சனி, 19 ஏப்ரல், 2014

பஞ்சாயத்து தீர்ப்பின் படி13 பேர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை


மேற்கு வங்காள மாநிலத்தில் பஞ்சாயத்து உத்தரவுப்படி 13 பேர் கொண்ட கும்பலால் பழங்குடியின பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஜனவரி 21 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து உத்தரவின்படி 13 பேர் ஒரு பழங்குடியின பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள சபல்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பழங்குடியின பெண் வேறு ஜாதியைச் சேர்ந்த வாலிபரை காதலித்தார். இதை அறிந்த பஞ்சாயத்தினர் மாற்று ஜாதி இளைஞரை காதலித்த குற்றத்திற்காக ரூ.50,000 அபராதம் விதித்தனர். அந்த பெண் அபராதத்தை செலுத்தாததால் பஞ்சாயத்து கூடி அந்த பெண்ணையும், அவரது காதலரையும் நாள் முழுவதும் சிறை பிடித்து வைத்தனர். தங்களால் அவ்வளவு பெரிய தொகையை அபராதமாக செலுத்த முடியாது என்று அந்த பெண்ணின் பெற்றோர் பஞ்சாயத்தில் தெரிவித்ததை அடுத்து அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யுமாறு பஞ்சாயத்து உத்தரவிட்டது.
இதையடுத்து பஞ்சாயத்து உத்தரவுப்படி 13 வாலிபர்கள் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். மறுநாள் காலை அந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் நடந்தவை குறித்து புகார் தெரிவித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பஞ்சாயத்து தலைவர் சுனில் சோரன் உள்பட 11 பேரை கைது செய்தனர். பிறகு, சுப்ரீம் கோர்ட்டின் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு மேற்கு வங்காள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் பிர்பம் மாவட்ட காவல்துறை ஆணையர் தலைமையிலான விசாரணைக் குழு தயாரித்துள்ள 416 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகை போல்பூர் துணை கோட்ட மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நேற்று சமர்பிக்கப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிர்பம் மாவட்ட புலனாய்வுத்துறை அதிகாரி, இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரின் குற்றங்களையும் நிரூபிக்க தேவையான அடிப்படை ஆதாரங்கள் மற்றும் அறிக்கைகள் இந்த குற்றப்பத்திரிகையில் அடங்கியிருப்பதாக தெரிவித்தார்பஞ்சாயத்து  maalaimalar.com
  

கருத்துகள் இல்லை: