வெள்ளி, 23 செப்டம்பர், 2011

சோனியாவுடன் டி.ஆர்.பாலு திடீர் சந்திப்பு

TR Baalu and Sonia
டெல்லி: அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு டெல்லி திரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக மூத்த தலைவரான டி.ஆர்.பால இன்று அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அப்போது திமுக தலைவர் கருணாநிதியின் சார்பில் சோனியாவின் உடல் நிலை குறித்து பாலு விசாரித்தார். மூத்த தலைவரான கருணாநிதியின் ஆசிர்வாதத்தைப் பெற்றதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சோனியா கூறியதாக, பாலு பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

கடந்த 8 வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்ற சோனியா அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு இந்த மாத துவக்கத்தில் தான் நாடு திரும்பினார். அவருக்கு எதற்காக அறுவை சிகிச்சை நடந்தது என்பது தெரியவில்லை.
நாடு திரும்பிய அவரை மூத்த காங்கிரஸ் தலைவர்களே இன்னும் சந்தித்துப் பேச முடியவில்லை. இந் நிலையில் இன்று அவரை பாலு சந்தித்துள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கருணாநிதியின் மகள் கனிமொழியும், திமுக முன்னாள் அமைச்சர் ராசாவும், கலைஞர் தொலைக் காட்சியின் நிர்வாக அதிகாரி சரத்குமாரும் திகார் சிறையில் உள்ள நிலையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்டம் கண்டு வருகிறது.

இதன் விளைவாகவே உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை வெட்டி விட்டது திமுக. மேலும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் தவறு செய்திருந்தால், அவர் பதவி விலக வேண்டும் என்றரீதியிலும் கருணாநிதி நேற்று கருத்துத் தெரிவித்து காங்கிரஸை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளும், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் பேச்சும் தான் தங்களது இந்த நடவடிக்கைகளுக்குக் காரணம் என்று இன்று சோனியாவிடம் பாலு விளக்கியதாகவும் தெரிகிறது.

சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய பாலு, திமுக தலைவர் கருணாநிதியின் சார்பில் சோனியா காந்தியிடம் உடல் நிலை குறித்து விசாரிக்கவே அவரை சந்தித்தேன். எங்கள் தலைவரின் சார்பில் அவர் பூரண குணமடைய வாழ்த்துத் தெரிவித்தேன். கலைஞர் போன்ற மூத்த தலைவரின் ஆசிர்வாதத்தைப் பெற்றதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சோனியா கூறினார் என்றார்.

கருத்துகள் இல்லை: