செவ்வாய், 17 மே, 2011

4 கிராம் இலவச தங்கம்..முதல் நாளில் ஜெயலலிதா போட்ட 7 உத்தரவுகள்

முதல்வராகப் பதவி ஏற்ற ஜெயலலிதா, ஏழைப் பெண்களுக்கு 4 கிராம் இலவச தங்கம் வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார்.

தமிழகத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு ஜெயலலிதா இன்று திங்கள்கிழமை மாலை சென்றார். அங்கு முதல்வர் பொறுப்பை முறைப்படி ஏற்றார். பின்னர் கோப்புகளில் கையெழுதிட்டார்.

7 திட்டங்கள்:

அதில் முதல் உத்தரவு, படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ 25000 மற்றும் 4 கிராம் இலவச தங்கம் வழங்கப்படும் என்பதுதான்.

பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம்

மேலும் ரேஷனில் கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்திற்கு பதிலாக 20 கிலோ அரிசி இலவசம், பரம ஏழைகளுக்கு இது 35 கிலோவாக வழங்கப்படும்.

முதியோர் உதவிபெறும் பெண்களின் ஓய்வு ஊதியம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு

மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால உதவி பணம் ரூ.1,000-ல் இருந்து இரண்டாயிரம் ஆக உயர்வு

அரசு பெண் ஊழியரின் மகப்பேறு கால விடுப்பு சலுகை 6 மாதமாக உயர்வு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை

-என மொத்தம் ஏழு கோப்புகளில் கையெழுத்திட்டார்.

மலர்க்கொத்து கொடுத்து வரவேற்பு:

முன்னதாக கோட்டைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர் தலைமைச் செயலக பணியாளர்கள்.

10-ம் எண் நுழைவுவாயில் முன்பு முதல்வரின் கார் வந்து நின்றதும், தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். அதையடுத்து முதல் தளத்தில் உள்ள முதல்வர் அறைக்கு ஜெயலலிதா சென்றார்.

முதல் பணியாக 7 திட்டங்களுக்கு அனுமதி அளித்து அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, கோட்டையில் உள்ள முதல்வர் அறைக்கு வந்து முதலில் 7 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டேன்.

படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.25 ஆயிரம் நிதி உதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (அரை சவரன்) தங்கம் இலவசமாக வழங்கப்படும். அதற்கான ஆணையைப் பிறப்பித்து அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டு உள்ளேன்.

இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்க உத்தரவிட்டு அதற்கான கோப்பில் கையெழுத்திட்டேன்.

20 கிலோ இலவச அரிசி:

முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஊதியத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டேன்.

பொதுவிநியோகத் திட்டத்தில் அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவமாக வழங்கிடவும் உத்தரவிட்டு அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன்.

மீனவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை:

தமிழகத்தில் கடலோர மீன்வளத்தை பாதுகாக்க வேண்டி ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அந்த காலக்கட்டத்தில் பாதிக்கப்படும் மீனவ குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பில் கையெழுத்திட்டேன்.

அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணி பாதுகாக்க மகப்பேறு கால சலுகையாக 6 மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பில் கையெழுத்து போட்டு உள்ளேன்.

சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை:

அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் அமல்படுத்தவும், அரசின் சிறப்பு திட்டங்களை செம்மையோடு விரைந்து செயல்படுத்தவும் புதிய துறை ஒன்றை தொடங்க உத்தரவிட்டு அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன். இந்த துறை 'சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை' எனும் பெயரில் அழைக்கப்படும். இந்த துறைக்கென தனி அமைச்சரும் (வேலுமணி) நியமிக்கப்பட்டுள்ளார்," என்றார்.

கருத்துகள் இல்லை: