வியாழன், 23 செப்டம்பர், 2010

சாமியார்கள் பெரியார் தொண்டர்களின் வேலையை குறைக்கிறார்கள

- வே.மதிமாறன்
ஒவ்வொரு முறையும் சாமியார்கள் பெரியார் தொண்டர்களின் வேலையை குறைக்கிறார்கள் அல்லது பெரியார் தொண்டர்களின் பேச்சுகளுக்கு ஆதாரமாக விளங்குகிறார்கள்.
பத்து மாநாடுகள், 1000 தெருக் கூட்டங்கள் நடத்தி அம்பலப்படுத்த வேண்டிய செய்தியை, தங்களின் கட்டுப்படுத்த முடியாத அல்லது கட்டுக் கடங்காத லீலைகளின் மூலம் அவர்களே அம்பலமாகிறார்கள்.
‘அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பத்தெட்டு அருவா’ என்கிற பாணியில் ஜெயெந்திரன் போன்ற கிழடுகளே, ‘நேத்து… ராத்திரி…. யம்மா…’ பாணியில் ஏகப்பட்ட பெண்களோடு உல்லாசமாக ‘இருக்கும்’ போது, இளமை ஊஞ்சலாடும் நித்தியானந்தம் போன்றவர்கள் என்ன இளிச்சவாயர்களா? ‘இளமை இதோ… இதோ…’ என்று ‘இருக்க’ மாட்டார்களா? அதான் ‘இருந்து’ ட்டாரு.
அதுக்காக பக்தர்கள், ‘இனி சாமியாரே வேண்டாம், சாமியே போதும்’ என்று ஒதுங்கிவிடுவார்களா? அப்படியிருந்தால், பிரேமானந்தாவிற்கு பிறகு சாமியார்களே தமிழகத்தில் உருவாகி இருக்க முடியாது.
ஆனாலும், இப்போதெல்லாம் முன்பைவிட அதிகமாக, வசதியாக, நவீனமாக மல்டிநேஷ்னல் கம்பெனிகளின் ‘ஆசிர்வாதம்’ பெற்ற பணக்கார சாமியார்கள் உருவாகிறார்கள். அமெரிக்காவில் ஆசிரமம் வைத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளைபோல் ‘தனககுப் பிறகு தன் மகன்’ என்று பக்தி தொழில் நடத்தி, என்ஜினியரிங் கல்லூரி நடத்தி சம்பாதிக்கிறார்கள்.
‘தர்மம் பண்ண புண்ணியம்’ என்கிற நம்பிகையையும் உடைத்து, பக்தர்களிடம் இருக்கும் பத்து ரூபாவைக்கூட நன்கொடை, செல்போன் டோக்கன், புத்தக விற்பனை என்று புடுங்கிக் கொண்டு, உள்ளே எளிய மக்களான பிச்சைக்காரர்களை கூட அனுமதிக்காமல், தங்கக் கோயில் கட்டி ‘ரிசார்ட்’ டைப்போல் கோயில்களை, மடங்களை நிர்வகிக்கிறார்கள்
இப்படி வெள்ளைக்காரனையே ஏமாற்றி சம்பாதித்த சாமியார்களும் இருக்கிறார்கள். இதில் பார்ப்பான் பார்ப்பனரல்லாதவன் என்ற பேதமில்லாமல் ஒற்றுமையாய் கொள்ளை அடிக்கிறார்கள்.
அப்படி கொள்ளையடித்து மாட்டியிருக்கிறான் ‘கல்கி பகவான்’ என்ற ஒரு ஹைடெக் சாமியார்.
எது எப்படியோ? தொடர்ந்து இந்து மதத்தை அம்பலப்படுத்தும் பிரேமானந்தா, ஜெயெந்திரன், தேவநாத குருக்கள், நிந்தியானந்தம், கல்கி போன்றவர்களுக்கு பெரியார் தொண்டன் என்கிற முறையில், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘மாட்றவரைக்கும் சாமியார், மாட்டிக்கிட்ட போலிச் சாமியார்’ என்கிற முறையில் தங்களின் பக்தியை சாமியார்களின காலடியில் தேடிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்காக…… என்ன சொல்றது?
நீங்க நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கிற சாமியாரின் லீலைகள், மோசடிகள் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். ஏன் என்றால், மோசடிகளும், லீலைகளும் செய்யாத சாமியார் எவனும் கிடையாது.

கருத்துகள் இல்லை: