வியாழன், 20 மார்ச், 2014

அழகிரியின் பனங்காட்டு நரிகளை பார்த்து பதுங்குமா.. Stalin தி.மு.க.?


மதுரையில் மார்ச் 17-ம் தேதி தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்திய முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தென் மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிரான அம்புகளைத் தொடுத்துள்ளதில் தி.மு.க. தலைமை ஆடிப்போனது.
இதனால், அழகிரியுடன் தி.மு.க. தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த அழகிரி ஜனவரி 24-ம் தேதி அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார். தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேரவிருந்த நிலையில், அதன் தலைவர் விஜயகாந்துக்கு எதிராக கூறிய கருத்துகளாலும், மாவட்டச் செயலாளர் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் காரணமாக இருந்ததாலும், அழகிரி நீக்கப்பட்டார் என கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அழகிரி கூறியதாக கருணாநிதி அளித்த பேட்டியும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவற்றையெல்லாம் மறுத்த அழகிரி, தொடர்ந்து கட்சித் தலைமைக்கு எதிராகவும் குறிப்பாக ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். “நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பணத்தின் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” எனக் கூறிய அழகிரி, கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள்கூட வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.
இதுதவிர, பாரதிய ஜனதா தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் மன்மோகன் சிங், வைகோ, ரஜினி ஆகியோரை சந்தித்துவிட்டு, அந்த சந்திப்புகள் பற்றி அதிரடியாக பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்.
இப்படி தி.மு.க.வினரின் பிளட் பிரஷரை எகிற வைத்துவிட்டு, மார்ச் 17-ம் தேதி தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்திய அழகிரி, தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரையும் மாற்ற வேண்டும் என்று கூறியதோடு, மாற்றாத பட்சத்தில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டே ஆக வேண்டும் என தொனியில் பேசினார்.
அதோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்தடுத்து தமிழகம் முழுவதும் ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தவிருப்பதாக அழகிரி அறிவித்து, சஸ்பென்ஸை அதிகமாக்கினார்.
“அதெல்லாம் சும்மா அறிவிப்புங்க..” என தி.மு.க.வில் சிலர் கூறிக்கொண்டிருக்க, வரும் 23-ம் தேதி ராஜபாளையத்தில் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அழகிரியின் இந்த அதிரடி ஆட்டத்தால் ஆடிப்போன தி.மு.க. தலைமை, நேற்று திடீரென ஓர் அறிக்கை வெளியிட்டது. “கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள அழகிரியுடன் தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது” என்பதுதான் அது.
ஒரு நபர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் அடுத்த நிமிடமே அவருடன் யாரும் தொடர்புவைத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் கட்சியின் விதி. ஆனால், அழகிரியோடு சில எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள்  நேரடியாகத் தொடர்பு வைத்திருந்தனர். அப்போதெல்லாம் நடவடிக்கை எடுக்காத தி.மு.க. தலைமை, நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது!
இதனால்தான், இந்த அறிவிப்புக்கு முக்கியத்துவம்!
மற்ற கட்சிகள் எல்லாம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது, தி.மு.க.வோ தனது உட்கட்சி பிரச்னையில் மூழ்கி போயிருக்கிறது.
முதலில் அழகிரி மேட்டரை சால்வ் பண்ணிவிட்டுதான், பிரசாரத்துக்கு கிளம்புவார்கள் போலிருக்கிறது!
அழகிரியுடன் தொடர்பு வைத்துள்ள நிர்வாகிகள் யார் யார் என தலைமைக்கு மிக நன்றாகவே தெரியும். ஆனால், அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கட்சியிலிருந்து நீக்கினால், அது நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றியைப் பாதிக்கும் என்பது, அதைவிட நன்றாக தெரியும்!
இதனால்தான், கண்ணைக் கட்டிக்கொண்டு காட்டு அடி அடிப்பதுபோல, “வாணாம்.. வாணாம்.. அழகிரியை சந்திக்காதிங்க” என பொதுப்படையாக ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டு, இனி என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறது, தலைமை.
இந்த அறிவித்தலுக்கு வேறு ஒரு உள் காரணமும் உள்ளது.
மதுரையில் நடந்த அழகிரியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு, ஜேஜே என்று கூட்டம். “பாதி தி.மு.க. அழகிரிக்கு பின்னால் அணிவகுத்து நிற்கிறதோ” என்ற தோற்றத்தை அந்த ஜேஜே கூட்டம் ஏற்படுத்திவிட்டது. அழகிரி அடுத்தடுத்து நடத்தப்போகும் ஆலோசனைக் கூட்டங்களுக்கும் இப்படி கூட்டம் கூடினால், தேர்தல் நேரத்தில் தி.மு.க.வின் இமேஜ், டேமேஜ் ஆகிவிடும்!
இதனால், அழகிரியின் அடுத்தடுத்த கூட்டங்களுக்கு ஆதரவாளர்கள் திரள்வதைத் தடுக்கவுமே, “அழகிரியுடன் தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது” திடீர் அறிவித்தல் வந்துள்ளது.
இவ்வளவு நாளாக கட்சியில் இருந்த அழகிரி பற்றியும், அவரது ஆதரவாளர்கள் பற்றியும் கட்சித் தலைமைக்கு தெரிந்த லட்சணம் இதுதானா? ஏனென்றால், இந்த அறிக்கையை அழகிரியின் ஆதரவாளர்கள் கண்டுகொள்ள போவதில்லை என்பது, கட்சிக்கு வெளியேயுள்ள ஆட்டுக்குட்டிக்கே தெரியும்.
அழகிரியின் போக்கு தெரிந்தவர்களுக்கு இதில் மற்றொரு சிக்கல் இருப்பது புரியும். அது என்னவென்றால், இது போன்ற அறிக்கைகள் அழகிரியை உசுப்பேற்றி விடும் என்பதுதான்!
அதாவது, இந்த அறிக்கையால் அழகிரியின் நடவடிக்கை மேலும் தீவிரமடையுமே தவிர, குறையாது.
கட்சியின் இந்த அறிக்கை குறித்து அழகிரியை நாம் தொடர்புகொண்ட கேட்டபோது, “அறிக்கையைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள், தி.மு.க. தலைமையிடம்தான் கேட்க வேண்டும்” என்றார்.
“தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக பிரசாரம் செய்வீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவரிடம் இருந்து வந்த பதில், “அதை எனது ஆதவாளர்களிடம் கேட்டு கொள்ளுங்கள். அவர்களின் முடிவுதான் எனது முடிவு. அதன்படிதான் நடப்பேன். எனது ஆதரவாளர்கள் பனங்காட்டு நரிகள். எதற்கும் அஞ்சமாட்டார்கள். பூச்சாண்டி வேலைக்கெல்லாம் பயப்படமாட்டார்கள்” என்றார்.
அழகிரியின் நெருங்கிய வட்டத்தில் உள்ள ஒருவருடன் பேசியபோது. “அண்ணன் மிக ஜாக்கிரதையாகவே காய் நகர்த்துகிறார். மதுரையில் நடந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில் கட்சித் தலைமைக்கு எதிராக எந்தக் கருத்தையும் கூறவில்லை. தி.மு.க.வையும், தலைவர் கருணாநிதியையும் காப்பாற்ற வேண்டும் என்றுதான் பேசினார்.
எனவே, அழகிரியின் செயல்பாடுகள் ‘கட்சி விரோத நடவடிக்கை’ என்று சொல்ல முடியாது” என்றார்.
அதற்கு நாம், “ஆனால், தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்வது, அல்லது பிரசாரம் செய்வது, ‘கட்சி விரோத நடவடிக்கை’ அல்லவா?” என்று கேட்டபோது, அதற்கு அதிரடியாக ஒரு பதிலைக் கூறி அசத்தினார்!
“தி.மு.க. வேட்பாளர்களா? யாருங்க அவங்க? அதுதான் தலைவரின் விருப்பத்துக்கு விரோதமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக அண்ணன் சொல்லிவிட்டாரே.. அப்புறம் அவங்க தி.மு.க. வேட்பாளர்கள் கிடையாது… தாராளமா எதிர்த்து வேலை செய்யலாம். அது, ‘கட்சி விரோத நடவடிக்கை’ இல்லிங்க” என்றார் கண்ணைச் சிமிட்டியபடி!
அட்ரா சக்கை.. இப்படி ஒரு வியூ இருக்கா?
காட்டுக்குள் நரிதான் பதுங்குவது வழமை. ஆனால், (தென் தமிழ்) நாட்டுக்குள் அழகிரியின் பனங்காட்டு நரிகளை பார்த்து, தி.மு.க. பதுங்க வேண்டி வருமோ
viruvirupu.com/

கருத்துகள் இல்லை: