புதன், 19 பிப்ரவரி, 2014

பதிப்பாளர் பத்ரிக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அச்சுறுத்தல் ? புத்தகங்களை பார்த்து பயப்படும் மதவாதிகள்


தஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜா குறித்து...

கிழக்கு பதிப்பகம், வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் எழுதியுள்ள லஜ்ஜா என்ற நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.

16-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று என் செல்பேசியில் ஒருவர் தொடர்புகொண்டு பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் நான் அப்போது தில்லி புத்தகக் கண்காட்சியில் ஒரு கருத்தரங்கில் இருந்தேன். அதனால் தொலைப்பேசியை எடுக்கவில்லை. அதே நபர் பின்னர் டயல் ஃபார் புக்ஸ் எண்ணான 94459-01234-ஐத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அதன் சுருக்கம் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது:
இன்று தமிழ்நாடு முஸ்லிம் கழகம் (sic) என்ற அமைப்பிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. எக்மோரிலிருந்து பேசுவதாக சொன்னார்கள்.

“லஜ்ஜா புத்தகத்தை நீங்கள் போட்டிருக்கக்கூடாது. அது இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது. அதில் உள்ளவை எல்லாமே பொய். இதன் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும். எனவே அந்த லஜ்ஜா புத்தகத்தை இனி நீங்கள் பதிப்பிக்கக்கூடாது” என்றார்கள்.

தகவலுக்காக.
17-02-2014 திங்கள்கிழமை அன்று நான் எனக்கு அழைப்பு வந்த எண்ணுக்குப் பேசினேன். அதனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தேன்.
எனக்கு வந்திருந்த ஒரு மிஸ்ஸ்டு கால் எண்ணைக் கூப்பிட்டுப் பேசினேன். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் பேசுவதாகச் சொன்னார். அவர் தன் பெயரைத் தெரிவிக்கவில்லை. தலைமையிலிருந்து பேசச் சொன்னதாகச் சொன்னார். லஜ்ஜா புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது என்றும் அதனால் அதைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். நான் பதிலுக்கு அப்படியெல்லாம் இல்லை; தடை ஏதும் கிடையாது; புத்தகம் ஆங்கிலத்தில் பெங்குவின்மூலம் விற்பனை ஆகிக்கொண்டுதான் உள்ளது; உறுதி செய்துகொண்டு, முறையாக அனுமதி பெற்றுத்தான் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளோம் என்றேன். அப்படியென்றால் தான் மேற்கொண்டு விசாரிப்பதாகச் சொன்னார். உரையாடல் மிகவும் தன்மையாகவே நடைபெற்றது.
நான் பேசி முடித்த இரண்டு மணி நேரத்தில் அதே எண்ணிலிருந்து இன்னோர் அழைப்பு வந்தது. அந்தத் தகவலையும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.
அப்டேட்: அதே எண்ணிலிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. அவருடைய பெயர் தாரிக் என்றார். லஜ்ஜா புத்தகம் தடை செய்யப்பட்டுள்ளது என்று ஊர்ஜிதம் செய்துவிட்டதாகச் சொன்னார். அதுகுறித்த அரசாணை தகவல் ஏதும் தரமுடியுமா என்று கேட்டேன். பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் இந்திய முஸ்லிம்களுக்கு இந்தப் புத்தகம் எதிரானது என்றும் சொன்னார். நான் புத்தகம் எதைப் பற்றியது என்று பேச முற்பட்டபோது இப்புத்தகத்துக்கு எதிராகக் காவல்துறையில் புகார் தரப்போவதாகச் சொன்னார். அது அவர்களின் உரிமை என்று ஒப்புக்கொண்டேன். காவல்துறையினர் அழைத்துப்பேசினால் அவர்களிடம் பேசிக்கொள்வதாகத் தெரிவித்தேன். அத்துடன் அழைப்பு முடிவுற்றது.
லஜ்ஜா புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை. ஆங்கிலத்தில்  பெங்குவின், இந்தியில் வாணி பிரகாஷன், குஜராத்தியில் சேத், வங்காளத்தில் ஆனந்தா, மராத்தியில் மேத்தா, தெலுங்கில் விசாலாந்திரா, பஞ்சாபியில் யூனிஸ்டார், மலையாளத்தில் கிரீன் புக்ஸ் ஆகியோர் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுவருகிறார்கள். நான் தில்லி புத்தகக் கண்காட்சியிலேயே இருந்ததால் உடனே வாணி பிரகாஷன் சென்று இந்தப் படத்தை எடுத்தேன். இதில், தஸ்லிமா நஸ்ரினின் பல புத்தகங்களையும், முக்கியமாக லஜ்ஜாவையும் காணலாம்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்துக்கு இந்தப் புத்தகத்தின்மீது பல பிரச்னைகள் இருக்கலாம். அதற்காக நாங்கள் இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்காமல் இருக்கமுடியாது.
Posted by Badri Seshadri 

கருத்துகள் இல்லை: