புதன், 27 ஜூலை, 2016

எழுத்தாளர் பிரேம் மீது லீனா மணிமேகலையின் ஆணவத் தாக்குதல்... மேட்டுக்குடி திமிர்?

thetimestamil.com :எழுத்தாளர் பிரேம் மீது லீனா மணிமேகலை நிகழ்த்தியிருக்கும் ஆணவத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை.)
தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுதலென்பது கலை இலக்கியம் சார்ந்து இயங்கும் ஒருவனின் வாழ்வில் முக்கியமானதொன்று. தான் உறுதிபட நம்பும் ஒரு அரசியலை பேசுவதும் அதை சார்ந்து இயங்குவதும் ஒரு கலைஞனுக்கான அறம். துரதிர்ஸ்டவசமாக தமிழ் இலக்கியவாதிகளில் அனேகர் தாங்கள் பேசும் அரசியலுக்கு முற்றிலும் எதிரானவர்களாகவே யதார்த்தத்தில் இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் கடந்த கால் நூற்றாண்டு காலமாய் தமிழில் கோட்பாட்டு ரீதியான முக்கியமான உரையாடல்களை உருவாக்கியதோடு அதன்படி தனது வாழ்வையும் அமைத்துக் கொண்டவர் தோழர் பிரேம்.

தனது முகநூலில் சமகால அல்லது மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்தோ செயல்பாடுகள் குறித்தோ எந்த முத்துக்களையும் உதிர்க்காத லீனா மணிமேகலை தொடர்ந்து சர்ச்சைகளுக்கு மட்டும் தனது பக்கத்தை பயன்படுத்திக் கொள்ளுதலென்பது யதார்த்தமானதோ காரணமற்றதோ அல்ல. இப்படி சர்ச்சைகளுக்கு களமெடுத்துக் கொள்ளும் காலம் பொதுவாக அவரின் புதிய புத்தகம் வெளியிடப்படும் காலமாகவோ அல்லது ஆவணப்பட குறும்படங்கள் வெளியிடப்படுவதற்கான காலமாகவோ இருப்பது முக்கியமானது. ஒரு வித negative publicityயை தன்னைச் சுற்றி எப்போதும் கட்டமைத்துக் கொள்வதில் தமிழில் சமகாலத்தில் அவருக்கு நிகராய் இன்னொருவரை சொல்ல முடியாது. இப்படி கட்டமைத்துக் கொள்வதின் மூலமாக மேற்குலகின் மீடியாக்களில் ”தொடர்ந்து  தன் சமூகத்தில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே வாழ்வதான ஒரு பிம்பத்தை எளிதாக கட்டமைத்துக் கொள்ள முடிவதோடு தனக்கிருக்கும் ஊடக நட்புகளை பயன்படுத்தி அதை நம்பும்படியாக செய்தி பரப்பவும் அவரால் முடிகிறது.”
கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக அவரது புத்தக வெளியீடு முடிந்த நிலையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையாய் புதிய பஞ்சாயத்தொன்றோடு கிளம்பியிருக்கிறார். அந்த பஞ்சாயத்தில் போகிற போக்கில் தோழர் பிரேம் மீது “சொந்தப் பெண்ணைப் பொதுவெளியில் பலாத்காரம் செய்பவர்” என குரூரமான தாக்குதலை நிகழ்த்தியிருப்பதோடு தொடர்ந்து அதை நியாயப்படுத்திக் கொண்டுமிருக்கிறார். தோழர் பிரேம் மாலதி இருவரும் இலக்கிய உலகில் காத்திரமாக இயங்கி வருகிறவர்கள். பல்வேறான சமூக செயல்பாடுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள். லீனா குறிப்பிடுவதில் 2009ம் ஆண்டு ஈழத் தமிழர் தோழமைக் குரல் சார்பாக தில்லியில் நடந்த போராட்டத்தின் இரண்டாம் நாளே திரைக்கதையின் பிரதான மையம். அன்று அவ்விடத்தில் உடன் வேறு சில தோழர்கள் இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆனால் பெயரைச் சுட்டவில்லை. இனி அவரது வார்த்தைகளில் தொடர்வோம்… “எல்லோர் முன்னிலையிலும் பிரேம் மாலதி மைத்ரியிடம் மிக மோசமான வசைகளைப் பேசி ஃபிசிக்கலாகவும் அத்துமீறினார். கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தோம். தடுத்தோம்.” ஆக இந்தத் திரைக்கதையின் குரூர வில்லன் பிரேம். மாலதியைக் காக்க வந்த மீட்பர் லீனா மணிமேகலை. எல்லோருமென அவர் குறிப்பிடுவது, யாரையெல்லாம்? அவர்களில் ஒருவர் கூட ஏன் இத்தனை வருடங்களில் அது குறித்து எதுவும் பேசவில்லை. லீனா பிரேம் மீது வைத்திருப்பது குற்றச்செயல்களுக்கு நிகரான குற்றச்சாட்டு. ஆனால் முதல் போட்ட நிலைத்தகவலை அடுத்த நாள் அழித்துவிட்டு, இரண்டாவது நாள் இன்னொரு நிலைத்தகவலைப் போடுகிறார். மூன்றாவது நாள் அதையும் அழிக்கிறார். எதற்கு இந்த தடுமாற்றம்? தனது கருத்தில் நிஜமிருக்கும் ஒருவர் எதற்காக இத்தனை குழப்பம் கொள்ள வேண்டும். ஆதாரங்களுடன் விவாதித்திருக்கலாமே?
மாலதி மைத்ரி அது கருத்து ரீதியிலான ஒரு விவாதம் என்று சொன்ன பிறகும் லீனா தொடர்ந்து அதை ஒரு பாலியல் ரீதியான தாக்குதலென கட்டமைப்பதன் பின்னாலிருக்கும் மேட்டுக்குடி திமிருக்கு அர்த்தமென்ன? அவரின் கயமை இத்தோடு முடியவில்லை. அடுத்த பத்தியில் வரும் ஒரு வரியைக் கவனியுங்கள். “தன் சொந்தப் பெண்ணிடம் பொது இடங்களில் சரியாக நடந்து கொள்ளச் சொல்லுங்கள். பிறகு பெண்ணியம் பேசலாம்..” இந்த வார்த்தைகளை வாசிக்கும் யார் ஒருவரும் முதலில் புரிந்து கொள்வது பிரேம் தன் குழந்தையின் மீது இவ்வாறான ஒரு அத்துமீறலை நிகழ்த்தியிருக்கிறார் என்கிற தொனியில் தான். தனது வாழ்நாள் இணையரிடம் என்றோ, துணைவியரிடம் என்றோ தோழியிடம் என்றோ லீனா குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் நுட்பமாகத் தவிர்த்திருப்பதோடு அதை முதலில் இட்டு நீக்கிய பதிவிலும் சரி தொடர்ந்து இரண்டாவது பதிவிலும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இதன் பின்னுள்ள வக்கிரம் எத்தகையது லீனா? உங்களுக்கு வார்த்தைகளின் அரசியல் தெரியாது என்று நம்புமளவிற்கு யாரும் இங்கு அப்பாவிகள் இல்லை.
தோழர் பிரேம் மீது நீங்கள் வைத்திருப்பது குற்றச்சாட்டல்ல, மிக மோசமான மேட்டுக்குடி தாக்குதல். ஒன்று ஆதாரப்பூர்வமாக நீங்கள் நிரூபிக்க வேண்டும். அல்லது பொதுவெளியில் அப்படி எழுதியதற்காக மன்னிப்பைக் கோர வேண்டும். இருபத்தைந்து வருடங்கள் ஒரு மொழியின் போக்கில் முக்கியமான மாற்றங்களை நிகழ்த்தியிருக்கும் ஒரு கலைஞனையே நீங்கள் இப்படித்தான் பார்ப்பீர்களென்றால் உங்கள் கேமராவில் படம் பிடித்த மனிதர்களை நீங்கள் என்னவாக பார்த்திருப்பீர்களென கவலை எழுகிறது. நல்லது குற்றவுணர்ச்சி, நியாயம் என்கிற வார்த்தைகளெல்லாம் உங்களின் அகராதியில் ஒரு போதும் இல்லாத ஒன்று. ஆனால் எங்களுக்கு சொரனை என்கிற வார்த்தைக்கு  நிரம்ப அர்த்தம் தெரியும்.
தொடர்ந்து வெவ்வேறு காலங்களில் நீங்கள் விளையாடும் இந்த அதிகார விளையாட்டுக்களை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். திறமையாக திரைக்கதை எழுதும் கலை வாய்த்திருக்கிறதென்பதற்காக அவதூறுகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது ஒருவித ஆளுமைச் சிக்கல். இது நீங்கள் தோழர் பிரேம் மீது வைத்திருக்கும் தாக்குதலுக்கு மட்டுமேயான கண்டன அறிக்கையல்ல, கடந்த காலங்களில் நீங்கள் பிறர் மீது வைத்த அவதூறுகளுக்கும் சேர்த்துதான்.  நியாயத்தின் பக்கம் தோழர்கள் ஒன்றுகூட வேண்டிய காலகட்டமிது. ஒருங்கிணைவோம்.
1.  ப .ஜெயப்பிரகாசம்
2.  ப .சிவகாமி
3. தேவேந்திர பூபதி
4. டி .தருமராஜ்
5. ஆழி செந்தில்நாதன்
6. யமுனா ராஜேந்திரன்
7. அர்ஷியா
8. சுகிர்தராணி
9. சுதீர் செந்தில்
10. பெருந்தேவி
11. தி . பரமேசுவரி
12. கௌதம சன்னா
13. குமார் அம்பாயிரம்
14. ஓடியன் லட்சுமணன்
15. லேனா குமார்
16. கனி மொழி
17. யாழி கிரிதரன்
18. விஜயலக்ஷ்மி
19. விஜி பழனிச்சாமி
20. தாமிரா
21. தமிழ்நதி
22. அகரமுதல்வன்
23. பழனி வேள்
24. தமிழ் தாசன் ( நாணல் நண்பர்கள் )
25 . வ .கீரா ( கலக்கம் தமிழ் தேசிய இலக்கியத் தடம் )
26. ஜீவ கரிகாலன்
27. அரவிந்த் ஆக்ஷன்
28. பேராசிரியர் ராமசுப்பிரமணியன் சுப்பையா
29. பேராசிரியர் ரத்தினக்குமார்
30. ஆத்மார்த்தி
31. ஆன்மன்
32. நட. சிவகுமார்
33. எஸ் .ஜெ .சிவசங்கர்
34. சொக்கலிங்கம்
35. எம் .எம் . பைசல்
36. இரா .எட்வின்
37. பொதினி வளவன் (விசிக )
38. அமிர்தம் சூர்யா
39. ராம் வசந்த்
40. ராமதாஸ் சென்ராயன்
41. ஜி.எஸ் .தயாளன்
42. கார்த்திக் புகழேந்தி
43. ஜோஸ்
44. நாச்சியாள் சுகந்தி
45. ராசு
46. ராம்போ குமார்
47. சுப்ரா வே சுப்ரபாரதி மணியன்
48. கிராமியன்
49. மோக .ராகவன்
50. சோலை ஸ்ரீனிவாசன் பிரேம்
51. மதியழகன் சுப்பையா
52. லட்சுமி சரவணக்குமார்
53. மு .வி .நந்தினி
54. கடங்க நேரியான்

கருத்துகள் இல்லை: