வியாழன், 20 மார்ச், 2014

அன்புமணிக்கு பதவி முக்கியம் பாமகவுக்கு மாம்பழசின்னம் முக்கியம் ! Dilemma ?

அன்புமணியா, அல்போன்ஸா மாம்பழமா? என்ற, தேர்வு கேள்வி தான் பா.ம.க., திக்கி திணறி, கூட்டணிக்கு குடைச்சல் கொடுத்ததற்கு காரணம் என, தெரிகிறது.அன்புமணிக்கும் - குரு + ராமதாசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் பா.ம.க.,வின் மாம்பழ சின்னத்திற்கான போராட்டம் குறித்தெல்லாம் பல்வேறு கால கட்டங்களில், 'தினமலர்' நாளிதழ் பதிவு செய்து உள்ளது.இந்த கேள்விகள் எழுந்து சில மாதங்களாகியும், உயர்ந்த மருத்துவ படிப்பு படித்தவர்களால் இதை தீர்க்க முடியவில்லையா என்ற எண்ணம், பல்வேறு தரப்பினருக்கு எழுந்து உள்ளது.சமீபத்தில் பொறுமைக்கு புதிய அளவுகோலான பா.ஜ.,வே, 'கூட்டணியில் இருக்கிறார்களா, இல்ைலயா என்று அவர்களை தான் கேட்க வேண்டும்' என்று, கூறி வருகிறது.தீர்வு கிடைக்காததற்கு என்ன காரணம் என, அறிந்து கொள்ள, முதலில் அன்புமணி மற்றும் அல்போன்சா பிரச்னைகளை சுருக்கமாக பார்க்கலாம்.இவர் மத்திய அமைச்சராக இருந்து, ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. 'டென்னிஸ் பயிற்சியில் எத்தனை காலம் தான் கடத்துவது. இலங்கை பிரச்னையை சொல்லி, ராஜினாமா செய்ததில் அவசரப்பட்டு விட்டோமோ' என, இவருக்கு தோன்றி இருக்கலாம்.
மத்தியில் அரசு அமைக்க பா.ஜ.,வுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவதால், அந்த கட்சியோடு கூட்டணி வைக்கலாம் என, அடம் பிடித்தார். ஏதாவது பதவியில் இருந்தால் தான் கட்சியை வளர்க்க முடியும் என்பது, இவருடைய கருத்து. கடந்த, இரண்டு ஆண்டுகளாக, பா.ஜ.,வும், அன்புமணியை வளைத்துப்போட முயற்சி செய்தது, இதற்கு விசையாக உள்ளது.


அல்போன்ஸா பிரச்னை:

வரும் லோக்சபா தேர்தலில், 6 சதவீதம் ஓட்டுகளை பா.ம.க, பெற்றாக வேண்டும். அல்லது, இரண்டு பா.ம.க.,வினர் எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். அல்லது, பா.ம.க.,விற்கு, ஆறு எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாக வேண்டும்.இந்த மூன்றில் எதுவுமே இல்லாவிட்டால், மாம்பழ சின்னத்தை அவர்களால் தக்க வைக்க முடியாது. அப்போது, அந்த சின்னம் பொதுவானதாக அறிவிக்கப்படும். அப்படியானால், அந்த சின்னம் சுயேச்சைகளுக்கும் கூட ஒதுக்கப்பட்டுவிடும். இனி வரும் தேர்தல்களில், மாம்பழ சின்னம், பா.ம.க., போட்டியிடும் எல்லா தொகுதிகளுக்கும் கிடைக்காது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒவ்வொரு சின்னம் ஒதுக்கப்படும்.நிலை இப்படி இருக்க, ராமதாஸ் மற்றும் பிற கட்சியினர், சின்னத்தை தக்க வைப்பதே தலையாய காரியம் என, கருதுகின்றனர். இதற்காகத்தான், சமூக கூட்டணி என்ற, பெயரில், ராமதாஸ், ஜாதி கட்சிகளின் கூட்டணியை அமைத்தார்.அதன் வாயிலாக, தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டால், வெற்றி கிடைக்காவிட்டாலும், 6 சதவீதம் ஓட்டு கிடைக்கும் என்ற, கணக்கில் அவர் செயல்பட்டார்.அதாவது, தமிழகத்தில், 5.35 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும் ஏறத்தாழ, 70 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின்றன. அதன்படி, 3.74 கோடி ஓட்டுகளில், 6 சதவீதமான, 22 லட்சம் ஓட்டுகளை ராமதாசின் சமூக கூட்டணி பெற வேண்டும்.இந்த இலக்கை எட்ட, 39 தொகுதிகளிலும் போட்டியிட்டால் தலா, 56 ஆயிரம் ஓட்டுகள் தான் தேவை. ஆனால், பா.ஜ.,வோடு கூட்டணி சேர்ந்தால், எட்டு தொகுதிகள் தான் ஒதுக்கப்படும், அவற்றிலும் வெற்றி உறுதி இல்லை.

கட்சிகளின் தற்போதைய ஓட்டு விகித கணிப்புகளின் படி (பா.ஜ., - 4, தே.மு.தி.க., - 8.5, பா.ம.க., - 3.25 சதவீதம்), ஒரு தொகுதிக்கு ஏறத்தாழ 14 லட்சம் ஓட்டுகள் வீதம், பா.ஜ., கூட்டணிக்கு, எட்டு தொகுதிகளில், 12 லட்சம் ஓட்டுகள் தான் கிடைக்கும்.இதில், மோடிக்கான ஆதரவு ஓட்டுகள் என, பா.ஜ.,விற்கு, 6 சதவீத புள்ளிகள் வரை அதிகரித்து கணிக்கலாம் என, அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதையும் சேர்த்தாலும், எட்டு தொகுதிகளில், 17 லட்சம் ஓட்டுகள் தான் கிடைக்கும். மேலும், தற்போதைய கள நிலவரப்படி, தே.மு.தி.க., ஆதரவாளர்கள் பா.ம.க.,விற்கு ஓட்டுப்போடுவார்களா என்பது, சந்தேகம் தான் என, கூறப்படுகிறது. அதனால், 22 லட்சம் ஓட்டுகள் என்ற இலக்கு குதிரை கொம்பாகி விடுகிறது.அதை தவிர்க்கத் தான் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை மட்டும் பா.ம.க., கேட்டு வந்தது. ஆனால், தே.மு.தி.க., இதற்கு ஒத்துழைக்கவில்லை.அதாவது, பா.ஜ.,வுடனான கூட்டணி மோதல், குறிப்பிட்ட தொகுதிகளை பெறுவது அல்லது கூடுதல் தொகுதிகளை பெறுவதில் தான். இதில், ஏற்கனவே உள்ள குழப்பங்களை பயன்படுத்தி, சில வெளி சக்திகளும் ஆட்டிப்படைத்து வருகின்றன.இது தவிர, பா.ஜ.,வில் தொடரும் குழப்பத்தால், பா.ஜ., வாக்காளர்கள், அ.தி.மு.க., பக்கம் சாய துவங்கி விட்டார்கள் என்ற, தகவலும் ராமதாசை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

அதற்கு ஏற்ப, ஜெயலலிதாவும், தன் பிரசாரங்களில், 'வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு வாக்களியுங்கள்' என, முழங்கி வருகிறார்.அன்புமணியை பொறுத்தவரை அவர் சுகாதார துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றினார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதனால், பா.ஜ., கூட்டணியில் சேர்ந்தாலே, வெற்றியோ, தோல்வியோ, அவருக்கு அமைச்சர் பதவி உறுதி.பா.ஜ.,வை தமிழகத்தில் வலுவாக்க வேண்டும், பா.ஜ., தீண்டத்தகாத கட்சி என்ற பிம்பத்தை உடைக்க வேண்டும் என்பதில், பா.ஜ.,வின் தேசிய தலைமை உறுதியாக இருப்பதால், பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதில் அவர்கள் முனைப்பாக உள்ளனர்.அதாவது, அவர்கள் நீண்ட கால திட்டத்தில் இறங்கி உள்ளனர். அதனால், அவர்கள் அன்புமணிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.இந்த இழுபறியில் சிக்கித் தவிக்கும் பா.ம.க., எந்த முடிவெடுத்தாலும், அது ஏதோ ஒரு விதத்தில் அந்த கட்சிக்கு திருப்புமுனையாக அமையும்.

- நமது சிறப்பு நிருபர் dinamalar.com   

கருத்துகள் இல்லை: