திங்கள், 25 ஜூலை, 2016

கானத்தூர்.. கிழக்கு கடற்கரை சாலை போலீஸ் பணக்காரர்களின் கூலிப்படையாகி விட்டது?


சென்னை; கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள கானத்தூர் காவல் நிலையம் கட்டப்பஞ்சாயத்து கூடாரமாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அப்பகுதியில் நகைக்கடை ஒன்றில் நேற்று நடந்த கொலை மற்றும் கொள்ளை முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சென்னை பனையூரை சேர்ந்தவர் சுரேஷ். இவர்,  கிழக்கு கடற்கரைச் சாலையில் உத்தண்டி யில் அடகுக் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 12.30 மணியளவில் அவரது கடைக்கு வந்த மூன்று நபர்கள், தாங்கள் கோவளத்திலிருந்து வருவதாகவும், நகைகளை அடகு வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அப்போது சுரேஷ் மட்டுமே கடையில் இருந்தார். அவர்களது நடவடிக்கையில் சுரேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் நகையை அடகு வைக்க முடியாது என்று சுரேஷ் கூறியுள்ளார்.


உடனே மூவரும் சுரேஷை கொலை வெறியோடு தாக்கியதோடு அவரை கடைக்குள் அடைத்து வைக்க முயற்சித்தனர். சுரேஷ், சத்தம்  போடாமலிருக்க அவரது வாயிலும் துணியை அடைத்தனர். கொள்ளையர்களுடன்  சுரேஷ் கடுமையாக போராடி கடையிலிருந்து வெளியே ஓட முயற்சித்தார். இதற்குள் ஒரு கொள்ளையன், போனில்  கடைக்கு வெளியில் காத்திருந்த மேலும் இரண்டு கொள்ளையர்களுக்கு  தகவல் தெரிவித்தார். உடனே அவர்களும் கடைக்குள் புகுந்து சுரேஷை கத்தியால் குத்த முயன்றனர்.

அவர்களிடமும்  சிக்காமல் வெளியே ஓடி வந்த சுரேஷ் சத்தம் போட்டார். இந்த போராட்டத்தில் ஒரு கொள்ளையனிடமிருந்த கத்தி கீழே விழுந்துள்ளது. சுரேஷின்அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் அங்கு திரண்டனர். உடனே கீழே விழுந்த கத்தியை எடுத்துக் கொண்டு  கொள்ளையர்கள் 5 பேரும் இரண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர். கொள்ளையர்கள் வந்த ஒரு மோட்டார் சைக்களின் பதிவு எண் டி.என். 72-7089 என்பதை சுரேஷ் பார்த்துள்ளார்.

இந்த சம்பவம் அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து சுரேஷ், கானத்தூர் குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் புகார் மனுவை பெறவில்லை. மேலும், யாரிடமும் இதுகுறித்து சொல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் சினிமா சண்டைக்காட்சிபோல நிகழ்ந்த இந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அடகு கடைகாரர் சுரேஷ் கூறுகையில், “ நேற்று கடையில் நான் மட்டும் தனியாக இருந்தேன். மதியம் 12.30 மணியளவில் பிங்க் நிற சட்டை அணிந்த 40 வயதுக்குட்பட்ட நபர் வந்தார். அவர் கோவளத்தில் இருந்து வருவதாகவும், நகையை அடகு வைக்க வேண்டும் என்று கூறினார். அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் நகையை வாங்கவில்லை. உடனே அந்த நபர் யாரிடமோ போனில் பேசினார். உடனே மேலும் இரண்டு பேர் அங்கு வந்தனர். வந்தவர்கள் நான் சத்தம் போடாமலிருக்க வாயில் துணியை திணித்தனர். நான் அவர்களுடன் போராடினேன். அதற்குள் இன்னும் இரண்டு பேர் உள்ளே வந்தனர். வெள்ளை நிற சட்டை அணிந்தவனிடம் கத்தி இருந்தது.

அந்த நபர் என்னுடைய கழுத்தில் கத்தியை வைத்தான். உடனே சுதாரித்துக் கொண்டு அவர்களை தள்ளிவிட்டு கடையை விட்டு வெளியே ஓடி வந்தேன். இல்லையென்றால் என்னை கொலை செய்து இருப்பார்கள். அதோடு கடையிலிருந்த 200 கிராம் தங்க நகைகளும், 2 லட்சம் ரூபாயும் தப்பின" என்றார் அதிர்ச்சி விலகாமல்.
கானத்தூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வி.ஐ.பிக்கள் அதிகம் குடியிருக்கின்றனர்.  சினிமா நடிகர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், மற்றும் தொழிலதிபர்களின் வீடுகள் இங்கு உள்ளன. அதோடு கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் ஏராளமான பண்ணை வீடுகளும், கெஸ்ட் ஹவுஸ்களும் இருக்கின்றன. இந்த வீடுகளில் சமூகவிரோத செயல்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. அவைகள் போலீசுக்கு தெரிந்தும் அதைக் கண்டு கொள்வதில்லை. காரணம் போலீஷார் 'நன்றாக கவனிக்கப்படுவதாக' விவரம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புகார்களை வாங்காமல் அலைக்கழிப்பு


புகார் கொடுக்க  கானத்தூர் போலீஸ் நிலையத்துக்கு வருபவர்களை  சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் இளங்கோ, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலன் ஆகியோர்  அலைக்கழித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்.

உத்தண்டி, விஜிபி லேஅவுட்டை சேர்ந்தவர் பாலாஜி. இவர், உயர் ரக கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான பென்ஸ் காரை பெயிண்ட்டிங் பணிக்காக திருவான்மியூரை சேர்ந்த பெயிண்டர் முனுசாமியிடம் கடந்த மார்ச் மாதம் கொடுத்தார். இதற்காக 6 ஆயிரம் ரூபாய் முன்பணமும் கொடுத்துள்ளார். ஆனால் முனுசாமி, எந்த வேலையும் செய்யாமல் காரையும் திரும்பக் கொடுக்கவில்லை.

இதுகுறித்து பாலாஜி, கானத்தூர் போலீஸ் நிலையத்தில் சட்டம், ஒழுங்கு பிரிவு, குற்றப்பிரிவு ஆகியவற்றில் கடந்த 16-ம் தேதி புகார் கொடுக்கிறார். ஆனால் யாரும் புகாரைப் பெறவில்லை. அதற்கு மாறாக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், முனுசாமியிடம் போனில் பேசி, மீண்டும் 6 ஆயிரம் ரூபாயை கொடுக்க பாலாஜியிடம் தெரிவித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் கூறியதன் பேரில் பாலாஜி, 6 ஆயிரம் ரூபாயை கொடுத்ததோடு அதற்கான ரசீதையும் முனுசாமியிடமிருந்து வாங்கியுள்ளார்.

அதிர்ச்சி என்னவென்றால், இதன்பிறகும் காரை முனுசாமி திரும்பக் கொடுக்கவில்லை. இதையடுத்து 22ம் தேதி பாலாஜி, போலீஸ் நிலையத்துக்கு சென்ற போது இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, பாலன் ஆகியோர் சுமார் 3 மணி நேரம் அவரை காத்திருக்கச் சொல்லி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாலாஜி, இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் அபினவ்குமாரிடம் இதுதொடர்பாக புகார் கொடுத்துவிட்டு காருக்காக காத்திருக்கிறார்.
இதுமாதிரி பொதுமக்கள் பல சம்பவங்களை அடுக்குகிறார்கள் கானத்துார் காவல்நிலையத்தின் 'கடமை'
உணர்வு குறித்து.

பென்ஸ் காரில் கஞ்சா விற்பனை

பனையூர் பகுதியில் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. பென்ஸ் காரில் வந்து கஞ்சா விற்கிறார்கள் என்ற தகவலும் உள்ளது. அந்தப்பகுதியில் உள்ள நைஜீரிய மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்கப்படுகிறது. கானத்தூர் போலீஸார், கண்டு கொள்ளாமலிருக்க அவர்களை கஞ்சா கும்பல் தரப்பு 'கனிவோடு' கவனிக்கிறதாம். தற்போது தகவல் வெளியே தெரிந்து விட்டதால் கஞ்சா விற்கும் இடத்தை அந்த கும்பல் தினந்தோறும் மாற்றி வருகிறதாம். கஞ்சாவால் கானத்தூர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் விபத்து ஏற்பட்டு கடந்த சில மாதங்களில் மட்டும் 5 பேர் பலியாகியுள்ளனர் காவல்துறை பதிவேடு சொல்லும் அதிர்ச்சி. 

கெஸ்ட்ஹவுஸில் பாலியல் தொழில்


உத்தண்டி வி.ஜி.பி லே அவுட்டில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் பாலியல் தொழில் சில மாதங்களாக நடந்து வருகிறது. இதுகுறித்து போலீசுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அந்தப்பகுதி குடியிருப்பு மக்கள் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரிடம் அந்தப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததும் டிசம்பர் மாதத்துக்குள் அவர்களை காலிசெய்து விடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த கெஸ்ட் ஹவுஸ் நீச்சல் குளத்துடன் 5க்கும் மேற்பட்ட அறைகளுடன் செயல்படுகிறது. மேலும் மதுவிருந்துடன் இரவு நடனமும் நடத்தப்படுகிறதாம்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, பாலன் ஆகியோரின் விளக்கம் கேட்க செல்போனில் தொடர்புகொண்டபோது அவர்கள் பதிலளிக்கவில்லை. இதனால் கூடுதல் கமிஷனர் சங்கரிடம் இந்த தகவல்களைச் சொன்னோம். உடனடியாக அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் கஞ்சா விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கொள்ளை, கொலை முயற்சி தொடர்பாக புகாரை பதிவு செய்ய சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காவல்துறை உங்கள் நண்பன் என போர்டில் எழுதிவைத்தால் மட்டும் போதுமா?!  vikatan.com

கருத்துகள் இல்லை: