ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவை, பாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக வதோதராவில் செய்தியாளர்களிடம் அவர் இன்று கூறும்போது,  "ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவருக்கு சட்டங்கள் தெரியாது. சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி கவலைப்படாமல், அவர் இப்படி முடிவெடுத்திருக்கிறார்.
ஜெயலலிதா இத்தகைய முடிவை எடுப்பதைத் தடுப்பதற்கு, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தேவை எனில், அவர் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளலாம்" என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
இதனிடையே, பாஜகவின் மற்றொரு தலைவரான ஷானவாஸ் ஹுசைன் கூறும்போது, "தமிழக அரசு இந்த விவகாரத்தில் பல்வெறு தவறுகளைச் செய்துவிட்டது. இது மிகவும் முக்கியமான விவகாரம் என்பதுடன், இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மக்களுக்கு நீதித் துறை மீது நம்பிக்கை உள்ளது. அனைவருக்குமே சமமான நீதி கிடைக்க வேண்டும்" என்றார்.

அதேவேளையில், "தமிழக அரசின் முடிவில் நான் எந்தத் தவறையும் பார்க்கவில்லை. இது கட்சியின் முடிவு அல்ல; தமிழக அரசின் முடிவு. இது அரசியலும் அல்ல. இதை அரசியல் விவகாரமாக நான் பார்க்கவில்லை.
இது, சட்ட அமைப்பு விவகாரம். தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்த உச்ச நீதிமன்றம், மாநில அரசு விரும்பினால், அவர்களை விடுதலை செய்யலாம் என்று சொல்லியிருக்கிறது" என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா. tamil.thehindu.com