திங்கள், 17 பிப்ரவரி, 2014

திருச்சி தி.மு.க மாநாடு அ.தி.மு.க.,வினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் மாற்றம்?

லோக்சபா தேர்தலில், எந்த கட்சியுடன் கூட்டணி சேருவது என, அரசியல் கட்சி தலைவர்கள் குழம்பியுள்ள நிலையில், தி.மு.க., மாநாடு எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக நடந்துள்ளதால், அ.தி.மு.க., கூட்டணியில் மாற்றம் வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதனால், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள், -புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட, சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அணியில், விஜயகாந்தின், தே.மு.தி.க.,வை சேர்க்க, கருணாநிதியுடன், அவரது கட்சியினரும், தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். பிடிகொடுக்காமல்ஆனால், தே.மு.தி.க., தலைவர் விஜய காந்த், இதற்கு பிடிகொடுக்காமல் இருந்து வருகிறார்.

அதேபோல், தன்னை கூட்டணிக்கு அழைக்கும், பா.ஜ., தலைவர்களுக்கும், அவர் உறுதியான பதிலை சொல்லாமல், இழுத்தடித்து வருகிறார். திருச்சியில், தி.மு.க., மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட்ட, தி.மு.க., தலைவர் கருணாநிதி, 'தி.மு.க., கூட்டணியில், விஜயகாந்த் சேருவார்' என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன்பின்னரும், விஜயகாந்திடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. 'தி.மு.க., கூட்டணியில், அதிக, 'சீட்'களை பெறவே, அவர் இவ்வாறு நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. கடும் அதிர்ச்சி:இந்நிலையில், கடந்த, இரு நாட்களாக, திருச்சியில் நடந்த, தி.மு.க.,வின், 10வது மாநில மாநாடு, பலரும் எதிர்பார்த்தைவிட, வெற்றிகரமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகவல், அ.தி.மு.க.,வினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தி.மு.க., - -தே.மு.தி.க., கூட்டணி அமைக்கும் பட்சத்தில், அ.தி.மு.க.,வின், 40 தொகுதி களில் வெற்றிக் கனி பறிக்கும் திட்டம், கேள்விக்குறியாக மாறலாம். கம்யூனிஸ்ட்களுடன் மட்டும் கூட்டணி வைத்து, இதை சாதிக்க இயலாது என, அக்கட்சியினர் நம்புகின்றனர்.அதனால், கூட்டணி வியூகங்களை மாற்றி அமைக்கும்படி, கட்சித் தலைமைக்கு, அந்தக் கட்சியின் மேலிட நிர்வாகிகள் யோசனை கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனாலும், இதற்கு எந்தப் பதிலையும் தெரிவிக்காத, அ.தி.மு.க., தலைமை, விஜயகாந்தின் கூட்டணி நடவடிக்கையை பொறுத்து, தன் முடிவை மாற்றலாம்.
கூடுதல் கட்சிகளை, கூட்டணியில் சேர்க்க முற்படலாம் என, நம்பப்படுகிறது. அத்துடன், தி.மு.க.,வின்கூட்டணி வியூகங்களையும், வெற்றி வாய்ப்பையும் அலசி ஆராய்ந்து, கூட்டணி முடிவை மாற்றலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.,வின் கூட்டணி முடிவு, லோக்சபா தேர்தலுக்கு முன், எந்த நேரத்திலும் மாறலாம் என, வெளியாகியுள்ள தகவல், லோக்சபா தேர்தல் வெற்றிக்கு, அ.தி.மு.க.,வை மட்டுமே, பலமாக நம்பியிருக்கும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்திஉள்ளது.

அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெறுவதை ஏற்கனவே, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இறுதி செய்துள்ளன. அதனால், இவ்விரு கட்சிகளுக்கும், தலா, இரண்டு தொகுதிகள் கிடைக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தேகமில்லை:அத்துடன், தேசிய அளவில், அ.தி.மு.க.,வை மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்க செய்யலாம் என்ற முயற்சியிலும் கம்யூ., கட்சிகளின் மூத்த தலைவர்கள் இறங்கியுள்ளனர். இந்நிலையில், அ.தி.மு.க., கூட்டணியில் மாற்றம் ஏற்பட்டால், நிச்சயம் அது கம்யூனிஸ்ட்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில், சந்தேகமில்லை. அதனால், தங்களின் கொள்கைகளுக்கு முரணான கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து விடக்கூடாது என, நினைக்கின்றனர். அவர்கள் நினைத்தபடி நடக்குமா என்பது, அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும்.

கூட்டணி குறித்து பேசவில்லை: விஜயகாந்த் தகவல்:''மக்கள் பிரச்னைகள் குறித்து, பிரதமரி டம்பேசவே, டில்லி சென்றேன். கூட்டணி குறித்து பேச அல்ல,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.டில்லியில் இருந்து, நேற்று மதியம், 2:00 மணிக்கு, சென்னை வந்த விஜயகாந்த், விமான நிலையத்தில் கூறியதாவது: நான் டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த போது, தமிழக மக்கள் பிரச்னைகள் குறித்தே பேசினேன். அப்போது, பிரதமர், 'தமிழக முதல்வர், என்னை நேரடியாக சந்தித்து, மக்கள் பிரச்னைகள் குறித்து பேசவில்லை; நீங்கள் எம்.எல்.ஏ.,க்களுடன் வந்து, என்னை சந்தித்து பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது' என்றார். டில்லிக்கு, தமிழக மக்களின் பிரச்னைகள் குறித்து பேசவே சென்றேன். பார்லிமென்ட் தேர்தல், கூட்டணி குறித்து பேச செல்லவில்லை. கூட்டணி குறித்து, இதுவரை நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. கூட்டணி குறித்து முடிவு எடுத்தால், அதை பகிரங்கமாக அறிவிப்பேன். இவ்வாறு, விஜயகாந்த் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் - - dinamalar.com

கருத்துகள் இல்லை: