செவ்வாய், 17 மே, 2011

சட்டசபையை மீண்டும் கோட்டைக்கு மாற்ற வைகோ எதிர்ப்பு

சென்னை: தமிழக சட்டசபையை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.


அதிமுக கூட்டணியில் கேட்ட சீட் கிடைக்காததால், சட்டசபைத் தேர்தலைப் புறக்கணித்த மதிமுக தேர்தல் முடிந்து, அதிமுகவும் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து விட்ட நிலையில் இன்று அரசியல் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியது.

தங்களது ஆதரவே இல்லாமல் அதிமுக மாபெரும் வெற்றியடைந்தது அக் கட்சிக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மதிமுக ஒரு சக்தியே இல்லை என்ற அளவுக்கு அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

இந் நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் மதிமுகவின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழுவினர், அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் அடங்கிய கூட்டம் இன்று நடந்தது.

அதில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கட்சியினருடன் வைகோ ஆலோசனை நடத்தினார்.

இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

- இம்முறை தேர்தல் களத்தில் மதிமுக பங்கேற்காவிடினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து, மக்கள் மன்றத்தில் இடையறாத பிரச்சாரத்திலும் அறப்போரிலும் அர்ப்பணிப்போடு ஈடுபட்டது. தமிழ்நாட்டின் நலன்களையும், ஜனநாயகத்தையும், பாதுகாப்பதற்கான பாதையைச் செப்பனிட்டதில், மதிமுக தந்திட்ட அளப்பரிய பங்கு, மக்கள் மனதில் தனித்ததோர் தாக்கத்தை ஏற்படுத்தியது.

எதிர்காலத்தில், இனி அதிகார துஷ்பிரயோகத்தையும், ஊழல் பணத்தையும் கொண்டு எவரும் தேர்தலில் வெல்ல முடியாது எனும் எச்சரிக்கை தரும் சரியான பாடத்தை வாக்காளர்கள் கற்பித்துள்ளனர்.

- தமிழக அரசின் தலைமைச் செயலகமும், சட்டமன்றமும் இயங்குவதற்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களும் வளாகங்களும், அள்ளித் தெளித்த அவசர கோலத்தில் செய்யப்பட்டதும், தொடக்கத்தில் கூறப்பட்ட மதிப்பீட்டுத் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவீட்டுத் தொகை காட்டப்பட்டதும் மிகத் தவறானது.

எனினும், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட, மக்களுக்குச் சொந்தமான கட்டடங்களை நிராகரித்து விட்டு, ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே சட்டமன்றமும், தலைமைச்
செயலகமும் இயங்கிட புதிய அரசு முடிவு எடுக்குமானால், முந்தைய அரசால் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள், மேம்பாலங்கள், நீதிமன்றக் கட்டடங்கள் இவற்றையெல்லாம், புதிய அரசு பயன்படுத்தாது விட்டுவிடுமா? என்ற கேள்வி எழுகிறது.

எனவே, சட்டமன்றத்தை மாற்றுவது ஏற்பு உடையது அல்ல; மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடத்திலேயே சட்டமன்றம் தொடர்ந்து இயங்க வேண்டும்.

- விவசாயிகளின் வாழ்வு சீர்குலைந்து நொறுங்கி, விரக்தியின் விளிம்புக்கே தள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நலனைப் பாதுகாப்பதன் மூலமே, தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற முடியும். குறிப்பாக, மிகப்பெரிய கேள்விக்குறியாகி விட்ட நதிநீர் ஆதாரங்களின் உரிமையைக் காத்தல், அமைந்து உள்ள அரசின் தலையாய கடமை ஆகும்.

- முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாப்பதற்கும், புதிய அணை என்ற பெயரால், தமிழ்நாட்டுக்கு நிரந்தரக் கேடு விளைவிப்பதற்கும் திட்டமிட்ட கேரள அரசின் முயற்சிகளைச் சட்டப்படியாகவும், மத்திய அரசைத் தலையிடச் செய்வதன் மூலமாகவும், அனைத்து முயற்சிகளிலும் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை: