திங்கள், 17 மார்ச், 2014

ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் எடுக்க வலை வீசும் அ.தி.மு.க.,: ஓட்டம் பிடிக்கும் மாற்று கட்சியினர்:


 முதல்வர் ஜெயலலிதா, பிரசாரத்திற்கு வரும்போது, அவர் முன்னிலையில், மாற்று கட்சியைச் சேர்ந்தவர்களை, கட்சியில் இணைக்க வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க.,வினர், மாநிலம் முழுவதும், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களை, வளைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை அறிந்த, மாற்று கட்சியினர், அ.தி.மு.க.,வினரைக் கண்டதும், தலை தெறிக்க ஓடுகின்றனர்.


ஒவ்வொரு தொகுதியாகதமிழகம், புதுவை உட்பட, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., தனித்து போட்டியிடுகிறது. அனைத்து கட்சிகளுக்கும் முன்னதாக, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியிட்ட, முதல்வர் ஜெயலலிதா, கடந்த, 3ம் தேதி, காஞ்சிபுரத்தில், தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து, ஒவ்வொரு தொகுதியாகச் சென்று, அ.தி.மு.க.,
வேட்பாளருக்கு ஆதரவாக, பிரசாரம் செய்து வருகிறார்.

ஒவ்வொரு தொகுதியிலும், முக்கிய இடங்களில், ஜெயலலிதா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து, ஹெலிகாப்டரில் வரும் ஜெயலலிதா, நேராக பொதுக் கூட்டத்திற்கு செல்கிறார். பிரசாரம் முடிந்ததும், மீண்டும் ஹெலிகாப்டரில், சென்னை திரும்புகிறார்.பிரசார பொதுக்கூட்டத்தில், கட்சியினர் யாரும் பேச அனுமதிக்கப்படுவதில்லை; ஜெயலலிதா மட்டும் பேசுகிறார்.அவர் பேசி முடித்ததும், மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள், கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய பிரமுகர்கள் மட்டும், மேடையில், ஜெயலலிதாவுடன் நின்று, 'குரூப் போட்டோ' எடுத்துக் கொள்கின்றனர். அத்துடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.அதனால், ஜெயலலிதா பிரசாரத்திற்கு வரும் தொகுதியில் உள்ள அ.தி.மு.க.,வினர், முதல்வர் முன்னிலையில், மாற்று கட்சிகளைச் சேர்ந்த, முக்கிய நபர்களை, கட்சியில் இணைக்க வேண்டும் என்பதற்காக, ஆள் தேடி அலைகின்றனர். எந்த கட்சியில், யார் அதிருப்தியில் உள்ளார் என்பதை பார்த்து, அவர்களுக்கு வலை விரிக்கின்றனர்.


தலைதெறிக்க:



கள்ளக்குறிச்சியில், நேற்று, ஜெயலலிதா முன்னிலையில், தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, சங்கராபுரம் ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கரி; காங்கிரஸ் கட்சியின், விழுப்புரம் மாவட்ட, முன்னாள் தலைவர் சுபாஷ்சந்திரன்; சின்ன சேலம் ஒன்றிய, பா.ம.க., முன்னாள் செயலர் ராஜேந்திரன்; கள்ளக்குறிச்சி ஒன்றிய, ம.தி.மு.க., செயலர் ராஜேந்திரன்; தி.மு.க.,வைச் சேர்ந்த, சங்கராபுரம் ஒன்றியக்குழு உறுப்பினர் சரோஜா உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் சேர்ந்தனர்.தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வினர், கட்சியில் சேர, மாற்று கட்சியினரை தேடி வருவதால், பிற கட்சியினர், அ.தி.மு.க.,வினரைக் கண்டதும், தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், ஜெயலலிதா பேசும் பொதுக்கூட்டங்களில், மாற்று கட்சியினரை கணிசமான அளவில் சேர்த்தால், தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும், கட்சி தலைமையிடம் நல்ல பெயர் வாங்கலாம் என்பதால், நிர்வாகிகள் பலர், இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- நமது சிறப்பு நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை: