வெள்ளி, 16 டிசம்பர், 2016

மத்திய அரசுக்கு எதிராக ஆளும் கட்சி எம்பிக்கள் ஒட்டு போடும் அபாயம் .. பாஜகவும் சேர்ந்தே அவையை முடக்குகிறது

சாதாரண மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அவையில் ரூபாய் நோட்டு விவகாரத்தில்
சாதாரண மக்கள் படும் துன்பங்களை விவாதிக்க வழியில்லாமல் போனது ஆளும் கட்சியில் இருப்பவர்களையும் உலுக்கியிருக்கிறது.; ஆளும் கட்சி வரிசையில் அத்வானியின் குரல் வழியே சாதாரண மக்களின் குரல் எதிரொலித்திருக்கிறது என்பதுதான் உண்மை. கண்முன்னால் தினந்தோறும் நடக்கும் கூச்சல் குழப்பங்களைப் பார்த்து பொறுக்க முடியாமல், லோக் சபாவில் முன் வரிசையில் அமர்ந்திருந்த பி.ஜே.பி மூத்த தலைவர் அத்வானி, தன் அருகில் இருந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம்,  "சபாநாயகரிடம்
சொல்லி தயவு செய்து எதிர்கட்சிகளிடம் பேசுங்கள். அவையை சுமுகமாக நடத்த உதவுங்கள்" என்று சொல்கிறார். அதோடு நிறுத்தவில்லை. "வாஜ்பாய் அவையில் இருந்திருந்தால். இந்தச் சம்பவங்கள் எல்லாம் அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்திருக்கும்.
அவையின் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவது மிகவும் அதிருப்தி தருவதாக இருக்கிறது. நான் கூட, லோக்சபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யலாமா என்ற மனநிலையில் இருக்கின்றேன்" என்று வேதனை கலந்த வார்த்தைகளில் சொல்லி இருக்கிறார். ஆளும் கட்சியில் ஒலித்த இந்த கலகக் குரலுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
அவைக்கு வெளியே வீரம்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி தொடங்கியது. விடுமுறை நாட்கள் போக 22 நாட்கள் நாடாளுமன்றம் கூடியிருக்கிறது. ஆனால், ஒரு நாள் கூட முழுமையாக நடைபெறவில்லை. ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால், 4 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்களின் ஒரே ஒரு கோரிக்கை. பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்பதுதான். "நாடாளுமன்றத்துக்கு வெளியே விழாக்களிலும், பொதுக்கூட்ட மேடைகளிலும், ஆவேசமாகப் பேசும் பிரதமர் நரேந்திர மோடி, ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேச மறுக்கிறார்" என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். "நாங்கள் பேசத் தயாராக இருக்கின்றோம். நீங்கள் அமைதியாக இருந்தால்தானே பேச முடியும்" என்று ஆளும் கட்சி தரப்பில் கேட்கப்படுகிறது.
ஓட்டெடுப்பு கோரிக்கை
பழைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட விவகாரம் குறித்து ஓட்டெடுப்பு நடத்தாமல் விவாதிக்க வேண்டும் என்று ஆளும் கட்சி தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், விவாதத்தின் முடிவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் சொல்கிறார்கள். இரு தரப்பும் தங்கள் நிலையில் பிடிவாதமாகத் தொடரவே, இழுபறி நீடித்தது. குளிர்காலக் கூட்டத்தொடர் முழுமையாக கூச்சல் குழப்பத்துடன் நிறைவடைந்து விட்டது.
15 சதவிகித நிகழ்வுகள் மட்டும் நடந்தன
ஒட்டு மொத்த குளிர்காலக் கூட்டத்தொடரில் லோக்சபா வெறும் 15 சதவிகித நிகழ்வுகள்  மட்டுமே நடைபெற்றுள்ளது. ராஜ்யசபாவில் 17 சதவிகித நிகழ்வுகள்  மட்டுமே நடைபெற்றது. 2010-ம் ஆண்டுப் பிறகு வழக்கமான அவை நடவடிக்கைகள் நடைபெறாமல் ஒரு மோசமான நாடாளுமன்ற கூட்டத்தொடராக இது இருந்துள்ளது. 2010-ம் ஆண்டு 2 ஜி விவகாரம் காரணமாக அப்போது பி.ஜே.பி கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின. இப்போது பழைய நோட்டுகள் விவகாரத்தால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களால் நாடாளுமன்றம் முடங்கின.
ஆளும் கட்சியும் கூச்சல்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பழைய நோட்டு விவகாரத்தைக் கையில் எடுத்த நிலையில், ஆளும் கட்சி தரப்பில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஹெலிகாப்டர் கொள்முதல் முறைகேடு வழக்கு குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் முன்னாள் விமானப்படை தலைவர் எஸ்பி தியாகி கைது செய்யப்பட்டது பற்றியெல்லாம் விவாதிக்க வேண்டும் என்று சொன்னார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உச்சகட்டமாக கடந்த 15-ம் தேதி பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், "பிரதமர் மோடிக்கு எதிரான ஊழல் குற்றசாட்டுகள் குறித்த விரிவான தகவல்கள் என்னிடம் இருக்கிறது. ஆனால் அது குறித்து இப்போது சொல்ல மாட்டேன்" என்று ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால், இது ஒரு நகைச்சுவை என்று பி.ஜே.பி-யினர் சொல்கின்றனர்.
கடைசி நாளன்று கருணை
இதனிடையே, கூட்டத்தொடரின் கடைசி நாளின் போது லோக்சபாவில் எதிர்கட்சிகளின் ஆதரவுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்த மசோதா ராஜ்யசபாவில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே, மாற்றுத்திறனாளிக்கான உரிமைகள் மசோதா விரைவில் அமலுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.  இன்றைய கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பி.ஜே.பி எம்.பி-க்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, "கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் தொடங்கி இருக்கின்றோம். ஆனால், எதிர்க்கட்சிகள் இடையூறுகளை உருவாக்குகின்றன. இந்த நாட்டு நலனுக்கு மேலே காங்கிரஸ் நலன் அடங்கியிருக்கிறது" என்றார்.
ஆளும் கட்சியினரே எதிர்ப்பு?
குளிர்காலக் கூட்டத்தொடர் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனிடம் பேசினோம். "நாடாளுமன்றம் எப்போதுமே ஆளும் கட்சியால் இயக்கப்பட வேண்டும். ஆனால், ஆளும் கட்சி தரப்பில் எந்த ஒரு பிரச்னை குறித்தும் விவாதிப்பதற்கு தயாராக இல்லை. அவர்களும் கலகம் செய்கின்றனர். இதனால்தான் அவை நடவடிக்கைகள் முடங்கின. கூட்டத்தொடரின் கடைசி நாளில் நிறைவுரை ஆற்றிய ராஜ்யசபா சபாநாயகர், 'இரண்டு தரப்பினாலும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன' என்று சொல்லி இருக்கிறார். நாங்கள் பல கோரிக்கைகளை முன் வைத்து அது குறித்துப் பேச வேண்டும் என்று கேட்கின்றோம். ஆளும் கட்சி தரப்பில் விவாத்தில் பதில் சொல்வதற்குப் பதிலாக அவைக்கு வெளியே கறுப்புப் பணத்தை ஒழித்து விட்டதாகச் சொல்கின்றனர். எந்த ஒரு கறுப்புப் பணத்தையும் ஒழித்ததாக வரலாறு இல்லை. லோக்சபாவில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று விதி இருக்கிறது. லோக்சபாவில் ஆளும் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கிறது. எனினும் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த ஆளும் கட்சிக்கு பயம். ஏனெனில் விவாதத்துக்குப் பின்னர்  ஆளும் கட்சியிலேயே எதிர்த்து ஓட்டு விழுந்து விடும் என்று நினைக்கின்றனர். நாடாளுமன்றத்தில் விவசாயக்கடன்கள் பிரச்னை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வறட்சி ஆகியவை பற்றி பேசவேண்டும் என்றோம். ஆனால் எங்கள் குரல் எடுபடவே இல்லை. ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது" என்றார். பாலசுபிரமனியம் விகடன்

கருத்துகள் இல்லை: