புதன், 12 அக்டோபர், 2016

BBC :ஜெயலலிதா இலாகா மாற்றத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை குறித்து கலைஞர் கருணாநிதி கேள்வி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இதுவரை அமைச்சரவையில் வகித்துவந்த இலாகாக்கள் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டதற்கு முதல்வர் கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று தமிழக ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இலாகா மாற்றம் முதல் அமைச்சரின் அறிவுரையின் பேரில் செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது வியப்பைத் தருவதாக கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.
முதலமைச்சர் தனது இலாகாக்களை, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என்ற கேள்வி ஒரு சிலரிடையே எழுந்துள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஆளுநர் செய்துள்ள அறிவிப்பு நிர்வாக வசதிக்கான ஏற்பாடு என்ற வகையில் ஏற்றுக் கொள்ளலாமே தவிர, அரசியல் சட்டத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் ஆளுநர் முழுமையாகப் பரிசீலித்து இந்த முடிவை எடுத்திருக்கிறாரா என்ற சந்தேகத்தை புறக்கணித்துவிட முடியாது என்றும் கலைஞர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், செயல்படாத முதல்வரும் நிரந்தர ஆளுநரும் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாக கூறியிருக்கிறார்.
முதல்வரின் உடல்நிலை குறித்து யாருக்கும் சரியாக தகவல்கள் தெரியாத நிலையில், வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரைக் காவல்துறை மிரட்டுவதாக அவர் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், இந்த வதந்திகளுக்குக் காரணமான ஜெயலலிதாவே தன்னிலை விளக்கம் தர வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை: