வெள்ளி, 23 செப்டம்பர், 2022

வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் ரஷ்ய மக்கள்... 18-65 வயதுடைய ஆண்களுக்கு டிக்கெட் விற்பனையை நிறுத்திய ரஷிய.

dailythanthi : மாஸ்கோ:  உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக, 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் ராணுவத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றிய அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பொதுமக்கள் பேரணி, போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போர் வேண்டாம். உடனே நிறுத்துங்கள் என்று கோஷங்களை எழுப்பினர். போலீசார் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து போராடுவோர் கைது செய்யப்படுகின்றனர். நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.இதற்கிடையே ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு ரஷியாவில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர். போரில் ஈடுபட விரும்பாத மக்கள் நாட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். ரஷியாவில் இருந்து புறப்படும் விமானங்கள் இந்த வாரம் முழுவதுமாக கிட்டத்தட்ட முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ராணுவச் சட்டம் விதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், ரஷிய விமான நிறுவனங்கள் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட (போருக்கு தகுதியான வயது) ரஷிய ஆண்களுக்கு டிக்கெட் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற்ற இளைஞர்கள் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று ஃபார்ச்சூன் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனின் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் மாகாணங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்து ரஷிய பிரதேசமாக மாற்ற, அதிபர் புதினுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், இந்த வார இறுதியில் இரண்டு மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை: