வியாழன், 26 டிசம்பர், 2019

மூடநம்பிக்கையில் குழந்தைகளைப் புதைத்த பெற்றோர்கள்... சூரிய கிரகணமாம்

 மூடநம்பிக்கையில் குழந்தைகளைப் புதைத்த பெற்றோர்கள்!மின்னம்பலம் : சூரிய கிரகணத்தின் போது, 10 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனர். மூட நம்பிக்கையால் இவ்வாறு செய்ததற்கு சமூக ஆர்வலர் உட்படப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அரிய வகை நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது இந்நிகழ்வு ஏற்படுகிறது. இன்று காலை 8 மணி தொடங்கி 11.20 வரை தோன்றியது. இதனை பொது மக்கள் சூரிய கண்ணாடி அணிந்து ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். ஒரு சில இடங்களில் மேகமூட்டம் இருந்ததால் அதைக் காண வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இச்சமயத்தில் சில நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன. 8 மணிக்கு முன்பாக சாப்பிட வேண்டும். வெளியில் பயணம் செய்யக் கூடாது. இந்த இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனப் பல தகவல்களைப் பரப்பினர்.

இதனிடையே சூரிய கிரகணத்தின் போது கர்நாடகாவில் மூன்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனர். கல்புர்கி பகுதியில் உள்ள தாஜ்சுல்தான்புர் என்னும் இடத்தில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கழுத்துவரை மண்ணிலும், ஆட்டு சாணத்தாலும் புதைக்கப்பட்டனர். இப்படிச் செய்தால், குழந்தைகளுக்குத் தோல் நோய் ஏற்படாது , உடல் ஊனம் சரியாகிவிடும் என்று கூறியதையடுத்து குழந்தைகளின் தாய்மார்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
மண்ணில் புதைக்கப்பட்டதை அடுத்து சஞ்சனா(4), பூஜா(6), காவேரி (10) ஆகிய 3 குழந்தைகளும் கதறி அழுது துவண்டுள்ளனர். இதில் நான்கு வயதுக் குழந்தை மயங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சமூக ஆர்வலர்கள் குழந்தைகளை மண்ணிலிருந்து வெளியே எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
குழந்தைகள் புதைக்கப்பட்டது குறித்து கல்புர்கி துணை ஆணையர் சரத் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து வட்டாட்சியரைச் சம்பவ இடத்துக்கு அனுப்பிய துணை ஆணையர் குழந்தைகளை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளார். கல்புர்கி மட்டுமின்றி ஐனோளி கிராமத்திலும் குழந்தைகள் மண்ணில் புதைக்கப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் ஆணையர் சரத் தெரிவித்துள்ளார்.
கல்புர்கியில் தர்கா என்ற பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற மூடநம்பிக்கையான நடைமுறை இருந்ததாகவும், போலீசார் மேற்கொண்ட விழிப்புணர்வின் காரணமாக அவை நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பழக்கம் மீண்டும் தொடங்கியிருக்கிறது.
குல்பர்கா மருத்துவ ஆராய்ச்சி மையத்தின், குழந்தைகள் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் சந்தீப் , இந்த நடைமுறை ஒரு குருட்டு நம்பிக்கை என்றும், இது உடல் ரீதியாகக் குழந்தைகளை மோசமாகப் பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: