வியாழன், 23 செப்டம்பர், 2010

Eric Solhiem: புலம்பெயர்ந்தோர் இலங்கை அரசை சிறந்த கோணத்தில் பார்க்கவேண்டும்

புலம்பெயர்ந்தோர் இலங்கை அரசை சிறந்த கோணத்தில் பார்க்கவேண்டும்
 புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தை சிறந்த கோணத்தில் பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நோர்வே அரசாங்கத்தின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் ஹெரிக் சொல்ஹேம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதன பேச்சுவார்த்தைகளின்போது நோர்வேயின் விசேட தூதுவராக செயற்பட்ட ஹெரிக் சொல்ஹேம் நியூயோர்க்கில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை சந்தித்தபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள பாராளுமன்றத்தினூடாக ஜனநாயக வழியில் செல்வது குறித்துக் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வக்குக் கிழக்குப் பகுதிகளின் அபிவிருத்திக்கு நோர்வே அரசாங்கத்தின் உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 65ஆவது பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவென நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு அரச தலைவர்களுடன் இன்று அதிகாலை சந்திப்புக்களை நடத்தினார். ஈரான் இஸ்லாமிய இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் அஹமது நிஜாத் மற்றும் நோர்வே பிரதமர் பெனஸ் ஸ்டோல் டென்பர்க் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 65ஆவது பொதுக் கூட்டம் அதன் தலைமையகமான நிய+யோர்க்கில் நடைபெற்று வருகின்றது. நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி முதலில் கட்டார் நாட்டு அமைச்சரை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து இன்று ஈரான் இஸ்லாமிய இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் அஹமது நிஜாத்தை சந்தித்தார். அதன் பின்னர் நோர்வே பிரதமர் பெனஸ் ஸ்டோல் டென்பர்க்கை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்புக்களைத் தொடர்ந்து ஜனாதிபதி, சிறுவர் மற்றும் வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கலாநிதி ராதிகா குமாரசாமியுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார். மேலும், ஐக்கிய நாடுகளின் புத்தாயிரமாம் ஆண்டை வெற்றிகொள்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் நாளைய தினம் முதலாவதாக உரைநிகழ்த்தவுள்ளார்.

கருத்துகள் இல்லை: