ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் நாள் தமிழக வரலாற்றில் பொன்னாள்

தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் அத்தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட் பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தி.மு.க தலைவர் கலைஞர் பேசினார்.
அவர்,  ‘’சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற விரும்பியவர் அறிஞர் அண்ணா. ஆனால் தமிழக முதல மைச்சரான ஜெயலலிதாவோ அதை நிறைவேற்றுவோம் என்று கடந்த தேர்தல் அறிக்கையில் கூறி தற்போது அதற்கே தடையாக இருந்து வருகிறார். சேது சமுத்திர திட்டம் தமிழர்களுக்கு தேவையில்லை என்று கூறி அதை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லிக்கு செய்தி அனுப்பியவர் தான் இந்த ஜெயலலிதா.
தமிழ்நாட்டுக்கு வரும் நல்ல திட்டத்தை வேண்டாம் என்று சொல்லும் இவர்கள் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களா?
தமிழரின் உணர்வுகளை புரிந்துகொண்டவர்களா? இவர்கள் தமிழர்கள் அல்ல என்பதற்கு இதைவிட உதாரணம் ஏதும் உண்டா?. ஆனால் என்னுடைய ஆட்சியில் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பி மதுரையில் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியை சிறப்பு விருந்தினராக அழைத்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் ஜீவகாருண்ய திட்டம் என்று நான் அந்த விழாவில் கூறினேன். இதனால் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் எனக்கும் டி.ஆர்.பாலுவுக்கும் எதிர்காலத்தில் புகழ் வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் இதை ஜெயலலிதா தடுத்து வருகிறார். அவர் மீது பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் நாள் தமிழக வரலாற்றில் பொன்னாள். சொத்துக்களை அபகரிக்க நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டும் நாள்’’என்று பேசினார்.

கருத்துகள் இல்லை: