புதன், 18 மே, 2011

திமுகவை கழற்றிவிட இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை,உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறியுள்ளார். இதன்மூலம் திமுகவுடனான கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் தரப்பில் வேலை ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் முழு ஆசி பெற்றவரான யுவராஜா, கடந்த 2 ஆண்டுகளாக திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை காங்கிரஸ் விமர்சித்து வந்தது.

சட்டமன்றத் தேர்தலின்போது ராகுல் காந்தி மூலம் காங்கிரசுக்கு 63 சீட்டுகள் வேண்டும் என அடம் பிடித்து வாங்கியதிலும் இளைஞர் காங்கிரசுக்கு பெரும் பங்குண்டு.

இந் நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், திமுகவை கூட்டணியிலிருந்து கழற்றிவிட காங்கிரஸ் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளது.

அடுத்த மாதம் முதல்வர் ஜெயலலிதாவை டீ பார்ட்டிக்கு அழைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. அதைத் தொடர்ந்து அல்லது அதற்கு முன்பே திமுகவுடனான கூட்டணிக்கு காங்கிரஸ் முடிவு கட்டும் என்று தெரிகிறது.

அதற்கான வேலைகளும் ஆரம்பித்துவிட்டதன் அடையாளமாகவே யுவராஜாவின் பேச்சு அமைந்துள்ளது. இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தமிழக இளைஞர் காங்கிரசின் விருப்பம். எங்களுடைய விருப்பத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் தெரிவிப்போம். இருந்தாலும் இறுதி முடிவெடுப்பது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதான்.

தமிழக சட்டசபை கூட்டம் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்றத்தில் நடத்த வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். ஏன் என்றால் புதிய சட்டசபை கட்டிடம் மக்களின் வரிப் பணத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. ஆகையால் அங்கிருந்து சட்டசபை மாற்றம் செய்யக்கூடாது என்றார்.
English summary
Tamil Nadu youth congress wing leader Yuvaraja has hinted that, congress may go alone in local body elections by avoiding alliance with DMK

கருத்துகள் இல்லை: