மறைந்த பாலுமகேந்திரா குறித்து அவரது துணைவியும் நடிகையுமான நடிகை மௌனிகா ‘தி இந்து’விடம் கூறியதாவது.
‘‘சினிமாவைப்போல வாழ்க்கையிலும் ரொம்பவே பெர்பக்ஷனாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்தவர் பாலு மகேந்திரா. 1985-ம் ஆண்டு வெளியான ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்ததன் மூலம் இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு அறிமுகமானேன். எங்கள் திருமணம் 2000 ல் நடந்தது. 28 ஆண்டுகால அன்பு சேர்ந்த வாழ்க்கை எங்களுடையது. சிறந்த சினிமாக்காரர் என்பதைப்போல அவர் சிறந்த குடும்பத் தலை வராகவும் இருந்தார்.
என் இயற்பெயர் விஜயரேகா. அவரின் நிறைய படங்களில் நாயகியின் பெயர் விஜியாகவே இருக்கும். என்னை சந்திப்பதற்கு முன்பே ‘மூன்றாம் பிறை’ படத்தில் நாயகிக்கு விஜி என்கிற பெயரை வைத்திருப்பார். என்னை சந்தித்தபின், “உன்னை பார்க்க இருந்திருக்கிறேன் என்பதால்தான் அந்தப்பெயர் எனக்கு பிடித்ததாக அமைந்திருக்கிறது” என்று சொல்வார்.

சமீபத்தில் வந்த ‘தலை முறைகள்’ படத்தில்கூட நாயகிக்கு விஜி என்ற பெயரைத்தான் வைத்திருந்தார். அந்த படத்தில் அவர் இறந்துவிடுவதுபோல காட்சி அமைந்ததாலேயே இது வரைக்கும் அந்தப்படத்தை நான் பார்க்கவே இல்லை. என்னை அழகழகாக படம் பிடிப்பது அவருக்கு அத்தனை இஷ்டம். அவர் என்னை எடுத்த படங்களையெல்லாம் பெட்டகமாக வைத்திருக்கிறேன்.
சமீபத்தில் 20 வயது பெண்ணை தத்தெடுத்து வளர்க்கப்போகிறேன் என்று அவர் சொன்னபோது எல்லோருக்கும் எழும் கோபம் எனக்கும் வந்தது. அதனால் அவ்வப்போது பேசாமல் இருந்தவர், எப்போதும் என் நினைவுகள் இல்லாமல் இருந்ததில்லை. அவர் யார் மீது கோபம் கொண்டாலும் அது நிரந்தரமாக இருந்ததில்லை. அவருக்கு யார்மீதும் வெறுப்பே வராது. சமீப காலமாக அவருடைய வயோதிகம் என்னை பாதித்துவிடக்கூடாது என்று எங்கள் நெருக்கமான நண்பரிடம் சொல்லிச்சென்றதாக கூறியிருக்கிறார்.
அவருக்கு இரண்டாவது முறையாக அட்டாக் வந்தபோதுதான் எங்களுடைய திருமண விஷயத்தை தெரியப் படுத்தினார். ஆபீஸ் போய்விட்டு திரும்புகிறேன் என்று சொன்னவர். பத்திரிகை யாளர்களை அழைத்து திருமண விஷயத்தை சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போதி லிருந்துதான் அவருடைய முதல் குடும்பம், நெருக்கமான உறவினர்களிடம் இருந்து நான் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நான் உன்னை பிரிந்துவிட்டால், நீ நிச்சயம் அழாமல் வந்து என் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு உடனே சென்றுவிட வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்தார்.
எங்கள் இருவரின் அன்பைப் பற்றி அவரே, இயக்குநர் பாரதிராஜாவிடம் நிறைய சொல்லி வைத்திருக்கிறார். இப்போதும் அவரை கடைசியாக பார்க்க முடியாதோ என்கிற ஏக்கத்தில் இருந்தபோது இயக்குநர் பாரதிராஜா, விடுதலை, வெற்றிமாறன் உள்ளிட்டவர்களின் முயற்சியால் அவரது முகத்தை கடைசியாக பார்க்க முடிந்தது.
அவருடைய மகன் கௌரி சங்கரிடம், ‘ஒரே ஒரு முறை பார்த்துக்கொள்கிறேன்!’ என்று கண்ணீருடன் போனில் கேட்டேன். அவரும் எந்த மறுப்பும் இல்லாமல் பார்க்க அழைத்தார். தந்தையின் அந்த இரக்க குணம் மகனுக்கும் இருப்பதைத்தான் இது உணர்த்தியது.
என்னை, அவரைப் பார்க்க விடாதவர்கள் பற்றி எதுவும் பேச வேண்டாம். எல்லோர் மனதிலும் இடம் பிடித்த அந்த ஆன்மா.. இனி இல்லை. அந்த துயரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர முயற்சிக்க வேண்டும். பார்க்கலாம்.  tamil.thehindu.com