அதற்கான சிகிச்சையும் தொடங்கினார்கள். உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த பிறகு, அதிகளவில் கலைஞர்  சாப்பாடும் எடுத்துக் கொள்ளவில்லை. சாப்பிடாமல் இருந்த காரணத்தால், அவர் உடல்நிலை மேலும் பலவீனமாகி இருக்கிறது. இனியும் வீட்டில் இருப்பது நல்லது இல்லை என முடிவெடுத்துதான் காவேரி மருத்துவமனையில் சேர்த்தார்கள். படிப்படியாக அவர் குணமடைந்தும் வந்தார். பிறகுதான் டிஸ்சார்ஜ் செய்தார்கள். வீட்டுக்கு அனுப்பும்போது கருணாநிதிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், ‘அவருக்கு நல்ல உணவு கொடுங்க… அவரு என்ன ஆசைப்படுறாரோ அதையெல்லாம் கொடுங்க. அதேபோல, எல்லோரும் அவரோடு பேசுங்க..’ என்றெல்லாம் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். கலைஞர்  உடலில் ஏற்பட்ட கொப்புளங்களுக்காக கொடுக்கப்பட்ட ஸ்டீராய்டு மருந்துகள் அவரது நரம்பு மண்டலத்தை பாதித்திருக்கிறது. இதனால் பல நேரங்களில் அவருக்கு மறதி ஏற்படத் தொடங்கியிருக்கிறது. மிகவும் நெருக்கமானவர்களை மட்டுமே அடையாளம் கண்டுகொள்கிறார் என்பதுதான் நிலையாக இருந்தது. இப்போது எப்படி இருக்கிறார் என்பதை ஃபேஸ்புக்தான் சொல்ல வேண்டும்!” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
சரியாக ஒரு மணி நேரத்துக்குப் பிறகு... ஃபேஸ்புக் லொக்கேஷன் கோபாலபுரம் காட்டியது. ஸ்டேட்டஸை டைப்பிங் செய்து கொண்டிருந்தது.
“வீட்டுக்கு அழைத்துவரப்பட்டதில் இருந்தே மறுபடியும் உணவு எடுத்துக் கொள்வதில் கலைஞருக்கு  சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. திட உணவுகளை அவரால் விழுங்க முடியவில்லை. அதனால் திரவ உணவுகளை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதைச் சாப்பிட்டாலும் அவருக்கு வாந்தி வர ஆரம்பித்திருக்கிறது. அதனால் மீண்டும் காவேரி மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனை கேட்கப்பட்டிருக்கிறது. டாக்டர்கள் கோபாலபுரத்துக்கே வந்து கலைஞரை  பார்த்திருக்கிறார்கள். ‘அவர், ஏற்கனவே சாப்பிடாமல் வீக் ஆக இருக்காரு. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் வீக் ஆகிடுவாரு. அதனால் உணவு எடுத்துக் கொள்வதற்கு உடனடியாக ‘ரைஸ் டியூப்’ போட்டுடலாம். அது வழியாக அவருக்கு திரவ உணவுகளை கொடுக்க ஆரம்பிச்சுடலாம். அப்போது வாந்தி வருவதற்கு வாய்ப்பு இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். உடனடியாக, அதற்கான ஏற்பாடுகளையும் செய்து அவருக்கு  மூக்கு வழியாக ரைஸ் டியூப் போட்டு இருக்கிறார்கள். அதனால் இந்த டியூப் வழியாக திரவ உணவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்”
அவரை  தனிமையில் இருக்க வேண்டாம் என்றுதான் ரஜினி, வைரமுத்து என பிரபலங்கள் சந்திக்க அனுமதி கொடுத்தார்கள். அவர்களும் வந்து கலைஞரை தனியாக வந்து  பார்த்து பேசிவிட்டுப் போனார்கள். ஆனால் கலைஞர்  இப்போது இருக்கும் நிலையில் விசிட்டர்கள் யாரும் பார்க்க வேண்டாம் என மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால் யாரும் பார்க்க வேண்டாம் என சொல்லப்பட்டிருக்கிறது. அதையும் தாண்டி, கலைங்கருக்கு நெருக்கமான சிலர் மட்டும் அவரை சந்தித்து வருகிறார்கள். தினமும் சிலமணி நேரம் சேரில் உட்காரும் கலைஞர் , 20ஆம் தேதி கூடும் பொதுக் குழுவுக்கு வருவது சிரமம்தான்” என்ற ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக் மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: