திங்கள், 14 ஏப்ரல், 2014

பாரதிராஜா: தெனாலிராமன் வடிவேலுவுக்கு வைக்கப்பட்டுள்ள வெடி நாளை நமக்கும் வெடிக்கும்


வடிவேலுவுக்கு வைக்கப்பட்டுள்ள வெடி நாளை நமக்கும் வெடிக்கும். எனவே திரை உலகினர் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து ‘தெனாலிராமன்’ பட விவகாரத்தில் நல்ல தீர்வு காணவேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரும் தலைவர்களை கேலிச்சித்திரம் வரைகிறார்கள். மிகப்பெரிய சர்வாதிகாரி ஹிட்லரை கிண்டல் செய்து படம் எடுத்தார் மகாகலைஞர் சார்லிசாப்ளின். கலைஞர்களுக்கு படைப்பு சுதந்திரம் உண்டு.
ஒரு திரைப்படம் மக்கள் பார்க்க தகுதியானது என்று மத்திய அரசின் பிரதிநிதி சான்றிதழ் வழங்கியபிறகு எங்களிடமும் திரைப்படத்தை காட்டி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் அப்படி கேட்பவர்கள் என்ன மற்றுமொரு மத்திய அரசா? அதிகார மையமா? தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் உங்கள் கருத்துக்கு முரண்பாடாக இருந்தால் அதை நீங்கள் தணிக்கை குழுவிடம்தான் கேட்க வேண்டும்.

சமீபகாலமாக திரை உலகை நோக்கி திரும்பிய இந்த எதிர்ப்புகள் மதம் சார்ந்தா? இனம் சார்ந்தா? மொழி சார்ந்தா? எதை சார்ந்து வருகின்றன என புரியவில்லை.
தமிழ் திரை உலகில் பல்வேறு அமைப்புகள் இருந்தும் ஒற்றுமை இல்லாமல் சிதறி இருப்பதால் தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் ஆகிவிடுகிறார்கள். தமிழ் திரைப்பட கலைஞர்கள் எல்லோரும் சேர்ந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இன்று தமிழன் வடிவேலுவுக்கு வைக்கப்பட்டுள்ள வெடி நாளை நமக்கும் வெடிக்கும். திரைஉலகினர் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இதற்கு நல்ல தீர்வு காணவேண்டும். tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: