சனி, 17 டிசம்பர், 2016

ஜெயலலிதாவின் வாரிசுரிமையை சட்டப்படி சசிகலாவால் கொண்டாட முடியாது

சசிகலா பெயரில் ஏழு லட்ச ரூபாய் டெபாசிட் செய்திருக்கிறார் ஜெயலலிதா. எனவே, அவரது சட்டப்படியான வாரிசு சசிகலா மட்டும்தான்' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார். ' ஜெயலலிதாவின் வாரிசு என்ற உரிமையை சட்டப்படியாகவே சசிகலாவால் உரிமை கொண்டாட முடியாது' என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் சசிகலா. இதற்கு அக்கட்சியின் சீனியர்கள் அனைவரும் ஆதரவு அளித்துள்ளனர். இதையடுத்து, கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது தொடர்பான ஆலோசனையில் இறங்கியிருக்கிறார் சசிகலா. நேற்று ஜெயலலிதாவின் மறைவின் 11-ம் நாள் காரியத்தை கார்டனில் நடத்தியுள்ளனர். அமைச்சர்கள் உள்பட கட்சியின் சீனியர்களுக்கு கார்டனில் சாப்பாடு வழங்கப்பட்டது.
அதேநேரம், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பேசும்போது, ' ஜெயலலிதாவின் மனசாட்சியாக சசிகலா செயல்பட்டார். நிர்வாகிகள் இடையே பிரச்னை வரும் போது, இரு தரப்பினரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும் பணியை சசிகலாவிடம் ஒப்படைத்திருந்தார். தனக்கு அடுத்தபடியான வாரிசாக சசிகலாவைத்தான் முன்னிறுத்தினார். ஸ்ரீராம் இன்வெஸ்டார் நிறுவனத்தில், 1991-ம் ஆண்டு ஏழு லட்சம் ரூபாயை சசிகலா பெயரில் டெபாசிட் செய்தார். அந்தப் பணத்திற்கு வாரிசாக சசிகலாவைத்தான் நியமித்துள்ளார். அவரே வாரிசு என கையெழுத்திட்டுள்ளார் ஜெயலலிதா' எனத் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குமாரதேவனிடம் பேசினோம். " ஒருவர் பெயரில் பணத்தை டெபாசிட் செய்தால், அவர் அந்தப் பணத்திற்கு உரிமை கொண்டாடலாம். ஆனால், பணத்தை முதலீடு செய்தவரின் நேரடி வாரிசு என உரிமை கொண்டாட முடியாது. மரணம் அடைந்தவரின் சொத்துக்களுக்கு அவரது ரத்த சம்பந்தமுள்ளவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியும். வங்கிகளில் டெபாசிட் செய்தவர் இறந்துவிட்டாலே, அந்தப் பணம் அவரது குடும்ப சொத்தாகிவிடுகிறது. அந்தப் பணத்தை அவரது சட்டப்படியான வாரிசுதாரர் மட்டுமே அனுபவிக்க முடியும்.  வாரிசு உரிமை சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் பணத்தை கையாள முடியும். அப்படி யாரும் இல்லாதபட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களின் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி ஆகியோர் உரிமை கொண்டாடலாம். அப்படி இல்லாத நேரத்தில், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள், இரண்டாம் வாரிசுதாரர்களாக உரிமை கொண்டாட முடியும். இறந்தவர் ஏதேனும் உயில் எழுதி வைத்திருந்தால், அந்த அடிப்படையில் அவருடைய சொத்துக்களை வேறொரு நபர் அனுபவிக்கலாம். சொத்துக்கள் சென்னை நீதிமன்ற எல்லைக்குள் இருந்தால், உயிலை நிறைவேற்ற மனு அளிக்க வேண்டும். அதில் எதிர்ப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். உயில் எழுதப்பட்ட நேரத்தைக் கணக்கிட்டு ஏற்படும் சந்தேகத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். எப்படிப் பார்த்தாலும், ரத்த சம்பந்தமில்லாதவர்கள் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது" என்கிறார்.
'சட்டப்படியான வாரிசு சசிகலா மட்டும்தான்' என ஊடகங்களில் ஆணித்தரமாக வாதிட்டு வருகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். மறுபுறம், ' பொதுச் செயலாளர் பதவிக்கு கட்சி விதிப்படி ஐந்து ஆண்டுகளை சசிகலா நிறைவு செய்யவில்லை' எனக் கூறி வழக்குத் தொடர்ந்தார் சசிகலா புஷ்பா எம்.பி. ' கட்சி உறுப்பினராக இல்லாத சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது. உள்கட்சி விதிப்படி, கட்சி உறுப்பினர்கள் வழக்குத் தொடர்ந்தாலே உறுப்பினர் தகுதியை இழந்துவிடுகிறார்கள்' என அதிர வைத்தார் அ.தி.மு.க தரப்பு வழக்கறிஞர். இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கும் சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் நீதியரசர் கல்யாண சுந்தரம். வழக்கின் இறுதிக்கட்டத்துக்காக காத்திருக்கிறார்கள் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள்.
" டிசம்பர் 31-ம் தேதிக்குள் பொதுக்குழுவை நடத்தி முடிக்காவிட்டால், தேர்தல் ஆணையத்துக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதால், அடுத்துச் செய்ய வேண்டிய உடனடி காரியங்கள் பற்றித்தான் ஆலோசித்து வருகிறார் சசிகலா. கட்சியின் சட்ட விதிகளைப் பற்றியும் அவரிடம் விரிவாகவே எடுத்துக் கூறியுள்ளனர். சட்ட சிக்கல்களை எதிர் கொள்வது ஒருபுறம் இருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் சசிகலாவுக்கான ஆதரவைப் பெருக்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான அசைண்மென்ட். மாவட்டம்தோறும் சுவரொட்டிகள் ஒட்டுவது, நலத்திட்டப் பணிகளை வேகப்படுத்துவது என மாவட்ட நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டிசம்பர் 24 அன்று எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை போடும் நிகழ்வில் சசிகலா பங்கேற்பார். அதன்பின்னர், கட்சி அதிகாரம் தொடர்பான விஷயங்கள் படிப்படியாக அரங்கேறும்" என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.   ஆ.விஜயானந்த்  vikatan.com

கருத்துகள் இல்லை: