செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

தந்தத்தால் செய்யப்பட்ட 1,200 பொருட்களை அழிக்க இளவரசர் வில்லியம் உத்தரவு !இந்திய சிம்மாசனம் உள்பட

லண்டன்:இங்கிலாந்து அரண்மனையில் உள்ள யானை தந்தத்தால் அலங்காரம் செய்யப்பட்ட இந்திய சிம்மாசனம் உள்பட 1,200 பொருட்களை அழிக்க இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உத்தரவிட்டுள்ளார்.இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் அரண்மனையில் ராணி இரண்டாம் எலிசபெத் காலத்தில் ஏராளமான வன விலங்குகளின் தோல், தந்தம், கொம்பு உள்ளிட்ட பொருட்களும், அவற்றால் செய்யப்பட்ட பொருட்களும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட யானை தந்தத்தால் செய்யப்பட்ட விலையுயர்ந்த சிம்மாசனம் உள்பட பல்வேறு தந்த வேலைப்பாடுகள் மிக்க பொருட்களும் உள்ளன. தற்போது இவற்றை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரண்மனையின் வன உயிரின காப்பகத்தின் பொறுப்பாளர் ஜானே குட் ஆல் கூறுகையில், பக்கிங்காம் அரண்மனையில் உள்ள தந்த வேலைப்பாடுள்ள பொருட்களை அழிக்க இளவரசர் வில்லியம் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தந்த சிம்மாசனம், விசிறி, கலைப் பொருட்கள் உள்ளிட்ட 1,200 பொருட்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

சட்டவிரோதமாக வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இளவரசர் வில்லியம் பேசினார். மேலும், விலங்குகளின் தோல்கள், கொம்புகள், தந்தங்கள் உள்ளிட்டவற்றால் செய்யப்படும் பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார். அதன்படி தனது இப்பொருட்களை அழிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு மட்டும் இங்கிலாந்தில் 45 டன் தந்தங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் சீனாவில் இருந்து கடந்த ஆறு மாதங்களில் கடத்தப்பட்ட 7 டன் தந்தங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. ஐநாவுடன் இணைந்து, அரிய வனவிலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட இளவரசர் வில்லியம் ஒப்புக்கொண்டுள்ளார். இங்கிலாந்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 515 கோடி மதிப்புள்ள கடத்தி கொல்லப்பட்ட வனவிலங்குகளின் உறுப்புகள் கைப்பற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. - tamilmurasu.org

கருத்துகள் இல்லை: