ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

திமுகவுக்கு பேரும் புகழும் கிடைக்கும் என்பதால் No சேது சமுத்திர திட்டம் ?

தஞ்சை : தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து  தஞ்சை திலகர் திடலில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:ஜனநாயக முற்போக்கு கூட்டணி திமுக, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, இன்றைக்கு புதிதாக வந்த அறிவிப்பின்படி  தவ்ஹித் ஜமாத் என்ற இயக்கமும் நமக்கு ஆதரவு தந்து நம்மோடு இணைந்து தேர்தலில் போட்டியிடதயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அவர்களை இருகை கூப்பி வரவேற்று, இருகை நீட்டி வரவேற்கிறேன்.திமுகவை பொருத்த வரையில், மதசார்பாற்றவர்களா, ஏழை எளிய மக்களுக்கு நம்மோடு சேர்ந்து பாடுபடுவார்களா என்றெல்லாம் ஆய்ந்த பிறகுதான் நம்முடைய தோழமை கட்சியாக ஆக்கி கொள்கிறோம்.  அப்படி ஆக்கி கொள்ளப்பட்ட கட்சிகளிலே ஒன்று மனிதநேய மக்கள் கட்சி. அந்த கட்சியின்  சின்னம் இரட்டை மெழுகு வர்த்தி. சின்னம் ஒதுக்கியதில் எவ்வளவு புத்திசாலியான தேர்தல் ஆணையம் என்பதை என்னால் எண்ணி பார்க்க முடிந்தது. தமிழகம் இருளில் மூழ்கியிருக்கிறது. ஆகவே இவர்களுடைய சின்னம் மெழுகுவர்த்தியாக இருக்கட்டும் என்று, மெழுகுவர்த்தி சின்னம் வழங்கியிருக்கிறார்கள்.


டி.ஆர்.பாலுவை பொருத்தவரையில் நாடாளுமன்ற தொகுதியிலே அவர் தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்காக பகுதிக்காக ஆற்றிய பணிகளை வரிசைப்படுத்தி சொல்லவேண்டுமானால் சேது சமுத்திர திட்டம் பற்றி சொல்லவேண்டும். நம்மை எல்லாம் ஆளாக்கிய  அண்ணாவின் கனவு திட்டம் சேதுசமுத்திர திட்டம்.அது நிறைவேறினால் தமிழ்நாடு வாழும், அதை நிறைவேற்றினால் வெளிநாடுகளுக்கு தமிழ்நாடு வாணிப சந்தையாக மாறும், வளம் பெருகும், வாணிபம் செழிக்கும், இங்குள்ள மீனவர்கள் வாழ்வும், மீனவர்களுக்கு நலவாழ்வு பெருக்கவும் முடியும். அத்திட்டத்திற்கான முன்செயல்பாடுகளை நிறைவேற்ற முனைந்த நிலையில் அண்ணா  மறைந்துவிட்டார். அண்ணாவின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் நம்முடைய  முதல் தேர்தல் அறிக்கையில் 1967ம் ஆண்டு  வெளியிட்டோம்.சேது சமுத்திர திட்டத்தை ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்று சொன்னோம் அப்போது அருமை நண்பர்  எம்.ஜி.ஆரும் இருந்தார். அவரும் இத்திட்டத்தை ஆதரித்து பல மேடைகளில் பேசியிருக்கிறார், நானும் பேசியிருக்கிறேன், அந்த கோரிக்கைக்காக பேராசிரியர், நாவலர், ஈவிகே சம்பத், நானும் தமிழ்நாடு முழுவதும், சேதுசமுத்திர திட்டத்திற்கான பிரசாரத்தில் ஈடுபட்டோம். அப்படிபட்ட திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

அப்படி நிறைவேற்றினால் தமிழகத்தில் வளம் கொழிக்கும், வியாபாரிகள் செழிப்பார்கள் என்று அண்ணா சார்பாக நான் அடுத்த முதலமைச்சராக இருந்தபோது எடுத்த முயற்சிக்கு டி.ஆர்.பாலு எங்களோடு இணைந்து திட்ட பணிகள் எப்படி எல்லாம் தொடங்குவது என்று  இத்திட்டத்தை நிறைவேற்ற முனைப்பான காரியங்களிலே ஈடுபட்டது, இன்றைக்கும் பசுமையாக நினைவில் இருக்கிறது.தற்போது அண்ணா, எம்ஜிஆர் இல்லை. இருவரும் இல்லாத சூழ்நிலையில் அதற்கு பிறகு ஜெயலலிதா ஆட்சி பொறுப்புக்கு வந்தார். பிறகு அவரும் தேர்தல் அறிக்கை வெளியிட்டார் அதிலும் இத்திட்டத்தை அவர் விரைவிலே கொண்டு வருவேன் என்று சபதம் செய்தார். இப்போது என்னவாயிற்று.  சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற கூடாது என்று உச்ச நீதிமன்றதிலே தடை வாங்குவதற்காக போய் தடையும் பெற்றிருக்கிறார்.முழுமையான தடையை அல்ல, அதை நிறைவேற்றுகின்ற முயற்சியை ஒடுக்குகின்ற, தாமதப்படுத்துகின்ற வகையில் தடையை பெற்றிருக்கிறார். தமிழர்களே தமிழர்களே தஞ்சை தரணியிலே வளம் கொழித்திட வேண்டும் என்று காத்திருக்கின்ற தமிழர்களே, உங்களுக்கு வாய்த்திருக்கின்ற இத்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தேவையில்லை, மீனவர்கள் கெட்டுபோவார்கள் அவர்களுக்கு துன்பம் ஏற்படும். எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்த அம்மையார் ஜெயலலிதாடெல்லிக்கு செய்தி அனுப்பினார்.

நீங்கள் தயவு செய்து எண்ணி பார்க்க வேண்டும் எந்த ஒரு முதல்வராவது மத்திய அரசு தமிழகத்திற்கு தருகின்ற திட்டத்தை வேண்டாம் என்று சொ£ல்வாரா, அத்திட்டத்திற்கே சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று தடை பெற்றுள்ளார் என்று சொன்னால் இவர் எல்லாம் தமிழநாட்டிற்கு விசுவாசம் உள்ளவரா, தமிழ்நாட்டை நேசிக்கின்றவரா, இவர்கள் தமிழ்நாட்டு காரர் அல்ல என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையா.ஏன் இந்த திட்டத்தை வேண்டாம் என்று ஜெயலிலிதா சொல்கிறார் என்றால், இத்திட்டம் நிறைவேறினால் எதிர்காலத்தில் கருணாநிதிக்கு பெயர் வந்துவிடும், டி.ஆர்.பாலுக்கு புகழ் சேர்ந்துவிடும், அதிமுகவிற்கு எதிரான திமுகவிற்கு பேரும், புகழும் கிடைத்து விடும் என்று நல்ல காரியத்தை கூட தடுத்து வைத்துள்ளார்கள். உச்சநீதிமன்றத்திற்கு சென்று தடை பெற்றுள்ள காரணத்தால் மத்திய அரசுக்கு இத்திட்டத்தை நிறைவேற்ற விருப்பமும், நல்ல எண்ணமும் இருந்தாலும் இத்திட்டத்தை தொடங்கி நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.ஜெயலலிதா போன தேர்தல் அறிக்கையிலே இடம் பெற்ற திட்டத்தை, இந்த தேர்தல் அறிக்கையிலே இருட்டடிப்பு செய்தது விட்டார். அண்ணா திமுக என்று பெயர் வைத்திருக்கின்றார்கள். நான் கொண்டு வந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை  பார்த்து உலகின் தலைவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டனர்.

வெளிநாட்டவர்கள் பார்வையிட்டு நூலகத்தின் குறிப்பு புத்தகத்திலேயே எழுதி வைத்துள்ளார்கள். இது ஜெயலலிதாவிற்கு பிடிக்க வில்லை. அதனால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தையே இல்லாமல் செய்துவிட்டார்.கருணாநிதி ஆரம்பித்தது எதுவுமே பிடிக்கவில்லை. கருணாநிதி தொட்ட இடம் துலங்காது என்றால், அனைத்தையும் இவர் விட்டுவிடுவாரா. இன்று கோட்டையில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றுகின்ற உரிமையை இந்திரா காந்திக்கு கடிதம் எழுதி நான் பெற்று கொடுத்ததன் மூலம் தான் இந்தியா முழுவதும் உள்ள மாநில முதல்வர்கள் தேசிய கொடியேற்றுகின்றார்கள். ஜெயலலிதாவும் கொடியேற்றுகிறார். இந்த உரிமையை நான் பெற்றுக்கொடுத்தேன் என்பதற்காக நான் கொடியேற்ற மாட்டேன் என்று அறிவிப்பாரா. ஒரு வேளை சொத்து குவிப்பு வழக்கு போகின்ற போக்கில் அடுத்த ஆண்டு அது நடைபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த காலத்தை நாம் பொருத்திருந்து பார்ப்போம்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.


தற்கொலை செய்த விவசாயி குடும்பத்தினர் சந்திப்பு

திருவாரூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 2012ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயத்திற்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 11 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் குடும்பத்திற்கு தி.மு.க சார்பில் தலா ஸி50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.அவ்வாறு கடன் தொல்லையால் இறந்தவர்களில் ஒருவரான நாகை மாவட்டம் கீவளூர் தாலுக்கா கீழகுளந்தாங்குடி கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் என்பவரின் குடும்பத்திற்கும் ஸி50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. இதற்காக ராஜாங்கத்தின் மனைவி தேவி, தனது 2 மகன்களுடன் நேற்று திருவாரூரில் தங்கி இருந்த தி.மு.க தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார். dinakaran.com

கருத்துகள் இல்லை: