செவ்வாய், 15 ஏப்ரல், 2014

தடையை உடைத்துக்கொண்டு தென்னாலிராமன் வருகிறான் பராக் ! தடை கோரிய மனு தள்ளுபடி !

வடிவேலு நடித்த தெனாலிராமன் திரைப்படத்தை வெளியிட தடை கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.
   பழந்தமிழர் மக்கள் கட்சி நிர்வாகி வீரகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
  மனு விவரம்: நடிகர் வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தின் டிரெய்லர் காண்பிக்கப்படுகிறது. இதில், விஜயநகரப்பேரரசர் கிருஷ்ணதேவராயர் வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். கிருஷ்ணதேவராயர் சிறந்த போர்வீரர். சிறப்பான ஆட்சி நடத்தியவர். தென்னிந்தியாவில் இசுலாமிய படையெடுப்பை தடுத்தவர் என பள்ளி வரலாற்று பாடத்தில் படித்திருக்கிறேன். அவரது வேடத்தை ஏற்றுள்ள வடிவேலு கோமாளி போன்று காட்சி தருகிறார். மேலும் மூடர்கள் பேசுவது போல் அவரது வசனங்கள் உள்ளன. கிருஷ்ணதேவராயருக்கு 36 மனைவியர் 52 குழந்தைகள் இருப்பதாகவும் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது போன்ற வரலாற்று தகவல் கிடையாது. ஒரு பேரரசரின் வரலாற்றை திரித்துக்கூறி பணம் சம்பாதிக்க முற்படுவதை ஏற்கக்கூடாது.மேலும் இந்த படத்தை பார்க்கும் குழந்தைகள் கிருஷ்ணதேவராயரை ஒரு கோமாளி போல் கற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டு இருந்தார்.
  இம்மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. வரலாறுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதியிருக்கின்றனர். எனவே வரலாறு அடிப்படையில் திரைப்படத்துக்கு தடை கோருவதை ஏற்கமுடியாது என குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

கருத்துகள் இல்லை: