சனி, 25 செப்டம்பர், 2010

Delhi 2010:சாப்பாட்டுக்கே வழியில்லாத கோடிக்கணக்கான ஏழைகள் அடுத்த வேளைக்கு என்ன செய்வது

கற்க வேண்டிய புதிய பாடம்...
அருண் நேரு
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளும் அதனுடன் சம்பந்தப்பட்ட செய்திகளும் மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டன என்றால் மிகையில்லை. இந்த விளையாட்டுக்காக மிகக் குறுகிய காலத்தில் செய்யப்பட்ட பல சாதனைகளை எல்லாம் மறக்கும் அளவுக்கு, இந்த ஏற்பாடுகளில் உள்ள குறைகளும் சில அசம்பாவிதச் சம்பவங்களும் பெரிதாகப் பேசப்படுகின்றன. தலைநிமிர்ந்து பூரிக்க வேண்டிய நாம் தலைக்குனிவுடன் பேச வேண்டிய சோகத்துக்கு ஆளாகியிருக்கிறோம்.

 புதுதில்லியில் மிகப்பெரிய விமான நிலையத்தையும் மெட்ரோ ரயில் என்கிற நவீன ரயில் போக்குவரத்தையும் சர்வதேச தரத்தில், குறிப்பிட்ட காலத்தில் நிர்மாணித்திருக்கிறோம். கட்டிலில் நாய் படுத்திருப்பதையும் கக்கூஸ் கழுவப்படாததையும் விளையாட்டரங்கின் ஒட்டுக்கூரையிலிருந்து 2 அட்டைகள் பெயர்ந்து விழுந்ததையும் பெரிதாகப் பேசி நம்முடைய மானத்தை வாங்குகின்றனர் நாக்கிலே நரம்பில்லாதவர்கள். இந்தக் கோளாறுகளுக்கெல்லாம் பொதுப்பணித்துறைதான் காரணம், இல்லையில்லை தில்லி மாநில அரசுதான் காரணம், விளையாட்டுத் துறைதான் காரணம், விளையாட்டுப் போட்டி அமைப்புக்குழுதான் காரணம் என்றெல்லாம் மாற்றிமாற்றி பழி சுமத்தப்படுகிறது.
 உண்மை என்னவென்றால், தில்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை 2010-ல் நடத்துவது என்று 2003-லேயே தீர்மானித்துவிட்டு 2008 வரையில் எதுவுமே செய்யப்படவில்லை. இந்த வேலைகள் எல்லாம் மத்திய அமைச்சர்கள் குழுவிடம் விடப்பட்டது.

 இதை யார் செய்வது, எப்படிச் செய்வது என்று அமைச்சர்கள் தங்களுக்குள் சச்சரவு செய்துகொண்டிருந்த நேரத்தில் அவை தொடர்பான கோப்புகள் தூங்கிக்கொண்டிருந்தன.

 திடீரென விழித்துக் கொண்ட அரசு, போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைகளைக் கேட்டுக்கொண்ட பிறகு, கறைபடிந்த நிர்வாக அமைப்பின் மூலம் காரியங்களைச் செய்யத் தொடங்கினர். முடிவெடுக்கத் திணறும் அமைச்சர்களின் மெத்தனங்களால் அடுத்தடுத்து தவறுகளாகவே நடக்கின்றன. இத்தனைக்குப் பிறகும் எல்லாம் நன்றாகவே இருக்கிறது, எதிலும் குறை இல்லை என்ற பதிலையே அரசிடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியும்.

 சாப்பாட்டுக்கே வழியில்லாத கோடிக்கணக்கான ஏழைகள் அடுத்த வேளைக்கு என்ன செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டிருக்கும் வேளையில் அரசுக்கு நெருக்கமான இடத்தில் இருக்கும் சிலர் கோடிக்கணக்கான ரூபாய்களைத் தண்ணீராகச் செலவழித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இந்த நிலையில் மெஹ்ரூலியில் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட விடுதிகளில் உள்ள கட்டில்களில் தெரு நாய்கள் நிம்மதியாகப் படுத்து ஓய்வெடுப்பதில் வியப்பு என்ன இருக்க முடியும்? மெஹ்ரூலிப் பகுதியில் தெரு நாய்கள் மட்டும் அல்ல மட்டக் குதிரைகள் என்று அழைக்கப்படும் கழுதைகள், மாடுகள், ஏராளமான குரங்குகள் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கும். வயதாகிவிட்ட ஒரு ஒட்டகம்கூட கவனிப்பாரில்லாமல் அங்குமிங்கும் இரைதேடி அலைந்துகொண்டே இருக்கும்.

 தில்லிக்கு அருகிலேயே இருந்தாலும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள கிராமங்கள் படும் இன்னல்கள் அனைத்தும் இந்த கிராமத்துக்கும் உண்டு. இவையெல்லாம் நாம் அறியாததா? பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் செய்தி வரும்போது மட்டும் ஏதோ புதிதாக இதையெல்லாம் கேள்விப்படுவதைப்போல நாம் ஏன் நடிக்க வேண்டும்?

எது எப்படியோ, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை முறையாகச் செய்யாமல், ஊழலுக்கும் தரம் குறைந்த வேலைகளுக்கும் மிகவும் இடம் அளித்துவிட்டோம். இதனால் அரசுக்கு கெட்ட பெயரும் பெருத்த அவமானமும் சர்வதேச அளவில் ஏற்பட்டுவிட்டது. எதைச் சொன்னாலும் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று மட்டும் ஆள்வோர்கள் நினைக்கக்கூடாது.

 99% வேலைகளை முடித்துவிட்ட நிலையில் சில குடியிருப்புகளில் குழாய்களில் தண்ணீர் வரவில்லை, கதவுகளைப் பொருத்தவில்லை, பாத்ரூம்கள்  கழுவப்படவில்லை என்பதற்காக நமக்கு அவமானம் ஏற்பட்டுவிடக்கூடாது. எஞ்சிய பணிகளை போர்க்கால அடிப்படையில் தரமாக செய்து முடிக்க வேண்டும்.

 பொதுப்பணித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியும் விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில்லும் இரவு பகல் பாராமல் விளையாட்டு கிராமத்திலேயே முகாமிட்டு எல்லாப்  பணிகளையும் நேரடியாக மேற்பார்வை செய்து முடித்தாலும் தவறில்லை.

நம்முடைய கட்டுப்பாட்டிலேயே இல்லாத இயற்கையும் சேர்ந்து சதி செய்து தில்லி மாநகரமே வரலாறு காணாத மழையாலும் வெள்ளத்தாலும் தத்தளிக்கிறது. திட்டமிட்டபடி வேலைகள் நடக்காததற்கு இதுவும் முக்கிய காரணம். வட இந்தியாவின் பல மாநிலங்களில் இப்போது காணப்படும் மழையாலும் வெள்ளத்தாலும் ஏராளமான கிராமங்களும் பெரு நகரங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

 இந்தக் கட்டுரையை எழுதும் இந்த நேரம் தில்லியில் நல்ல வெயில் அடிக்கிறது. இனி வரும் நாள்களில் மழை குறைந்து வெயில் அடித்து நிலைமை மேம்படும் என்று நம்பலாம். இந்த நேரத்தில் மழையாலும் வெள்ளத்தாலும் பாதிப்பு அடைந்தோருக்கு நம்முடைய அனுதாபங்கள்.

 விளையாட்டு கிராமத்தைச் சுத்தப்படுத்தி விளையாட்டுக்கு தயார் செய்யட்டும், விளையாட்டும் நல்லபடியாக நடந்தேறட்டும். இந்தப் போட்டிகளிலிருந்து விலகுவது என்ற முடிவுக்கு வராமல் எல்லா நாடுகளும் எல்லா வீரர்களும் இதில் பங்கேற்றுப் பரவசம் அடையட்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

 இந்த நாட்டுக்குள்ள நல்ல பெயரை ஒரு சிலர் சேர்ந்து கெடுப்பதற்கு நாம் அனுமதித்துவிடக்கூடாது. இந்தக் கோளாறுகளுக்கெல்லாம் யார் காரணம் என்று அரசியல்ரீதியாக விவாதிக்க இது தருணம் அல்ல; ஆனால் இதற்கான பொறுப்பு முழுக்க முழுக்க நாட்டின் அரசியல் தலைமையையே சாரும்.  

 கடந்த பத்தாண்டுகளில் நம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் 8% அல்லது அதற்கும் மேலாகவே இருந்து வருகிறது என்ற சாதனைகளையெல்லாம் இந்த விளையாட்டுப் போட்டிக் குளறுபடிகள் மறக்கச் செய்துவிட்டதே என்று நினைக்கும்போது கோபம் அதிகரிக்கவே செய்கிறது.

இந்த வளர்ச்சியை அடைய நம் முன்னோர்கள் எத்தகைய அடித்தளங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்? சர்வதேச அளவில் தொழில் முதலீட்டுக்கு உற்ற நாடாக இருக்கிறோம் என்பதால்தான் பல வெளிநாட்டு நிறுவனங்கள் நம்மைத் தேடி வருகின்றன; நம் நாட்டவர்கள் திறமையானவர்கள் என்பது எல்லா துறைகளிலும் சர்வதேச அளவில் இப்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது.
 இந்தப் பின்னணியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளைப் பார்ப்போம். 2008 வரை காத்திராமல் 2006-லேயே தொடங்கியிருந்தால் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே எல்லாம் தயாராக இருந்திருக்கும். எனவே இந்த அவமானத்தை நாம் அனைவரும் தாங்க வேண்டிய அவசியமே இல்லை. எனவே இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை, அது அதிகாரபீடத்தின் உச்சியில் இருப்பவர்களிடமிருந்து தொடங்கப்பட வேண்டும்.

 இந்தப் பாடத்தை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. இனி இப்படியொரு அவமானம் நம் நாட்டுக்கு எப்போதுமே ஏற்படக்கூடாது.
-Dinamani -

கருத்துகள் இல்லை: