வெள்ளி, 23 செப்டம்பர், 2011

பரமக்குடி சம்பவம்: உற்சாகத்தில் தி.மு.க.,: கலக்கத்தில் அ.தி.மு.க.,

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆறு பேர் பலியானதை தொடர்ந்து, வரும் உள்ளாட்சி தேர்தலில் முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி பகுதிகளில் தி.மு.க., விற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தி.மு.க., வினர் உற்சாகத்திலும், அ.தி.மு.க.,வினர் கலக்கத்திலும் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்.,11ல் இம்மானுவேல் நினைவு தினத்தன்று சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி போலீசாரின் துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் பலியாயினர். கடந்த சட்டசபை தேர்தலின்போது தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிவாகை சூடிய அ.தி.மு.க., பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன்பு வரை முதுகுளத்தூர், பரமக்குடி, கடலாடி உட்பட மூன்று ஒன்றியங்கள், பேரூராட்சிகள் உட்பட பல இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெறும் நிலையில் இருந்தது.


ஆனால் பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு "ரிசர்வ்' பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், தாழ்த்தபட்டோர் அதிகம் வாழும் பகுதிகளில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக குஷியில் உள்ளனர். அதே நேரத்தில் அந்த பகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள், மற்ற பகுதிகளில் போட்டியிடும் அதிருப்தி வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதை முறியடித்து வெற்றி பெற சிறப்பு பிரசாரத்தில் ஈடுபட போவதாக அ.தி.மு.க., வி.ஐ.பி.,க்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். -நமது நிருபர்-

கருத்துகள் இல்லை: