வியாழன், 13 அக்டோபர், 2016

திருநாவுக்கரசு : தி.மு.கவுக்கு எதிராக காங்கிரஸில் இருந்தே போட்டி வேட்பாளர்கள் களமிறங்குவதை எங்களால் தடுக்க முடியாது

உள்ளாட்சித் தேர்தல் ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது மாநில தேர்தல் ஆணையம். ' தேர்தல் தேதி அறிவித்தவுடன், தி.மு.கவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவோம்' என அதிர வைக்கிறது காங்கிரஸ். சட்டமன்றத் தேர்தலில் பெற்ற இடங்களைவிடவும், உள்ளாட்சித் தேர்தலில் மிகக் குறைவான இடங்களையே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது தி.மு.க. மாநகராட்சிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படவில்லை. இதனால், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் தி.மு.க மாவட்டச் செயலாளர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. தி.மு.க பொருளாளர் ஸ்டாலினும், ' மாவட்ட செயலாளர்களிடம்< பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்' என உறுதியாகக் கூறிவிட்டார். இதையடுத்து, தங்களுக்கான வார்டுகளை போராடியே பெற வேண்டிய நிலைக்கு, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தள்ளப்பட்டனர். ஒருகட்டத்தில், உயர் நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்துவிட்டதால், உற்சாகத்தில் இருக்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
நம்மிடம் பேசிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர்,
" தேர்தல் ஆணையம் அவசரகதியில் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதால், பணிகளை முறையாகத் தொடங்குவதற்கு குறுகிய காலகட்டம்தான் இருந்தது. தி.மு.க மாவட்டச் செயலாளர்களிடம் சென்றாலே, ' எவ்வளவு தொகை செலவு செய்வீர்கள்?; வேட்பாளருக்கு செல்வாக்கில்லை; அ.தி.மு.க எளிதாக வெற்றி பெற்றுவிடும்' என்றெல்லாம் சொல்லி எங்களை அலைக்கழித்தார்கள். ஒருகட்டத்தில், மாநிலத் தலைவரே நேரடியாக தலையிடும் அளவுக்கு விஷயம் சென்றது. எதற்கும் தி.மு.க அசைந்து கொடுக்கவில்லை. சென்னை மாநகராட்சி வார்டுகளில் மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதிலும், காங்கிரஸ் கட்சியின் எட்டு எம்.எல்.ஏக்கள் இருக்கும் தொகுதிகளுக்கு மட்டும், அதிகப்படியான வார்டுகளை தி.மு.க ஒதுக்கியது.
அவர்கள் தயவு மட்டும் போதும் என்று தி.மு.க நினைக்கிறதா என்றும் தெரியவில்லை. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அளவுக்குக்கூட எங்களுக்கு வார்டுகளை ஒதுக்க தி.மு.க விரும்பவில்லை. அனைத்து இடங்களிலும் அவர்களே போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர். மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், தி.மு.கவுடன் முதலில் இருந்தே பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என தலைமைக்கு தெரிவித்திருக்கிறோம். இல்லாவிட்டால், தி.மு.கவுக்கு எதிராக காங்கிரஸில் இருந்தே போட்டி வேட்பாளர்கள் களமிறங்குவதை எங்களால் தடுக்க முடியாது" என்றார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரிடம் பேசினோம். "எங்கள் எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் கூடுதல் இடங்கள் கொடுக்கப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். கோவை மாவட்டத்தில் எங்களுக்கு எம்.எல்.ஏக்களே கிடையாது. அங்கு 19 வார்டுகளை தி.மு.க கொடுத்தது. சில இடங்களில் காங்கிரஸ் வார்டுகள் தி.மு.கவுக்கும் அவர்களது வார்டுகள் எங்களுக்கும் ஒதுக்கினர். இதைப் பற்றி பேசி முடிவு செய்து கொள்ளலாம் என நினைத்திருந்தோம். அதற்குள் தேர்தல் ரத்தாகிவிட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போது பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்றார் உறுதியாக.
'ராகுல்காந்தியின் வருகை தி.மு.கவுடனான உள்ளாட்சி பங்கீட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமா' எனவும் கேள்வி எழுப்புகின்றனர் சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில்...ஆ.விஜயானந்த்; விகடன்,காம்

கருத்துகள் இல்லை: