ஞாயிறு, 16 மார்ச், 2014

கஜகஸ்தானை நோக்கி 7 மணி நேரம் பறந்த மலேசிய விமானம்?

கோலாலம்பூர்: காணாமல் போன மலேசிய விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் தீவிரமாக வலுத்து வருகிறது. இதனால், கஜகஸ்தான், துர்க்மேனிஸ் தான் பகுதிகளில் விமானம் தேடப்படுகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த வாரம் சனிக்கிழமை சீன தலைநகர் பீஜிங்குக்கு 227 பயணிகள், 12 ஊழியர்களுடன் புறப்பட்ட விமா னம், நடுவானில் திடீரென மாயமாகி விட்டது. புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் கோலாலம்பூர் கட்டுப்பாட்டு அறையுடனான ரேடியோ தொடர்பை விமானம் இழந்தது. இதனால், தெற்கு சீன கடல் பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் என்று முதலில் தேடப்பட்டது. அந்த பகுதியில் விமானம் விழுந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததால், இந்திய பெருங்கடல், வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் விமானம் தேடப்பட்டு வருகிறது.
இதில் மலேசியா, சீனா, வியட்நாயம், சிங்கப்பூர், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளை சேர்ந்த 58 விமானங்கள், 43 போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், எந்த பலனும் இதுவரை ஏற்படவில்லை. இந்நிலையில், விமானத்தை பற்றி புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. கோலாலம்பூர் விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த பிறகு, மலேசிய விமானம் ஏழரை மணி நேரம் வானத்தில் பறந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் நேற்று தெரிவித்தார்.
செயற்கைக்கோள் ரேடார் மற்றும் ராணுவ ரேடார்களில் விமானம் பறப்பது பதிவாகி இருக்கிறது. விமானத்தில் இருந்த யாரோ ஒரு மர்ம மனிதன், விமான தகவல் தொடர்பு சாதனங்களை வேண்டுமென்றே திடீரென அணைத்துள்ளான். அதன் பிறகு அந்த விமானம், வந்த வழியே மீண்டும் திரும்பி இருக்கிறது. பின்னர். மேற்கு பக்கமாக சென்று, வடமேற்கு திசையை நோக்கி பறந்துள்ளது.

எனவே, வடக்கு பகுதியில் உள்ள கஜகஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் எல்லை பகுதிகளிலும், தெற்கு பகுதியில் இந்தோனேஷியா முதல் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதி வரையில் தேடுதல் பணியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தகவல்களின் மூலம், விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் மேலும் வலுத்து வருகிறது. ‘‘மலேசியா - வியட்நாம் வான் கட்டுப்பாட்டு எல்லைக்குள் விமானம் பறந்தபோது, அதன் தகவல் தொடர்பு சாதனங்கள் திடீரென துண்டிக்கப்பட்டுள்ளன. அதாவது, விமானத்தில் இருந்த யாரோ ஒருவரால் அது வேண்டும் என்றே அணைக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு விமானம் திசை திருப்பப்பட்டு பறந்துள்ளது. செயற்கைக்கோள்கள் மூலம் கிடைத்த புதிய தகவல்களால் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, விமானத்தில் சென்ற பயணிகள் மற்றும் ஊழியர்கள் பற்றி மீண்டும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இதனால், விமானத்தை தேடும் பணியில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ’’ என்றும் நஜீப் கூறினார்.

பைலட் வீட்டில் போலீஸ் சோதனை

காணாமல் போன மலேசிய விமானத்தின் பைலட் ஜகாரியா அகமது ஷாவின் (52) வீட்டில் மலேசிய போலீசார் நேற்று சோதனை நடத்தினர். விமானத்தில் சென்ற பயணிகள், ஊழியர்கள் பற்றி விசாரணை நடத்தப்படுவதாக மலேசிய பிரதமர் கூறிய சிறிது நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஜகாரியாவின் வீட்டில் விமான தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடர்பான சில கருவிகள் கைப்பற்றப்பட்டன. இருப்பினும், அது சாதாரண விஷயம்தான் என்று மலேசிய ஏர்லைன்ஸ் தலைமை அதிகாரி அகமது ஜவ்காரி கூறினார்.

45,000 அடி உயரத்தில் பறந்தது

கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு, மலேசியாவின் பினாங், மலாய் தீபகற்பம் உள்ளிட்ட பகுதிகளின் மீதும் விமானம் பறந்திருக்கிறது. பின்னர், 45 ஆயிரம் அடி உயரத்துக்கு சென்று பறந்துள்ளது. திடீரென 23 ஆயிரம் அடிக்கு கீழ் வந்தும் பறந்துள்ளது. இவை இரண்டுமே இந்த விமானம் பறப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்ட உயரங்கள் கிடையாது. அதிக உயரத்தில் பறந்தபோது விமானத்தில் இருந்தவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். செயற்கைக்கோள் ரேடார்களிலும், மலேசிய ராணுவ ரேடாரிலும் விமானத்தின் இந்த பயணங்கள் பதிவாகி இருக்கின்றன. இவ்வளவு உயரத்தில் தங்கள் வான் எல்லையில் எந்தவொரு தகவலும் இல்லாமல் விமானம் பறந்தபோதும், மலேசிய விமானப்படை அதை ஏன் வழிமறிக்கவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அது வர்த்தக விமானமாக தெரிந்ததால், அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.dinakaran.com

கருத்துகள் இல்லை: