சனி, 7 டிசம்பர், 2013

சங்கரராமன் கொலை வழக்கு! ‘நக்கீரன்’ செய்தி


நக்கீரன்’செய்தியை தமிழக அரசின் பார்வைக்கு வைக்கிறோம்! கி.வீரமணி அறிக்கை!
காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலேயே அதன் முக்கிய  பக்தர்களில் ஒருவரான சங்கரராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அக்கொலைபற்றி முதலில் ‘போலிக் குற்றவாளிகளை’ கைது செய்து, பிறகு உண்மையான குற்றவாளிகள் இவர்கள்தான் என்று கண்டறிந்து காவல்துறையின் ஆழ்ந்த புலன் விசாரணைக்குப்பின், காஞ்சி மடாதிபதிகள் சங்கராச்சாரியார் ஜெயேந்திரரும், அவரது அடுத்த சீடரான விஜேயேந்திரரும், இதில் குற்றவாளி ஒன்று, குற்றவாளி இரண்டு என்று கைது செய்யப்பட்டு மற்றும் பலருமாக 25 பேர்மீது குற்றப் பத்திரிக்கை தரப்பட்டது.
கொலைக் குற்றத்திற்காக, இந்த இரண்டு சங்கராச்சாரியார்களும் சிறையில் சில காலம் இருந்து, பிணையில் (ஜாமீனில்) வெளி வந்தனர்!
இந்து  அறநிலையப் பாதுகாப்புத்துறை, மடங்களையும் கோயில்களையும் கண்காணிக்கும் துறை என்ற நிலையில், இவ்விருவரும் மடாலயப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்; அது ஏனோ நடைபெறவில்லை!


வழக்கினை தமிழ்நாடு நீதிமன்றங்கள் விசாரிக்கக் கூடாது; வேறு மாநிலத்தில் விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்து, அதன் தீர்ப்புப்படி புதுவை நீதிமன்றம் விசாரித்தது.

புதுவையில் வழக்கு நடக்கும்போதே தொலைபேசியில் அந்த நீதிபதியை அழைத்து, ஜெயேந்திரர் பேசியதாக ஒலி நாடாவை வைத்து அதற்குத் தனி விசாரணை நடைபெற்றது; அப்போது விசாரித்த நீதிபதி இராமசாமி என்பவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு நீதிபதி (செஷனில்) வந்து வழக்கை நடத்தினார்.
இந்த விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று பொது மக்களிடையே பரவலாகப் பேசப்படும் செய்தியாகும்; அந்த ஒலி நாடா பேச்சு சரியாகக் கேட்கவில்லை; ஆகவே அதைத் தள்ளுபடி என்ற  செய்தி; அது பூசி மெழுகப்பட்ட நிலையில் இணையதளங்களில் ஒலிக்கும் அதே நாடா எப்படி துல்லியமாகக் கேட்கிறது என்ற கேள்வியும் ஒரு சிக்கலான கேள்வியாகும்.
இது ஒருபுறம் இருக்க, வழக்கில் 81 சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்கள் (Hostile Witness)  ஆகியுள்ளனர்.
அப்ரூவர் ரவிசுப்ரமணியன் என்பவரே பல்டி அடித்துள்ளார்.
இப்படி ஒரு பிறழ்சாட்சியம் துவங்கும்போதே, அரசு அவர்மீது குற்ற நடவடிக்கை எடுத்து வழக்குப் போட்டு நீதிமன்றங்களில் நிறுத்தியிருந்தால், ஏனைய பிறழ் சாட்சியங்கள் ‘தொடர் கதையாக’ ஆகியிருக்காது!
ஏனோ காவல் துறை அதிகாரிகள் கண்டும் காணாமற் இருந்தார்கள்? அரசின் முக்கிய பொறுப்பாளரின் கண் ஜாடையோ, அல்லது ஏதோ காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது சட்டவட்டாரங்களில் பேசப்படுகின்றது.
இத்தீர்ப்பில் குற்றஞ்சாட்டப் பெற்ற அத்துணைப் பேரும் விடுதலை செய்யப்பட்டனர்!
இந்த இரண்டு சங்கராச்சாரியார்கள் இப்படி ஒரு விசித்திர தீர்ப்பைப் பெற்ற  விசித்திர வழக்காக இது கருதப்படுகிறது. உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டிய அவசரக் கடமை தமிழக அரசிற்கு உண்டு.
கொலைக் குற்றம் செய்தோர் என்று குற்ற ஆய்வில் கண்டறிந்ததற்குப் போதிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
துவக்கத்தில் கைது செய்ய ஆந்திராவிற்குப் போன காவல்துறை அதிகாரிகளிடமே பேரம் நடந்தது என்றெல்லாம்கூட செய்திகள் கசிந்தன.  துணிந்து அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, நீதியை நிலைநாட்ட துணிந்து இந்த இருவரையும் கைது செய்ததன் மூலம் அவரது துணிச்சலுக்காக பெருமை பெற்றவராக ஆனார். நாமும் பாராட்டினோம். நாடு தழுவிய அளவில் பிரச்சாரம் செய்தோம். பெரிய இடத்து சிபாரிசுகளுக்குக்கூட முதல்வர் இணங்காமல் அப்போது நீதி வெல்ல வேண்டும் என்று நின்றார்!
இப்போதும் அவரே முதல் அமைச்சர் என்ற நிலையில் இவ்வழக்கில் இப்படி நீதி, கேலிக் கூத்தாவதைப் பார்த்து முதலமைச்சர் சும்மா இருக்கலாமா? உடனடியாக மேல் முறையீட்டினைச் (அப்பீல்) செய்ய சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு அவசர கதியில் ஆணை பிறப்பித்து, தனிக் குழுவை அமைத்து, நடவடிக்கையைத் தொடர வேண்டும் என்று நாடே எதிர்பார்க்கிறது. நமது வேண்டுகோளும் அதுவே!
தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு...
‘நக்கீரன்’ வாரம் இருமுறை ஏட்டில் வெளிவந்துள்ள ஒரு செய்தியை தமிழக அரசின் முக்கிய பார்வைக்கு வைக்கிறோம்:
“புதுச்சேரி கோர்ட்டில் அரசு வக்கீலாக ஆஜரான தேவதாஸ், காஞ்சீபுரம் சி.பி.சி.அய்.டி. டி.எஸ்.பி.க்கு ஒரு லெட்டர் எழுதியிருக்காரு. அதில், சங்கரராமன் கேஸ் அப்பீலுக்கு தகுதியான கேஸ்னு 7 பாயிண்ட்டுகளை சுட்டிக்காட்டியிருக்காரு
1. அப்ரூவர் ரவிசுப்ரமணியம் பல்டி சாட்சியானதால் அது சம்பந்தமா தனி வழக்கத் தொடுத்து விசாரிக்கணும். ஆனா, அவரை வழக்கிலிருந்தே விடுதலை செஞ்சிருக்காரு நீதிபதி முருகன். இந்திய சட்ட வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லையாம். மறுவிசாரணை நடத்த இந்த பாயிண்ட்டே போதும்.

2. சங்கரராமனுக்கும், ஜெயேந்திரருக்கும் முன்விரோதம் இல்லைன்னு நீதிபதிதன் தீர்ப்பில் சொல்லியிருக்காரு, ஆனா, சோமசேகர கனபாடிகள்ங்கிற பேரில் ஜெயேந்திரருக்கு எதிரா எழுதப்பட்ட லெட்டர்களெல்லாம் சங்கரராமன் தன் கைப்பட எழுதியதுதான்னு கையெழுத்து நிபுணர்கள் அளித்த சாட்சியத்தை நீதிபதி கவனத்தில் எடுத்துக்கலை.

3. இந்த வழக்கில் பல்டி சாட்சியான பலரும் ஏற்கெனவே ஒரு நீதிபதி முன்பு 164 ஸ்டேட்மெண்ட் கொடுத்தவர்கள்தான்; அதை அப்படியே நீதிபதி முருகன் நிராகரிச்சிருக்காரு.

4. காஞ்சி மாஜிஸ்டிரேட் முன்பாக நடந்த அணிவகுப்பில் கொலையாளிகளை சங்கரராமன் குடும்பத்தினர் அடையாளம் காட்டியதையும் அவர் கவனத்தில் எடுத்துக்கலை.”
“மற்ற பாயிண்ட்டுகள்?”

“பாயிண்ட் 5. கொலை நடந்தபோது சிறையில் இருந்த ஒருவன், ஜெயேந்திரரின் தூண்டுதலால்தான் போலி குற்றவாளியாக சரணடைந்தான் என அரசுத் தரப்பு நிரூபித்திருப்பதும் நீதிபதியின் தீர்ப்பில் இடம் பெறலை.

6. ஜாமீன் கொடுத்தபோது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை விசாரணை நீதிமன்றம் அப்படியே எடுத்துக்கக்கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட்டே சொல்லியிருந்தும், ஜெயேந்திரர் கொலைக்கான சதித் திட்டத்தை தீட்டினாருங்கிறதுக்கு  முகாந்திரம் இல்லைன்னு அப்படியே எடுத்துக் கொண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்குது.

7. கொலைக்காக 5 லட்ச ரூபாய் மடத்திலிருந்து கொடுக்கப்பட்டிருப்பதையும் அதில் ஒரு லட்சத்தை ஜெயேந்திரரே கொடுத்திருக்கிறார்னு அரசுத் தரப்பு நிரூபித்த ஆதாரங்களும் ஏற்கப்படலை. இதெல்லாம் அந்த லெட்டரில் சொல்லப்பட்டிருக்குது. அது அப்படியே சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.க்குப் போக, அவர் அதை சி.எம். அலுவலகத்துக்கு அனுப்பிட்டாரு”
(‘நக்கீரன்’ 7.12.2013)
சட்டப்படி சம்பவம் நடந்தது, விசாரித்தது, எல்லாம் தமிழக அரசும் காவல்துறையும்தான்;

விசாரணை நீதிமன்றம் புதுச்சேரியாக இருப்பதால் அந்த அரசுக்கே மேல் முறையீடு செய்ய உரிமை என்ற சட்ட வியாக்யானம் ஏற்கத்தக்கதல்ல.  நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டத் துறை என்று மூன்றும் தனியே வந்தபோது, புதுச்சேரி நீதிமன்றம் விசாரித்ததோடு அவர்களது, அதிகார எல்லை (Jurisdiction) முடிந்ததாகக் கொண்டு, விசாரித்து வழக்கைத் தாக்கல் செய்த அரசுக்கே மேல் முறையீட்டு உரிமையும், கடமையும் உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலைநாட்டிட, நீதி, நியாயம் நிலைக்க, தமிழக அரசும், முதல் அமைச்சரும் முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இன்றேல் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் அபாயம் ஏற்படக் கூடும்.

இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

1 கருத்து:

Unknown சொன்னது…

இந்த வழக்கு அ தி மு க ஆட்சியில் தான் சரியாக நடந்து வந்தது. தி மு க ஆட்சியில் தடம் புரன்டு சாமியார்களுக்கு விடுதலை கொடுக்க ஏதுவாகியது. கருனாநிதிக்கு மிகவும் நன்பன் அப்பு. ஜயேன்திரனுக்கும் சன்கரராமனைக் கொலை செய்ய உதவிய நன்பன் அப்பு. ஆகவே நன்பன் அப்புவைக் காப்பாற்ற வேன்டி இந்த வழக்கை திசை திருப்பியிருக்கிரார்கள் கழகக் கன்மனிகள். இந்த விஷயம் வீரமநிக்கு ஏனோ புரியவில்லை. அல்லது புரியாததுபோல் நடிக்கிராரோ?