ஞாயிறு, 9 அக்டோபர், 2016

பாகிஸ்தான் :இந்துத்துவா கொள்கையை வெளிச்சமிடுவோம்!

மின்னம்பலம்.காம்  : இந்தியாவைப் பலவீனமடைய செய்ய இந்தியப்பிரதமர் மோடியின் இந்துத்துவா கொள்கையை குறிவைத்து செயல்பட வேண்டும்’ என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல்சபையில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தினசரி நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியின்படி, பாகிஸ்தான் மேல் சபையில் அரசு கொள்கைகள் தொடர்பான ஆலோசனைகளைச் சட்டசபை குழு எடுத்துரைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு சபாநாயகர் ராஜா சபாருல் ஹக் தலைவராக இருந்து வந்தார். இந்தக் குழு 22 கொள்கை பரிந்துரைகள் கொண்ட ஏழு பக்க அறிக்கையை மேல்சபையில் தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில் நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இந்துத்துவா கொள்கைகளை குறிவைத்து செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித்துகளை தனிமைப்படுத்துவது, அதிகரித்துவரும் மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் போன்ற இந்திய அரசு செய்யும் தவறுகளை பாகிஸ்தான் பொறுப்பெடுத்து வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கூறியுள்ளது .

காஷ்மீர் சச்சரவில் 57 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட சர்வதேச அமைப்பான ‘இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் (ஒ.ஐ.சி)’ உதவியை நாட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியாவின் ரா அதிகாரி குல்புஷான் யாதவ், பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாத தாக்குதல்களைத் தூண்ட வந்ததை சர்வதேச அரங்கில் எடுத்துரைக்க வேண்டும் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டும் உள்ளது. அதோடு ஜம்மு காஷ்மீரில் இந்தியா நடத்தும் மனித உரிமை மீறல் சம்பவங்களைச் சர்வதேச அரங்கில் எழுப்ப வேண்டும் எனவும் உரி தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ள இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பிரச்னை குறித்தும், இந்தியாவின் சர்ஜிக்கல் தாக்குதல் குறித்தும் சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் பிரச்னைகளை எழுப்பியது. அதோடு பாகிஸ்தான் காவலில் உள்ள யாதவ் பலுசிஸ்தான் தாக்குதலில் இந்தியாவின் பயங்கரவாத தாக்குதலுக்கு ஒப்புக்கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் மேலவையில் சமர்ப்பித்தது. ஆனால், கைது செய்யப்பட்ட குல்புஷான் யாதவ், ரா அதிகாரி இல்லை என்று இந்தியா மறுத்துள்ளது. இந்திய பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையின்போதே சர்ச்சைக்குரிய பலுசிஸ்தானின் மனித உரிமை மீறல்களையும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: