சனி, 22 மார்ச், 2014

பா.ஜனதாவில் இருந்து ஜஸ்வந்த்சிங் விலகல்? போலி பாஜக" உருவாகிவிட்டது.. ஜஸ்வந்த்சிங் கடும் தாக்கு!


டெல்லி: லோக்சபா தேர்தலில் தமக்கு சீட் தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதாவை விட்டு வெளியேற அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த்சிங் முடிவு செய்துள்ளார். தற்போது "போலியான பாஜக" என்று உருவாகிவிட்டதாகவும் ஜஸ்வந்த்சிங் சாடியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் ஜஸ்வந்த்சிங். தற்போதைய லோக்சபா தேர்தலில் தமது சொந்த மாநிலமான ராஜஸ்தானின் பார்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த்சிங் விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஆனால் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தராஜே சிந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தமக்கு சீட் தராவிட்டால் பால்மரில் சுயேட்சையாக போட்டியிடுவேன் என்றும் ஜஸ்வந்த்சிங் மிரட்டல் விடுத்திருந்தார். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஜஸ்வந்த்சிங் கேட்ட பால்மர் தொகுதிக்கு கேணல். சோனாராம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜஸ்வந்த்சிங் சுயேட்சையாக களமிறங்குவதில் உறுதியாக இருக்கிறார். மேலும் பாஜகவின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அக்கட்சியிலிருந்து விலகும் கடிதத்தையும் அனுப்பவும் ஜஸ்வந்த்சிங் முடிவு செய்துள்ளார். இதனிடையே செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஜஸ்வந்த்சிங், பாரதிய ஜனதா கட்சி இப்போது இரு பிரிவுகளாகிவிட்டது. ஒரிஜனல் பாஜக, போலி பாஜக என இரு பிரிவுகளாக இருக்கிறது. இப்போது இந்த இரு பிரிவுகளுக்கும் இடையேதான் பிரச்சனை. என்னைப் பொறுத்தவரையில் உண்மையான பாஜகவுக்காக நான் போராடுகிறேன். மக்கள்தான் யார் உண்மையான பாஜக என்பதை தீர்மானிப்பர் என்று கொந்தளித்திருக்கிறார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: