சனி, 24 செப்டம்பர், 2011

Chennai விமானங்கள் மோதல் தவிர்ப்பு : 255 பயணிகள் உயிர் தப்பினர்!.

மீனம்பாக்கம்: ஜெட் ஏர்வேஸ் விமானம் ஓடுதளத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, ஏர் இந்தியா விமானம் தரையிறங்க வந்தது. சரியான நேரத்தில் பைலட் பார்த்ததால், பெரிய அளவில் நடைபெற இருந்த விமானங்கள் மோதல் தவிர்க்கப்பட்டது. 255 பயணிகள் உயிர் தப்பினர். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் இன்று காலை 9 மணியளவில் புறப்பட்டது. விமானத்தில் 147 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் உட்பட 152பேர் இருந்தனர். விமானம் ஓடு பாதையில் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, ஓடுபாதையிலே நின்றது.அதே நேரத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம் 98 பயணிகள், 5 விமான சிப்பந்திகளுடன் தரையிறங்க தயாராகிக் கொண்டிருந்தது. ஜெட் ஏர்வேஸ் ஓடுபாதையில் நின்றதை சரிவர அறிந்து கொள்ளாமல் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், ஏர் இந்தியா விமானம் தரையிறங்க அனுமதி கொடுத்து விட்டனர். விமானம் மெதுவாக தரையிறங்கி கொண்டிருந்தது. தரைமட்டத்தை நெருங்கியபோது, ஓடுபாதையில் மற்றொரு விமானம் நிற்பதை பைலட் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவசரமாக அந்த விமானத்தை மேல்நோக்கி இயக்கினார்.

விமானம் வானில் தொடர்ந்து வட்டமிட்டது. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை பைலட் தொடர்பு கொண்டு நிலையை விளக்கினார்.
இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், ஓடுபாதையில் நின்றிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். பின்னர் விமான நிலைய தள்ளுவண்டிகள் மூலமாக ஜெட் ஏர்வேஸ் விமானம், உடனே அங்கிருந்து அகற்றப்பட்டது. 20 நிமிடம் கழித்து ஏர் இந்தியா விமானம், பத்திரமாக தரை இறங்கியது.

ஏர் இந்தியா பைலட்டின் திறமையான நடவடிக்கையால் சென்னை விமான நிலையத்தில் நடக்க இருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. 255 பயணிகள் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவத்தை பற்றி முழு விசாரணை நடத்துவதற்கு டெல்லியில் உள்ள விமான நிலைய கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளன. சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் அலட்சிய போக்கே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: