
கடந்த சில தினங்களுக்கு முன் மழை வெள்ளத்தோடு மல்லுக்கட்டு முடியாமல் மூன்று பேர் பலியாகி விட்டனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் நேற்று இரவு முதல் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஓசூரில் நேற்றிரவு 11:00 மணிக்கு ஆரம்பித்த பெருமழை, அதிகாலை 4:00 மணிக்குதான் மிதமான மழையாக மாறியது. இதனால், ஏராளமான குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பினால், பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. இதையொட்டி சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஓசூர் தாலுகாவில் உள்ள தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை மாவட்ட கலெக்டர் கதிரவன் பிறப்பித்துள்ளார். தொடர் மழை காரணமாக 44 அடி உயரம் கொண்ட கெலவரபள்ளி அணையின் நீர் மட்டம் 42 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அணையின் நீர்வரத்து அதிகரித்து வருவதால் அதனைச் சுற்றி உள்ள பல கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் யாரும் தரைப் பாலங்களை கடக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மின்னம்பலம்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக