சனி, 22 மார்ச், 2014

சோனியாவின் பாஸ்போர்ட் நகலை ஒப்படைக்க நியூயார்க் கோர்ட் உத்தரவு

நியுயார்க்: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் இருந்தாரா இல்லையா என்பதை ஆராய, அவரது பாஸ்போர்ட் நகலை ஒப்படைக்க வேண்டும் என்று நியூயார்க் நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 84ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த கலவர வழக்கில் சிக்கிய காங்கிரஸ் தலைவர்களை பாதுகாக்க சோனியா நடவடிக்கை எடுத்தார் என்று கூறி, கடந்த ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகர கோர்ட்டில், சீக்கிய அமைப்பு மனித உரிமை மீறல் வழக்கை தொடர்ந்தது. அதை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு சோனியாவுக்கு சம்மன் அனுப்ப கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி பிரைன் கோகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தின் சம்மன் சோனியாவிடம் நேரடியாக வழங்கப்படவில்லை; சம்மன் வெளியிட்ட நேரத்தில் சோனியா காந்தி அமெரிக்காவில் இல்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என சோனியாவின் வக்கீல் வாதாடினார். செப்டம்பர் மாதத்தில் சோனியா சிகிச்சைக்காக அமெரிக்கா வந்தார் என்றும், அப்போது அவருக்கு சம்மன் விநியோகிக்கப்பட்டது என்றும் எதிர்தரப்பில் வாதாடப்பட்டது. இந்நிலையில், 2013 செப்டம்பர் 2 முதல் 9ம் தேதி வரையில் அமெரிக்காவில் சோனியா இல்லை என்பதை நிரூபிக்க அவரது பாஸ்போர்ட் நகலை, ஏப்ரல் 7ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் சோனியா உண்மையிலேயே அமெரிக்காவில் இருந்தாரா இல்லையா என்பது தெரிந்துவிடும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். dinakaran,com

கருத்துகள் இல்லை: