செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

குற்றவாளியே நீதிபதியை நியமிக்கும் சிதம்பரம் தில்லை கோவில் வழக்கு

தில்லைக் கோயிலை தீட்சிதர்களின் தனிச்சொத்தாக ஒப்படைத்துள்ள உச்சநீதிமன்றத்தின் பார்ப்பனத் தீர்ப்பை எதிர்த்து 6.1.2014 அன்று சென்னை அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலை முன்பாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் இறுதி தீர்ப்பின்படி 2009 -ஆம் ஆண்டில் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்ட சிதம்பரம் நடராசர் கோவிலை மீண்டும் தீட்சிதர்களின் வசமே ஒப்படைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 40 ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலும், சுமார் 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் கோயிலின் அர்ச்சகர்களான தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்குப் போவிட்டது.
பெங்களூரு நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில், “குற்றம் சாட்டப்பட்டவரான ஜெயலலிதா விரும்புகின்ற நீதிபதிதான் அவரது வழக்கை விசாரிக்க வேண்டும்” என்றவாறு தீர்ப்பளித்த உத்தமர்களான சவுகான், பாப்டே ஆகியோர்தான் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள். குற்றவாளியே நீதிபதியை நியமிக்கும் இந்தப் புதிய நீதிநெறியின்படி, “அக்யூஸ்டு”களான திருட்டு தீட்சிதர்களால், வேண்டி விரும்பித் தெரிவு செயப்பட்டவர்களே இந்நீதிபதிகள் என்பது வழக்கு விசாரணை தொடங்கியவுடனேயே தெரிந்து விட்டது.

சிதம்பரம் ஆர்ப்பாட்டம்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், தில்லைக் கோயிலை தீட்சிதர்களிடமிருந்து கைப்பற்ற தனிச் சட்டம் இயற்றக் கோரியும், நந்தன் நுழைந்த தெற்குவாசலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை தகர்த்தெறியக் கோரியும் சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
நீதிபதி பாப்டேயின் மகனுக்குத் தமிழக அரசு தனது வழக்குகளையும், கட்டணத்தையும் வாரி வழங்குவதை இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் வந்த ஒரு செய்தி அம்பலமாக்கியது. இது, இந்தத் தீர்ப்பின் யோக்கியதையை நிரூபிக்கும் கூடுதல் சான்று. மொத்தத்தில் வல்லுறவு செய்தவனுக்கே பெண்ணைக் கட்டி வைக்குமாறு தீர்ப்புக் கூறும் கட்டப்பஞ்சாயத்தைப் போல, கோயில் சோத்தைக் கொள்ளையடித்த தீட்சிதனுக்கே கோயில் சொந்தம்” என்று தீர்ப்பளித்திருக்கிறது இந்த பார்ப்பன “காப்” பஞ்சாயத்து.
தீட்சிதர்களின் திருட்டுத்தனங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை ஒரு நூற்றாண்டாக கூறிவருபவர்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினரோ, ம.க.இ.க.வினரோ அல்ல. சக தீட்சிதர்கள்தான். அதேபோல கோயிலில் பார்ப்பனக் கும்பல் நடத்தும் கொள்ளையை விவரித்து, அதனைத் தடுத்து நிறுத்த அரசு தலையிட வேண்டும் என்று 1888-இலேயே சிபாரிசு செய்தவர்கள் நாத்திகர்களல்ல, நீதிபதி முத்துசாமி அயர் மற்றும் பாஷ்யம் அயங்கார் ஆகியோர். “கோயிலின் மீது அரசு கட்டுப்பாட்டை எதிர்ப்பவர்கள், தண்டனைச் சட்டத்தை எதிர்க்கும் திருடர்களைப் போன்றவர்கள்” என்று இந்து நாளேடே அன்று தலையங்கம் எழுதியதாக தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் சிறீவத்சன். (தி இந்து, 13.1.2014)
தில்லைக் கோயில் தீட்சிதர் சோத்தல்ல, அது பொதுக்கோயில் என்பது 1888 முதல் பல தீர்ப்புகளில் உறுதி செயப்பட்டிருந்த போதிலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளித்தான் இந்த தீவட்டிக் கொள்ளைத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்தத் தீர்ப்பின் சாரத்தைப் புரிந்து கொள்ள அதன் பின்புலத்தைச் சுருக்கமாகவாவது தெரிந்து கொள்வது அவசியம்.
1951-இல் குமாரசாமி ராஜா தலைமையிலான மதறாஸ் மாகாண காங்கிரசு அரசு, 1927-இல் நீதிக்கட்சி ஆட்சியில் இயற்றப்பட்ட இந்து அறநிலையத்துறை சட்டத்தைத் திருத்தி, புதியதொரு சட்டத்தை இயற்றியது. அந்தச் சட்டத்தின்படி சிதம்பரம் கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறை மேற்கொள்வதாக 28.8.51 அன்று அரசு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தீட்சிதர்களாகிய தாங்கள் ஸ்மார்த்த பிராமண வகுப்பினர் என்றும், இது தனியொரு மத உட்பிரிவு என்றும், கல்தோன்றி மண்தோன்றாக் காலம் முதல் தங்களைத் தவிர வேறு யாரும் இந்தக் கோயிலில் வழிபாடு நடத்தியதோ, நிர்வாகம் செய்ததோ இல்லையென்றும், இந்திய அரசமைப்பின் 26(ஈ) பிரிவு, மத உட்பிரிவு அல்லது வகுப்பினருக்கு (religious denomination or section) வழங்கும் சிறப்புரிமை தமக்குப் பொருந்தும் என்பதால், தில்லைக் கோயிலை அறநிலையத்துறை மேற்கொண்டது தங்களது மத உரிமையைப் பறிப்பதாகும் என்று வாதிட்டனர்.
ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் எனப்படுவோர் கோயில் வழிபாட்டை எதிர்க்கின்ற (ஆகம வழிபாடு) வேள்வி வழிபாட்டை மட்டுமே (நிகம) போற்றுகின்றவர்கள். காலப்போக்கில் எல்லா பார்ப்பனர்களும் கோயில் வழிபாட்டில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர் என்ற போதிலும், பார்ப்பனியம் வேதங்களையே தனது ஆதாரப்புள்ளியாகக் கொண்டிருக்கிறது. காஞ்சி சங்கரமடம் உள்ளிட்ட பார்ப்பன நிறுவனங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களும் ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள்தான். எனவே ஸ்மார்த்த பார்ப்பனர்கள் எனப்படுவோர் தனிவகையல்ல; சொல்லப்போனால், இவர்கள்தான் பார்ப்பன இந்து மதத்தின் மைய நீரோட்டம். மற்ற பார்ப்பனர்களைப் போல, பின்குடுமி போடாமல் முன்குடுமி போடுகிறார்கள் என்பது மட்டும்தான் தீட்சிதர்களின் “தனித்தன்மை”.
உண்மை இவ்வாறு இருந்த போதிலும், தீட்சிதர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், தீட்சிதர்கள் இந்து மதத்தின் ஒரு உட்பிரிவினர் என்றும், மடாதிபதிகளைப் போலக் கருதத்தக்கவர்கள் என்றும், ஆகையினால் அரசின் அறிவிக்கை செல்லாது என்றும் 1951-இல் தீர்ப்பளித்தனர். அரசியல் சட்டத்தின் 26(ஈ) பிரிவின் கீழ், மத உட்பிரிவினருக்கான சலுகையைப் பெறவேண்டுமாயின், சம்பந்தப்பட்ட மடத்தை அல்லது கோயிலை அந்த உட்பிரிவினர்தான் உருவாக்கி நிர்வகித்து வருகின்றனர் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால், தில்லைக் கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழர்கள், நாயக்கர்கள் முதல் பிச்சாவரம் ஜமீன் வரையிலான பலரால் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. ஆகவே, ஒரு மடத்தை உருவாக்கி நிர்வகிக்கும் மடாதிபதியுடன் தீட்சிதர்களை ஒப்பிட முடியாது என்பதால்தான், “மடாதிபதிகளைப் போலக் கருதத்தக்கவர்கள்” என்று தந்திரமாகக் குறிப்பிடுகிறது தீர்ப்பு.
சென்னை ஆர்ப்பாட்டம்
தில்லைக் கோயிலை தீட்சிதர்களின் தனிச்சொத்தாக ஒப்படைத்துள்ள உச்சநீதிமன்றத்தின் பார்ப்பனத் தீர்ப்பை எதிர்த்து 6.1.2014 அன்று சென்னை அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலை முன்பாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
“கணவனைப் போலக் கருதத்தக்கவன்” என்ற சட்டத் தகுதி உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டு விட்டதால், திருமணம் செய்யாமலேயே பெண்டாளும் உரிமையைப் பெற்று விட்ட தீட்சிதர்கள், கோயிலின் உடைமையாளர்கள் ஆகிவிட்டார்கள். 40 ஏக்கர் கோயிலும், 2700 ஏக்கர் நிலமும் தங்களுக்குச் சொந்தம் என்று நிரூபிப்பதற்கு கல்வெட்டு, செப்பேடு போன்ற எதையும் தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் ஆதாரமாகக் காட்டவில்லை. தங்கள் முன்குடுமியைக் காட்டினார்கள் – முடிந்தது வழக்கு.
உயர் நீதிமன்றம் 1951-இல் வழங்கிய இத்தீர்ப்பை எதிர்த்து மதறாஸ் மாகாண அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 1954-இல் இவ்வழக்கு அரசியல் சட்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நடத்தாமல், 1951-இல் குமாரசாமி ராஜா அரசு வெளியிட்ட அறிவிக்கையையே திரும்பப் பெறுவதாக சென்னை மாகாண காங்கிரசு அரசு அறிவித்ததால், அரசின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இப்படியாக சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பே இறுதித் தீர்ப்பானது. பிப்ரவரி 1954-இல் காங்கிரசு அரசின் அறிவிக்கையையே திரும்பப் பெற்ற காங்கிரசு முதலமைச்சர் ராஜாஜி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பின் காமராஜ் முதல்வரான பிறகு 1959-இல் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சட்டம் மீண்டும் திருத்தப்பட்டது. அதில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பின் தில்லைக் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்திருக்க முடியும்; செய்யவில்லை. அதன் பின்னர் தி.மு.க, அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களிலும் அத்தகைய திருத்தங்கள் கொண்டு வரப்படவில்லை. தமிழக அரசின் அறநிலையத்துறை சட்டம், 1959-இன் பிரிவு 45 மற்றும் 107 -இல் தீட்சிதப் பெருச்சாளிகள் புகுந்து தப்பிப்பதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டிருந்த சட்டப் பொந்துகள் அடைக்கப்படாமலேயே விடப்பட்டிருந்தன.
நிதி மோசடி, நகைக்களவு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து 1987-இல் நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரியும் கூட “தீட்சிதர்களுக்கு நிர்வாக நடவடிக்கைகளில் உதவுவது” என்ற அடிப்படையில்தான் நியமிக்கப்பட்டாரேயன்றி, கோயிலை அறநிலையத்துறை கைப்பற்றி விடவில்லை. இருந்த போதிலும் 1951 தீர்ப்பைக் காட்டி இதற்கும் இடைக்காலத் தடை பெற்றனர் தீட்சிதர்கள். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இந்த வழக்கைத் தட்டியெழுப்பி நீதிபதி பானுமதியின் முன் விசாரணைக்கு கொண்டுவந்து, “தீட்சிதர்கள் தனி மத உட்பிரிவல்ல” என்று வாதிட்டது. அன்றைய தி.மு.க. அரசின் கீழான அறநிலையத்துறையும் அவ்வாறே வாதிட்டது. “தாங்கள் தனியான மத உட்பிரிவு என்பது ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்ட உண்மை” என்பதால், அதனை மீண்டும் கேள்விக்குள்ளாக்க முடியாது என்று தீட்சிதர்கள் வாதிட்டனர். அதனை நீதிபதி பானுமதி நிராகரித்தார். “பக்தர்கள் தமிழ் பாடத் தடை என்ற பின்புலத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவு வழங்கும் மக்களின் வழிபாட்டு உரிமைதான் முதலிடம் பெற முடியுமேயன்றி, 26-ஆவது பிரிவின் கீழ் தீட்சிதர்கள் கோரும் தனி உரிமையல்ல” என்றும், “அவர்கள் கோரும் தனியுரிமை என்பது மக்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிரானது” என்றும் வாதிட்டு மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உயர் நீதிமன்றத்தில் வென்றது.
கோயில் கோபுரத்தில் கொடி
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும், பார்ப்பனியத்தின் வெற்றியையும் பறைசாற்றும் திமிரோடு, ‘குடியரசு’ தினத்தன்று தில்லை நடராசர் கோயில் கோபுரத்தின் உச்சியில் பார்ப்பன தீட்சிதர்களால் பறக்க விடப்பட்டுள்ள ‘தேசிய’க் கொடி.
தற்போது உச்ச நீதிமன்றத்தில், “தீட்சிதர்கள் தனி மத உட்பிரிவு அல்ல, இக்கோயிலும் அவர்கள் உருவாக்கியதல்ல, அவர்கள் வெறும் அர்ச்சகர்கள் மட்டுமே, கோயிலின் மீது அவர்கள் எவ்வித உரிமையும் கோர முடியாது” என்று ம.உ.பா.மையத்தின் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் நீதிபதிகளோ, “தீட்சிதர்கள் தனிப்பிரிவு என்பதும் கோயிலின் மீது அவர்களுக்குள்ள உரிமையும் ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்ட உண்மைகள்” (Res Judicata) என்றும், “அவற்றை மீளாய்வுக்கு உட்படுத்திய பானுமதியின் தீர்ப்பு, நீதித்துறை ஒழுங்கீனம்” என்றும் தமது தீர்ப்பில் கண்டித்திருக்கின்றனர்.
“இக்கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானதோ, அவர்களால் உருவாக்கப்பட்டதோ இல்லை என்றாலும், அவர்கள் ஒரு மத உட்பிரிவு என்பதையும், பல நூற்றாண்டுகளாக அவர்கள்தான் கோயிலை நிர்வாகம் செய்து வருகிறார்கள் என்பதையும் ஏற்கெனவே (1951-இல்) நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், அதனை மீண்டும் விசாரிக்க முடியாது…”, “முடிந்து போன விவகாரங்களைக் கிளப்புவது சமூகத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து குழப்பத்தை உருவாக்கிவிடும்”, “தோற்றுப்போனவர்கள் மீண்டும் வழக்கு தொடுத்தால், நீ ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்டு விட்டாய் என்பதே அவர்களுக்கான பதில் என்று காத்யாயன ஸ்மிருதி கூறுகிறது.”
“தீட்சிதர்களின் நிர்வாகச் சீர்கேடு, நிதிக்கையாடல் குறித்த பல விவரங்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டன. எனினும், அவற்றுக்குள் நாங்கள் செல்லவில்லை. ஏனென்றால், 1959 சட்டத்தின் கீழ் நிர்வாக அதிகாரியை நியமிப்பதற்கான குறிப்பான காரணங்கள் 1987 ஆணையில் சோல்லப்படவில்லை”, “சீர்கேட்டைச் சரி செவதற்காகத்தான் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார் என்றால், அது சரி செய்யப்பட்டவுடனே கோயிலை தீட்சிதர்கள் வசம் ஒப்படைத்து விட்டு அரசு வெளியேறியிருக்க வேண்டும். அவ்வாறின்றி நிர்வாக அதிகாரி நீடிப்பதானது, அரசியல் சட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு (அதாவது தீட்சிதர்களுக்கு) வழங்கியிருக்கும் சொத்துரிமையை பறிப்பதாகும்” – என்றவாறு போகிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
இது பார்ப்பன நாட்டாமைகளின் “காப்” பஞ்சாயத்து வழங்கியிருக்கும் தீர்ப்பு என்பதைப் புரிந்து கொள்வதற்கு கூடுதல் விளக்கங்கள் அவசியமில்லை. தீர்ப்பே அதற்கான தன்னிலை விளக்கமாகத்தான் அமைந்திருக்கிறது. நமக்குத் தேவைப்படுவது, அன்று முதல் இன்று வரை தீட்சிதர்களிடம் தமிழக அரசு தோற்று வருவதற்கான விளக்கம்.
முதலாவதாக, குடிமக்களின் மத உரிமை மற்றும் மத நிறுவனங்களின் உரிமை தொடர்பான அரசியல் சட்டத்தின் பிரிவு 25, 26 ஆகியவை, மக்களின் மத உரிமையைக் காட்டிலும், மத நிறுவனங்களின் உரிமைக்கே முதலிடம் தரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க விடாமல் தடுப்பதையும், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரன் சங்கராச்சாரியாக நீடித்ததையும், திருட்டு தீட்சிதர்களுக்கு தில்லைக் கோயிலை உடைமையாக்குவதையும், இசுலாமியப் பெண்கள் மீது ஷரியத் சட்டத்தைத் திணித்திருப்பதையும் சாத்தியமாக்கியிருப்பது இந்த இரு சட்டப் பிரிவுகளும், அதற்கு காலம்தோறும் உச்ச நீதிமன்றம் அளித்துவரும் விளக்கங்களும்தான். ஆகவே, பார்ப்பனச் சூது என்பது தற்போதைய தீர்ப்பில் மட்டும் இல்லை. அது அரசியல் சட்டத்திலேயே இருக்கிறது. (இது குறித்த விளக்கத்தை “இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பற்றதா?” என்ற புதிய கலாச்சாரம் வெளியீட்டில் காணலாம்)
இரண்டாவதாக, அன்று முதல் இன்று வரை, இந்த அரசியல் சட்டம் அனுமதிக்கும் வரம்புக்குட்பட்ட வகையில் கூட தில்லைக் கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்வதற்கான முயற்சிகள் நேர்மையான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. 1954-இல் ராஜாஜி, தற்போது ஜெயலலிதா ஆகியோரின் நடவடிக்கைகளைப் பார்ப்பனப் பாசம் என்று பாமரனும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், 1959-இல் அறநிலையத்துறை சட்டத்தை திருத்திய காமராஜ் அரசு, தில்லைக் கோயில் விவகாரத்தில் கண்ணை மூடிக்கொண்டதற்குக் காரணம் என்ன?
அதன்பின் பலமுறை ஆட்சிக்கு வந்த தி.மு.க. ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் கோயிலைக் கைப்பற்றியிருக்க முடியும். ஆனால், மத்திய-மாநில மந்திரிப் பதவிகளும், அவற்றின் துணையுடன் உருவாக்கப்பட்ட தொழில் சாம்ராச்சியங்களும் – அதாவது தி.மு.க. வினரின் வர்க்க நலன் – பார்ப்பனக் கும்பலுடன் சமரசத்தையும் சரணடைவையுமே கோரியது. அதனால்தான் கருணாநிதியின் பார்ப்பன எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்துமே அரைக்கிணறு தாண்டும் நடவடிக்கைகளாகவே இருக்கின்றன. அ.தி.மு.க. வைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
மூன்றாவதாக, கோயிலைக் காப்பாற்றிக் கொள்வதற்குத் தீட்சிதர்கள் நீதிமன்றத்தை மட்டும் நம்பியிருக்கவில்லை. காங்கிரசு, தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளைத் தன்வயப்படுத்தி வைத்திருந்ததன் மூலம்தான், இந்து அறநிலையத்துறை சட்டத்தில் தாங்கள் தப்பிப்பதற்குத் தோதாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஓட்டைகள் அடைக்கப்படாமல் அவர்கள் பாதுகாத்திருக்கிறார்கள். தங்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளையும் அவர்கள் வெற்றிகரமாக முடக்கியிருக்கிறார்கள். தீட்சிதர்கள் மீதான நகைத்திருட்டு, போர்ஜரி, நில விற்பனை உள்ளிட்ட எந்தக் குற்றத்துக்கான வழக்கினையும் நடத்தி அவர்களைத் தண்டிக்க தி.மு.க, அ.தி.மு.க. அரசுகள் முயற்சிக்கவே இல்லை. 1997-இல் உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடாசலயா, “இத்தனை ஆதாரங்கள் இருந்தும் தீட்சிதர்கள் மீது ஏன் கிரிமினல் வழக்குப் போடவில்லை?” என்று தனது தீர்ப்பிலேயே கேள்வி எழுப்பிய பின்னரும் தீட்சிதர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போதைய உச்ச நீதிமன்ற விசாரணையின்போது, “தீட்சிதர்களுக்கு எதிராக நீங்கள் கூறுபவை எல்லாம் வெறும் குற்றச்சாட்டுகள். அவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றனவா?” என்று நீதிபதி சவுகான் தெனாவெட்டாக கேட்க, “கெக்கெக்கே” என்று சுப்பிரமணிய சாமி சிரித்தார். இப்படியொரு சாதகமான நிலைமையை தீட்சிதர்களுக்கு ஏற்படுத்தித் தந்ததும் தி.மு.க, அ.தி.மு.க. அரசுகள்தான்.
இவையனைத்தும்தான் தீட்சிதர்களின் வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி தொடுத்திருக்கும் இன்னொரு வழக்கு, எல்லா இந்துக் கோயில்களிலிருந்தும் அறநிலையத்துறையை வெளியேற்றுவதற்கானது. ஜெயலலிதாவின் கருத்தும் இதுவேதான் என்பதால், செம்மொழி நூலகத்தைப் போல அறநிலையத்துறையையும் இழுத்து மூடுவதற்கு ஜெ.அரசு ஒத்துழைக்கக்கூடும். இது பற்றி வைகோ முதல் நெடுமாறன் வரையிலான பாரதிய ஜனதாவின் ஆழ்வார் படைகள் மூச்சு விடப்போவதில்லை. தி.மு.க.வும் அறிக்கைக்கு மேல் எதுவும் செய்யப் போவதில்லை.
கோயில்கள் கொள்ளைக் கூடாரங்கள் என்று மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு, அதனை மறுக்கவே முடியாத சூழலில்தான், அன்று அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. இன்று பொதுத்துறை தனியார்மயம் போல, பொதுக்கோயில்கள் மீண்டும் பார்ப்பனக் கும்பலின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன. இதன் விளைவாக, அவை ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கூடாரங்களாகவும், பார்ப்பன இந்துவெறிக் கொலைகாரர்களாக பக்தர்களை மாற்றுகின்ற கொலைக்கூடங்களாகவும் மாற்றப்படும். தில்லைக் கோயில் தீர்ப்பு இதற்கான அபாய அறிவிப்பு.
- சூரியன் 

கருத்துகள் இல்லை: