சனி, 24 செப்டம்பர், 2011

விடுதலைச் சிறுத்தைகளும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு- திமுகவுக்குக் கண்டனம்

சென்னை : கூட்டணியில் இருக்கும்போதே தனித்துப் போட்டியிடுவதாக திமுக அறிவித்தது கண்டனத்துக்குரிய செயல் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறியுள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அது அறிவித்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை வேளச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார்.
இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை விவரம்:
- ராஜீவ் கொலையாளிகள் மூன்று பேரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி உயிர்நீத்த செங்கொடி, பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது.
- பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். பரமக்குடி கலவரத்தில் காவல்துறையினால் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

- உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடுவது. கூட்டணியில் இருந்து கொண்டு இருக்கும் நிலையில் எந்த ஆலோசனையும் செய்யாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து தனித்து போட்டி என்று அறிவிக்கின்ற திராவிட கட்சியின் ஏகாதிபத்திய மனப்போக்கை விடுதலை சிறுத்தைகள் கண்டிக்கிறது என்று அத்தீர்மானங்கள் தெரிவிக்கின்றன.

திமுக-அதிமுக அல்லாத மூன்றாவது அணிக்கு அழைப்பு:

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன், உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிடுகிறது.

அதே வேளையில் பாமக, மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும். ஒரே கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

திமுக, அதிமுக ஆகிய 2 பெரிய கட்சிகளும் தோழமை கட்சிகளை மதிக்காமல் மேலாதிக்க மன நிலையில் கூட்டணி கட்சிகளை புறக்கணிக்கின்றன. தேவைபடும்போது பயன்படுத்திக் கொள்வது. பின்னர் உதறி தள்ளுவதுமான போக்குகளை இந்த 2 கட்சிகளும் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன.

கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளர் பட்டியலை வெளியிடுகின்றனர். தோழமை கட்சிகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் வெளியேற்றுவது இரு திராவிட கட்சிகளும் ஏகாதிபத்திய மன நிலையை காட்டுகிறது.

திமுக- அதிமுக தங்கள் கட்சி நலன் அடிப்படையில் இது போன்ற முடிவை எடுத்து அறிவிப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நாகரீகமான முறையில் எங்களை போன்று வளர்ந்து வரும் கட்சிகளை வழியனுப்பியிருக்கலாம். அதற்கு மாறாக தனித்து போட்டி என்று அறிவித்தது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

இந்த சூழலில் பாமக, மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது ஒரு வரலாற்று தேவையாக உள்ளது. அதனால்தான் அழைப்பு விடுத்துள்ளேன். இவர்களின் பதிலுக்காக 2 நாள் காத்திருக்கிறோம். ஓரணியில் சேர வாய்ப்பு இல்லையென்றால் எங்களது வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம்.

பாமக, மதிமுக, இடதுசாரிகள் இணைந்து வரும் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மூன்றாவது வேட்பாளராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக அமைச்சரவையில் நிறைவேற்றிய தீர்மானம் ஒரு ஏமாற்று வேலையாகும். அணுமின் நிலையம் வேண்டாம் என்பதுதான் போராட்டக் குழுவின் கோரிக்கையாகும். ஆனால் மக்கள் அச்சத்தில் இருந்து விடும்படும் வரை திட்டப்பணியில் இருந்து நிறுத்தி வைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது மக்களை ஏமாற்றும் செயல் என்றார்.

கருத்துகள் இல்லை: