செவ்வாய், 18 மார்ச், 2014

"179 பயணிகளுடன் இறக்கையை இழந்தும் பத்திரமாக தரையிறங்கிய அமெரிக்க விமானம்"

அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் இருந்து அட்லாண்டாவுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று 179 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. நடு வானில் பறந்து கொண்டிருந்த போது அந்த விமானத்தின் இறக்கையின் பெரும்பகுதி தனியாக கழன்று கீழே விழுந்தது. இதை அறிந்து கொண்ட விமானி, வெகு சாமர்த்தியமாக விமானத்தை ஓட்டியபடி, அட்லாண்டா விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். நடந்த சம்பவத்தை விளக்கிக் கூறி, தனது விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, பரபரப்படைந்த அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு, ஓடுபாதையை காலியாக்கி, அந்த விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி அளித்தனர்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஓடுபாதையின் ஓரத்தில் ஆம்புலன்சையும், தீயணைப்பு வாகனத்தையும் தயார் நிலையில் நிறுத்தி வைத்தனர். ஒரு இறக்கையை இழந்து மூளியாக வந்த விமானத்தை இரவு 7.30 மணியளவில் திறமையாக தரையிறக்கிய அந்த விமானி, பயணிகள் இறங்கும் இடத்தில் பத்திரமாக நிறுத்தியதும் விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் கையொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அவரது சாதுர்யத்தால் 179 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 6 பேரின் உயிர் தப்பியது. பறக்கும் போது அந்த விமானத்தின் இறக்கை கழன்று விழுந்தது எப்படி? என்பது தொடர்பாக டெல்டா ஏர்லைன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். .maalaimalar.com/

கருத்துகள் இல்லை: