புதன், 4 டிசம்பர், 2013

கர்நாடகாவில் போட்டியிடுகிறார் ராகுல் ! அமேதியில் புதிய நெருக்கடி

பாட்டி மற்றும் தாயைப் போல், வரும் லோக்சபா தேர்தலில், இரண்டு தொகுதிகளில் போட்டியிட, ராகுல் முடிவு செய்துள்ளார். அமேதியுடன், தென்மாநிலமான கர்நாடகாவின், ஏதாவது ஒரு தொகுதியில் ராகுலை போட்டியிட வைக்கும் ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. பா.ஜ., வியூகம்:இதுகுறித்து, டில்லியில், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த தேர்தலில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, அமேதியில் போட்டியிட்டு, ராகுல் எம்.பி.,யானார். அமேதி தொகுதியில், ராகுல், இம்முறை நின்றால், அவரை தோற்கடிக்க, பா.ஜ., புதிய வியூகம் வகுத்துள்ளது.அதன்படி, உள்ளூர் ராஜாவான, சஞ்சய் சிங் என்பவரை, ராகுலுக்கு எதிராக, பா.ஜ., வேட்பாளராக, களம் இறக்க முடிவு செய்துள்ளது.இவர், அமேதிக்கு அருகில் உள்ள, சுல்தான்பூர் லோக்சபா தொகுதியின், காங்கிரஸ், எம்.பி.,யாக உள்ளார். இவருக்கு வரும் தேர்தலில், காங்கிரஸ் சார்பில், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்படுவதால், சஞ்சய் சிங், பா.ஜ.,வுக்கு தாவ முடிவெடுத்துள்ளார்.தற்போது காங்கிரஸ் எம்.பி.,யாக இருந்தாலும், சஞ்சய் சிங், ஏற்கனவே, பா.ஜ.,வில் இருந்தவர் தான். வி.பி.சிங் போன்றவர்களுடன் இருந்த இவர், 2009ம் ஆண்டு தேர்தலின் போது தான், மீண்டும் காங்கிரசுக்கு திரும்பி, எம்.பி., யாகவும் ஆனார். இவரை, அமேதியில் நிற்க வைத்தால், ராகுலுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய நெருக்கடியை சமாளிக்கும் விதமாக, அமேதியோடு சேர்த்து, தென்மாநிலம் ஏதாவது ஒன்றிலும், ராகுலை போட்டியிட வைக்கும் முடிவில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது.காங்கிரஸ் ஆளும், கர்நாடாவில், வெற்றி வாய்ப்புள்ள ஏதாவது ஒரு தொகுதியை, ராகுலுக்காக தேர்வு செய்யும் படி, அம்மாநில கட்சித் தலைவர்களுக்கு, கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.ராகுலின் பாட்டியான, மறைந்த பிரதமர் இந்திரா, உ.பி.,யின் ரேபரேலி தொகுதியிலும், ஆந்திராவின் மேடக் தொகுதியிலும், ஒரே நேரத்தில் போட்டியிட்டவர்.

ராகுலின் தாய், சோனியாவும், ரேபரேலி, கர்நாடகாவின், பெல்லாரி தொகுதிகளில் போட்டியிட்டவர். இருவருமே, வெற்றிக்கு பின், தென்மாநில தொகுதிகளை, களைந்து, உத்தர பிரதேச தொகுதிகளை மட்டும், வைத்து, எம்.பி.,யாக நீடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- நமது டில்லி நிருபர் 

கருத்துகள் இல்லை: